வரும் 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தயார் செய்யும் பணிகளைத் தொடங்கிவிட்டது மத்திய நிதி அமைச்சகம். துறை வாரியாக அழைத்து பேசத் தொடங்கிவிட்டார்கள் அரசு தரப்பினர்கள்.
தங்கள் பட்ஜெட்டில் என்ன எல்லாம் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும், தனியார் மற்றும் கார்பப்ரேட் நிறுவனங்களின் கோரிக்கைகள் என்ன என்பதை விவாதிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
அப்படி டெலிகாம் துறைக்கான கூட்டம் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. இதுவரை தன் நிறுவனத்தைப் பற்ரி மட்டுமே பேசி வந்தவர், இப்போது ஒட்டு மொத்த டெலிகம துறையையும் ஒன்றாகச் சேர்த்துப் பேசத் தொடங்கி இருக்கிறார். இந்த கூட்டம் முடிந்த பின், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல் ஒரு அதிர வைக்கும் கருத்தைச் சொல்லி இருக்கிறார்.
ஏர்டெல் தலைவர்
இந்திய டெலிகாம் நிறுவனங்களின், (ARPU - Average Revenue Per User) ஒரு பயனரிடம் இருந்து வரும் வருவாய், 300 ரூபாய் அல்லது நான்கு அமெரிக்க டாலரைத் தொட வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். அப்போது தான் இந்திய டெலிகாம் நிறுவனங்களின் நிதி நிலை மேம்படும் எனச் சொல்லி இருக்கிறார்.
இந்தியா தான் சீப்
அப்படியே ஒரு பயனரிடம் இருந்து வரும் வருவாய் (ARPU), மாதம் 300 ரூபாயைத் தொட்டாலும், அப்போதும், உலகிலேயே, இந்தியா தான் மலிவு விலையில் டெலிகாம் சேவைகளை வழங்கும் நாடாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுச் சொல்லி, நம் வயிற்றில் ஒரு கிலோ புளியைக் கரைத்து இருக்கிறார்.
அதென்ன ARPU
ஒரு டெலிகாம் நிறுவனத்துக்கு ஒரு மாதத்தில் வரும் மொத்த வருவாயை, மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைக் கொண்டு கழித்தால் கிடைப்பது தான் ARPU. உதாரணம் ஏர்டெல்லுக்கு கடந்த நவம்பரில் 100 ரூபாய் வருவாய் வந்திருக்கிறது. அவர்களின் மொத்த வாடிக்கையாளர்கள் 25 பேர் என்றால், 100 / 25 = 4. ஆக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து 4 ரூபாய் வந்திருக்கிறது என்று பொருள்.
இப்போதைய நிலை
கடந்த செப்டம்பர் 2019 காலாண்டு நிலவரப்படி, ஏர்டெல் நிறுவனத்தின் (ARPU) ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வரும் வருவாய் 128 ரூபாயாக இருக்கிறது. அதே செப்டம்பர் காலாண்டில் ஜியோவின் (ARPU) 120 ரூபாயாக இருக்கிறது. ஜூன் 2019 காலாண்டில் வொடாபோன் ஐடியாவின் (ARPU) 107 ரூபாயாக இருக்கிறது. இதைத் தான் 300 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனச் சொல்கிறார் ஏர்டெல் தலைவர்.
ஐடியா
இப்படி, இந்திய டெலிகாம் நிறுவனங்களின் ஏ ஆர் பி யூ-வை அதிகரிக்க, டிராய் (TRAI - Telecom Regulatory Authority of India) அமைப்பு, தலையிட்டு, டெலிகாம் சேவைகளுக்கு ஒரு அடிப்படை விலையை நிர்ணயிக்க வேண்டும், எனச் சொல்லி இருக்கிறார் ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல்.
அடிப்படை விலை
அடிப்படை விலை என்றால் என்ன..? ஒரு பொருளை ஒரு குறிப்பிட்ட விலைக்கு கீழ் வைத்து விற்கக் கூடாது என அரசு அமைப்பு உத்தரவிட்டால், அது தான் அடிப்படை விலை. இப்படி ஒரு பொருளுக்கு அடிப்படை விலையை நிர்ணயித்து விட்டால், அந்த விலைக்குக் கீழ் எந்த ஒரு நிறுவனமும் தன் பொருளை போட்டி போட்டு குறைந்த விலைக்கு விற்க முடியாது.
டெலிகாம் உதாரணம்
எடுத்துக்காட்டு: 28 நாட்களுக்கு இலவச வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ் எம் எஸ், தினமும் 1 ஜிபி டேட்டா திட்டத்தை இனி எந்த நிறுவனமும் 200 ரூபாய்க்குக் கீழ் கொடுக்கக் கூடாது என டிராய் சொன்னால்... இந்த திட்டத்துக்கு 200 ரூபாய் தான் அடிப்படை விலை. ஆக இனி ஜியோ போல ஒரு நிறுவனம் தடாலடியாக உள்ளே வந்து மலிவு விலையில் டெலிகாம் சேவைகளை வழங்க முடியாது.
கணக்கு
மேலும் பேசிய சுனில் மிட்டல், இந்தியாவில் குறைந்த அளவுக்கு டெலிகாம் சேவையைப் பயன்படுத்துபவர்கள் மாதம் 100 ரூபாயும், அதிகம் டெலிகாம் சேவையைப் பயன்படுத்துபவர்கள் 450 - 500 ரூபாய் செலவழிக்கிறார்கள். உலக அளவில் ஒப்பிடும் போது, இந்திய வாடிக்கையாளர்கள், கொடுக்கும் காசை விட 2 - 3 மடங்கு கூடுதல் டேட்டாவை பயன்படுத்துவதாகச் சொல்கிறார். இதிலும் சுனில் மித்தலின் வருத்தத்தை உணர முடிகிறது.
நம்ம கணக்கு
மேலே சொன்னது போல, இந்தியாவில் எந்த ஒரு டெலிகாம் நிறுவனத்தின் ஏ ஆர் பி யூ-வும் 150 ரூபாயைக் கூடத் தொடவில்லை. இப்போது ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல் சொல்வது போல, ஏ ஆர் பி யூவை 300 ரூபாயைத் தொட வேண்டும் என்றால் காலப் போக்கில், இரண்டு மடங்கு விலை ஏற்றினால் தானே அதைப் பற்றி யோசிக்க முடியும். ஆக விலை ஏற்றம் எந்த நேரத்திலும் வரலாம்.
நாம காலி தான்
ஆக, செல்ஃபோன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதம் 300 ரூபாயை வசூலிக்க, வொடாபோன் ஐடியா, ஜியோ, ஏர்டெல் என அனைவரும் கை கோர்த்து விடுவார்களோ என்று தான் தோன்றுகிறது. அதன் முதல் படி தான் இந்த அடிப்படை விலையை நிர்ணயிக்கச் சொல்லிக் கேட்கும் கோரிக்கை. இதுவரை அடிப்படை விலை நிர்ணயிப்பதை எதிர்த்து எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காசு
அது சரி, காசு பார்க்கலாம் என்றால் தனியார் கம்பெனிகளுக்கு கசக்குமா என்ன..? அப்படி இந்திய டெலிகாம் நிறுவனங்கள் எல்லாம், ஒன்றாக கை கோர்த்துவிட்டால், நம் பாக்கெட்டை கிழி கிழி என கிழித்துவிடுவார்கள். எனவே மக்களே, 1100 பட்டன் செல்ஃபோன் தொடங்கி ஆப்பிள் ஐஃபோன் 11 ப்ரோ வைத்திருப்பவர்கள் வரை இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் செலுத்த மனதை தயார்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்து, இன்னொரு விலை ஏற்றம் காத்திருக்கிறது.