டெல்லி: ஏர்டெல் நிறுவனம் அதன் ஆவணங்களின் படி சுயமதிப்பீடு செய்து ஏஜிஆர் தொடர்பான மொத்தமாக செலுத்த வேண்டிய தொகையாக 13,000 கோடி ரூபாயினை செலுத்திவிட்டது என்று பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மித்தல் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையானது ஏஜிஆர் நிலுவையை செலுத்துவதற்காக நீதிமன்றம் விதித்த காலக்கெடு, இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில் வந்துள்ளது.
கடந்த புதன்கிழமையன்று தொலைத்தொடர்பு துறை செயலாளர் அன்ஷூ பிரகாஷ் உடனான சந்திப்புக்கு பிறகு, மீதமுள்ள நிலுவைத் தொகையை தொலைத்தொடர்பு துறைக்கு செலுத்துமாறு அறிவித்த அறிவிப்புக்கு பதில் அளிக்குமாறு கூறியுள்ளார்.
சுயமதிப்பீடு செய்து நிலுவையை செலுத்தியுள்ளோம்
தொலைத்தொடர்பு துறை முழுத் தொகையையும் செலுத்துமாறு கேட்டது. நாங்கள் முழுவதும் செலுத்தியுள்ளோம். நாங்கள் எங்களது முழு நிலுவையையும் செலுத்தியுள்ளோம். அரசாங்கத்தால் கணக்கிடப்பட்ட 35,000 கோடி ரூபாயை விட கட்டணம் குறைவாக இருப்பதால், அதற்கு எதிராக நாங்கள் இல்லை. எங்களை சுயமதிப்பீடு செய்ய சொன்னார்கள். நாங்கள் சுயமதிப்பீடு செய்து பணம் செலுத்தியுள்ளோம் என்றும் சுனில் கூறியுள்ளார்.
நிலுவையை செலுத்தியுள்ளோம்
மேலும் நாங்கள் துறையின் அறிவுறுத்தலின் படி பணம் செலுத்தியுள்ளோம். உச்ச நீதிமன்றம் எந்த குறிப்பிட்ட தொகையையும் குறிப்பிடவில்லை என்றும் மித்தல் கூறியுள்ளார். மேலும் அரசு கடந்த மார்ச் 4ம் தேதி பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் நிலுவையை செலுத்த கூறியது.
எவ்வளவு நிலுவை
இதற்கு பதில் அளிக்கும் விதமாக பார்தி ஏர்டெல் நிறுவனம் இரண்டு தவணைகளாக ஏர்டெல் நிறுவனம் 13,004 கோடி ரூபாய் நிலுவையினையும், இது தவிர ஹெச்ஓசி பேமென்ட் 5,000 கொடி ரூபாயும் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அரசு தரப்பில் ஏர்டெல் நிலுவை தொகையாக 35,586.01 கோடி ரூபாயாக கணக்கிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் நிலுவை
இந்த நிலுவையில் வோடப்போன் ஐடியா தனது சுயமதிப்பீட்டின் படி 21,533 கோடி ரூபாய் நிலுவை செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் வோடபோன் நிறுவனம் இதுவரை 3,500 கோடி ரூபாயினை செலுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே போல் டாடா நிறுவனம் 2,000 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
செலுத்திய மொத்த நிலுவை
இது தவிர 2014ல் வாங்கிய அலைகற்றைக்கென ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம், ஜியோ நிறுவனங்கள் 6,046 கோடி ரூபாய் தொகையினை சில தினங்களுக்கு முன்பு செலுத்தியுள்ளன. அந்த வகையில் தொலைத் தொடர்பு துறைக்கு கடந்த ஒரு மாதத்துக்குள் மட்டும் 32,000 கோடி ரூபாய் நிலுவை செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.