இந்தியாவின் டெலிகாம் துறை முழுக்க ஒரு நிலையற்ற தன்மை நிலவிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையற்ற தன்மைக்கு, ரிலையன்ஸ் ஜியோவின் வருகையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது. அதோடு உச்ச நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினால், இந்திய டெலிகாம் துறையில் இருக்கும் அழுத்தம் இன்னும் அதிகரித்துவிட்டது அல்லது அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
இதன் விளைவாக, ஏர்டெல் சுமாராக 23,000 கோடி ரூபாயை கடந்த செப்டம்பர் 2019-ல் நஷ்டக் கணக்கு காட்டி இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் மட்டும், ஏர்டெல் நிறுவனம், அரசுக்கு சுமாராக 28,000 கோடி ரூபாய் லைசென்ஸ் கட்டணமாக செலுத்த வேண்டி இருக்கிறது.
ஏற்கனவே கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கும் ஏர்டெல் நிறுவனத்தால் எப்படி இத்தனை பெரிய தொகையைச் செலுத்த முடியும். அதோடு அரசும், டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய தொகைக்கு விலக்கு அளிப்பது அல்லது செலுத்த வேண்டிய காலக் கெடுவை நீட்டிப்பது போன்ற எந்த ஒரு நல்ல விசயத்தையும் செய்யவில்லை. எனவே எப்படியும் இந்த தொகையை அடைத்தே தீர வேண்டும் என்கிற முடிவுக்கு வந்துவிட்டது போல ஏர்டெல்.
எனவே வரும் டிசம்பர் 04, 2019 அன்று ஏர்டெல் இயக்குநர் குழு, 3 பில்லியன் டாலர் தொகையை திரட்டுவது குறித்து பேச இருப்பதாக, ஏர்டெல் நிறுவனமே, பங்குச் சந்தைகளுக்குச் சொல்லி இருக்கிறார்கள்.
கூடுதலாக பங்குகளை வெளியிடுவது, கடன் பத்திரங்களை வெளியிடுவது, வெளிநாட்டு கரன்ஸி மாற்றத்தக்க கடன் பத்திரங்களை வெளியிடுவது (Foreign Currency Convertible Bonds) என தங்கள் முன் இருக்கும் அனைத்து வழிமுறைகளையும், இந்த இயக்குநர் குழு கூட்டத்தின் போது ஆலோசிக்க இருக்கிறார்களாம். இப்படி திரட்ட இருக்கும் 3 பில்லியன் டாலரில் ஒரு கணிசமான பகுதி பணத்தைப் பயன்படுத்தி, அரசுக்கு செலுத்த வேண்டிய லைசென்ஸ் பாக்கித் தொகை (உச்ச நீதிமன்ற தீர்ப்பு) செலுத்த இருக்கிறார்களாம்.
சமீபத்தில், டெலிகாம் துறையில் ஏற்பட்டு இருக்கும் அழுத்தத்தை தாங்க முடியாமல் ஏர்டெல், வொடாபோன் ஐடியா, ஜியோ என அனைத்து முன்னணி இந்திய டெலிகாம் நிறுவனங்களும், ரீசார்ஜ் விலையை அதிகரிக்க இருப்பதும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.