கடந்த அக்டோபர் 2019-ல் உச்ச நீதிமன்றம், இந்திய டெலிகாம் நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் டெலிகாம் துறைக்கு இடையே நடந்த AGR கணக்கீடு வழக்கில், மத்திய அரசின் டெலிகாம் துறைக்கு சாதகமாகத் தீர்ப்பு அளித்தது.
இதனால் சுனில் மித்தல் தலைமையின் கீழ் இயங்கும் பார்தி ஏர்டெல் நிறுவனம் சுமாராக 35,000 கோடி ரூபாயை, மத்திய அரசின் டெலிகாம் துறைக்குச் செலுத்த வேண்டி வந்தது. இந்த 35,000 கோடி ரூபாயில் முதல் கட்டமாக, ஏர்டெல் 10,000 கோடி ரூபாயைச் செலுத்தியது.
இப்போது மீண்டும் இரண்டாவது தவணையாக 8,004 கோடி ரூபாயைச் செலுத்தி இருக்கிறது. ஆக மொத்தம் 35,000 கோடி ரூபாயில் பார்தி ஏர்டெல் 18,004 கோடி ரூபாயைச் செலுத்தி இருக்கிறது.
டெலிகாம் துறைக்குச் செலுத்திய தவணைத் தொகையினை பார்தி ஏர்டெல் நிறுவனம் இரண்டாகப் பிரித்து இருக்கிறது.
1. 3,004 கோடி ரூபாய் முழு மற்றும் ஃபைனல் செட்டில்மெண்டாகச் சொல்லி இருக்கிறது. மீதி இருக்கும் 5,000 கோடி ரூபாயும் அட் ஹாக் பேமெண்ட்டாகத் தான் சொல்லி இருக்கிறார்கள்.
2. 10,000 கோடி ரூபாய் அட் ஹாக் தொகையாகச் செலுத்தி இருப்பதாக, ஒரு ரெகுலேட்டரி ஃபைலிங்கில் சொல்லி இருக்கிறது ஏர்டெல்.
இந்த அட் ஹாக் பேமெண்ட் subject to subsequent refund or adjustment என்கிற வார்த்தையையும் சேர்த்து இருக்கிறார்கள்.
அதோடு, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஒரு சுய மதிப்பீட்டையும் கணக்கிட்டு, மத்திய அரசின் டெலிகாம் துறையிடம் கொடுத்து இருக்கிறார்களாம்.
யார் தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி ஒழுங்காக தன் தொகையினை முழுமையாகச் செலுத்தி இருக்கிறார்கள் என்று பார்த்தால், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தான் முதல் நல்ல பிள்ளையாகச் செலுத்தி இருக்கிறார்கள். மொத்தம் 195 கோடி ரூபாயையும் நறுக்கெனச் செலுத்தி இருக்கிறார்களாம்.
இருப்பதிலேயே அதிக சிரமத்தில் இருக்கும் கம்பெனி என்றால், அது நம் வொடாபோன் ஐடியா தான். இவர்கள் மொத்தம் சுமாராக 57,000 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டுமாம். ஆனால் இது வரை மொத்தம் 3,500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இன்னும் இந்திய டெலிகாம் துறை என்ன மாதிரியான சவால்களைச் சந்திக்க வேண்டுமோ தெரியவில்லை.