டெல்லி: ஒரு டெலிகாம் நிறுவனத்தில் எத்தனை வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைத் பொறுத்து தான், அது பெரிய நிறுவனமா அல்லது சின்ன நிறுவனமா என முடிவு செய்வார்கள்.
இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு காலத்தில் ஏர்டெல் யாரும் தொட முடியாத உச்சத்தில் அதிக வாடிக்கையாளர்களை வைத்துக் கொண்டு, தனிக் காட்டு ராஜாவாக வாழ்ந்து வந்தது.
இது எல்லாம் ஜியோவின் வரவு வரை தான். ஜியோ வந்த பின், இந்திய டெலிகாம் சந்தையே தலை கீழாகிப் போனது. சரி தற்போதைய வாடிக்கையாளர் எண்களுக்கு வருவோம்.
அக்டோபர் 2019
இந்த அக்டோபர் 2019-ல் மட்டும், புதிதாக 20.3 மில்லியன் (2.03 கோடி) வாடிக்கையாளர்கள் புதிதாக செல்போன் பயன்பாட்டாளர்கள் வந்திருப்பதாக எம்கே (Emkay) என்கிற ஆராய்ச்சி நிறுவனம் தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. எம் கே நிறுவனம், தன் தரவுகளை, டிராய் அமைப்பின் அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரித்து இருக்கிறார்களாம்.
நான் தான் ராஜா
இந்த 20.3 மில்லியன் (2.03 கோடி) வாடிக்கையாளர்களில் 14.4 மில்லியன் (1.44 கோடி) வாடிக்கையாளர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமே சோலோவாக வளைத்துப் போட்டு இருக்கிறார்களாம். ரிலையன்ஸ் ஜியோ மட்டும் அசுரத் தனமாக வாடிக்கையாளர்களை வளைத்ததற்கு தீபாவளி சமயத்தில் 699 ரூபாய்க்கு ஜியோ ஃபோன் கொடுத்ததைக் சுட்டிக் காட்டுகிறார்கள்.
மந்திரி
ரிலையன்ஸ் ஜியோவைத் தொடர்ந்து 6.8 மில்லியன் (68 லட்சம்) வாடிக்கையாளர்களை வலை வீசிப் பிடித்து இருக்கிறது சுனில் மிட்டலின் ஏர்டெல் நிறுவனம். கடந்த ஆகஸ்ட் மாதம் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பின், காஷ்மீரில் இருந்து மட்டும் ஏர்டெல்லுக்கு வாடிக்கையாளர்கள் இணைந்து கொண்டே இருக்கிறார்களாம்.
மேலும் வளரும்
கடந்த அக்டோபரில் மட்டும் 21 லட்சம் பேர் இணைந்து இருக்கிறார்களாம். இப்போது ஜம்மு அண்ட் காஷ்மீர் பகுதியில், டெலிகாம் சேவைகளான தொலைபேசி மற்றும் இணைய வசதிகளை முழுமையாக வழங்க அரசு அனுமதி கொடுத்துக் கொண்டு இருப்பதால், இன்னும் ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து ஏர்டெல் நிறுவனத்துக்கு நிறைய வாடிக்கையாளர்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறதாம்.
பாவம் வொடாபோன்
ஜியோவும், ஏர்டெல்லும் பயங்கரமாக வளர்ந்து கொண்டிருக்கும் போது, வொடாபோன் ஐடியா மட்டும் தன் 7 லட்சம் வாடிக்கையாளர்களை கடந்த அக்டோபர் 2019-ம் மாதத்தில் இழந்து இருக்கிறது. ஆக வொடாபோன் ஐடியா வாடிக்கையாளர்களை, மற்ற இரண்டு நிறுவனங்கள் பிடிப்பதோடு மட்டும் நிற்காமல், காஷ்மீர் போன்ற புதிய சந்தை வாடிக்கையாளர்களையும் பிடித்து வளர்ந்து கொண்டிருக்கின்றன.
மொத்தக் கணக்கு
இந்தியாவின் மொத்த செல்போன் வாடிக்கையாளர்கள் சந்தையில் 31.5 சதவிகித வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் மீண்டும் முதலிடத்தில் அமர்ந்து இருக்கிறது. மொத்த செல்போன் பயனர்களில் 31 சதவிகிதத்துடன் ரிலையன்ஸ் ஜியோ இரண்டாவது இடத்திலும், 30.8 சதவிகித செல்போன் வாடிக்கையாளர்களுடன் வொடாபோன் ஐடியா மூன்றாவது இடத்திலும் இருக்கின்றன.
93.3 சதவிகிதம் பேர்
ஆக இந்தியாவின் 93.3 சதவிகித செல்போன் வாடிக்கையாளர்கள், இந்த மூன்று நெட்வொர்க்குகளில் எதேனும் ஒன்றைத் தான் பயன்படுத்தி வருகிறார்கள். வொடாபோன் ஐடியாவின் வாடிக்கையாளர்கள் குறைவதைப் பார்த்தால், கூடிய விரைவில், மூன்று நிறுவனம், இரண்டு நிறுவனமாக குறைந்துவிடும் போல் தெரிகிறது. குமார மங்கலம் பிர்லா தான் எதையாவது செய்து, மீண்டும் தன் நிறுவனத்தை நிலை நாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.