இந்திய டெலிகாம் சேவை துறையில் போட்டி என்பது தற்போது வெறும் 4 முனை போட்டியாக மாறியுள்ளது, இதில் 2 நிறுவனங்களின் பங்கு சந்தையில் ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு என்பதால் ஒட்டுமொத்த வர்த்தக சந்தையும், ஜியோ மற்றும் ஏர்டெல் மத்தியில் மட்டுமே பங்கீடு செய்து போட்டிப்போட்டு வருகிறது.
இத்தகைய சூழ்நிலையில் கடந்த 2-3 வருடங்களாக கட்டண உயர்வு தொடர்பான பிரச்சனைகள் மிகப்பெரியதாக இருந்த நிலையில் தற்போது Base Plan திட்டம் சார்ந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

பொதுவாக டெலிகாம் நிறுவனங்கள் விழாக்காலம் துவங்கும் முன்பு கட்டண உயர்வுக்கான வாய்ப்புகளை ஆராயும், அதன் படி ஏர்டெல் இந்த முறை தனது பேஸ் பிளானான 299 ரூபாய் திட்டத்தை ரத்து செய்தது அதன் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. இதனால் மக்கள் கூடுதலாக செலவு செய்து 349 ரூபாய் திட்டத்தை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு உள்ளது.
ஏர்டெல்லின் ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்சம் 349 ரூபாய் தொகையை செலுத்தி தான் சேவை பெற வேண்டிய நிலைக்கு வந்துள்ளனர். இதன் மூலம் ஏர்டெல் மறைமுகமாக கட்டண உயர்வை கொண்டு வந்துள்ளது. இதேபோன்ற செயல்பாட்டை ஜியோவும் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போது, முகேஷ் அம்பானியும், அவரது மூத்த மகனுமான ஆகாஷ் அம்பானி டிவிஸ்ட் கொடுத்துள்ளனர்.
ஜியோ தனது 299 ரூபாய் அடிப்படை திட்டத்தை தொடர்ந்து நடைமுறையில் வைக்க முடிவு செய்துள்ளது. அடுத்தாக ஜியோ தனது வாடிக்கையைாளர்களை கட்டண உயர்வில் இருந்து காப்பாற்ற அளிக்கும் 300 ரூபாய் மதிப்பிலான ஜியோ ப்ரைம் மெம்பர்ஷிப் திட்டத்தையும் தொடர்கிறது.
இந்த ஜியோ ப்ரைம் என்பது வருடத்திற்கு ஒரு முறை ரீசார்ஜ் செய்யக்கூடிய திட்டம், இதை ரீசார்ஜ் செய்தால் ஜியோ வாடிக்கையாளர் தற்போதை விலை நிலையில் இருக்கும் திட்டங்களை வருடம் முழுவதும் ரீசார்ஜ் செய்துக்கொள்ள முடியும். இதனால் கட்டண உயர்வில் இருந்து தப்பிக்க அதன் வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பை வழக்குகிறது.
இதில் டிவிஸ்ட் என்னவென்றால் ஏர்டெல்-ஐ போல ஜியோவும் கட்டண உயர்வை அறிவிப்பும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் நிலைமை தற்போது மாறியுள்ளது. ஜியோ தற்போது வாடிக்கையாளர்களையும், வருமானத்தையும், லாபத்தையும் சீராக உயர்த்த வேண்டும் என் முக்கிய இலக்கை நோக்கி ஓடிக்கொண்டு இருக்கிறது.
காரணம், அம்பானி குடும்பத்தின் ரிலையன்ஸ் ஜியோ-வின் ஐபிஓ கனவு, இதேபோல் ஜியோ ஆரம்பம் முதல் குறைவான கட்டணத்தை அடிப்படையாக கொண்ட திட்டத்தையே வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைக்க முயற்சி செய்துவருகிறது. இதனால் ஏர்டெல் முறையை ஜியோ பாலோ செய்யவில்லை.
ஜியோவை போலவே வோடபோன் ஐடியாவும் தனது 299 பேஸ் பிளான் திட்டத்தை நீக்கவில்லை. 28 நாள் 1 ஜிபி டேட்டா உடன் இத்திட்டத்தை தொடர்கிறது.
தற்போது ஏர்டெல்லின் மறைமுக கட்டண உயர்வால் குறிப்பிட்ட சதவீத வாடிக்கையாளர்கள் வேறு நெட்வொர்கிற்கு மாறுவார்கள். இவர்களை ஈர்க்க வோடபோன் ஐடியா தனது கதவுகளை திறந்து வைத்துள்ளது.
ஏர்டெல்லை போல் 299 ரூபாய் திட்டத்தை Vi நீக்கினால் 2027ஆம் நிதியாண்டில் ARUP 4 ரூபாய் அதிகரிக்கும். ஆனால் இதைவிட முக்கியம் வாடிக்கையாளர்கள் என்பதால் இதை User Base உயர்த்தும் வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
மேலும் ஏர்டெல்லை விட்டு வெளியேறும் வாடிக்கையாளர்கள் ப்ரீமியம் சேவை வேண்டுமாயின் ஜியோவுக்கு செல்வார்கள், ஆனால் நிலையான சேவை போதுமென நினைக்கும் Base Plan வாடிக்கையாளர்கள் வோடபோன் ஐடியாவுக்கு வர வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இதை அடிப்படையாக கொண்டே Vi தனது 299 ரூபாய் திட்டத்தை நீக்காமல் வைத்துள்ளது.
இதேவேளையில் இந்த மாற்றங்களை உறுதி செய்ய குறைந்தது ஒரு காலாண்டு காத்திருந்து வாடிக்கையாளர்கள் மாற்றம் தொடர்பான தகவல் வாயிலாக மட்டுமே உறுதி செய்ய முடியும்.


Click it and Unblock the Notifications