ரிலையன்ஸ் ஜியோ இந்திய டெலிகாம் துறைக்கு வந்ததில் இருந்தே, ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவுக்கு இடையிலான போட்டி மிகக் கடுமையாக அதிகரித்து இருக்கிறது.
ரிலையன்ஸ் ஜியோ ஏதோ ஒரு திட்டத்தை அறிவித்து வாடிக்கையாளர்களை வளைக்கிறார்கள் என்றால், பார்தி ஏர்டெல்லும் போட்டிக்கு ஒரு திட்டத்தை களம் இறக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்போது இந்த இரு பெரும் டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி, பிராட்பேண்ட் (fiber-to-the-home - FTTH) பிரிவிலும் வந்து இருக்கிறது.
விரிவாக்கம்
இப்படி இரண்டு கம்பெனிகளும் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு பிராட்பேண்ட் திட்டங்களை வடிவமைத்துக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், பார்தி ஏர்டெல், தன்னுடைய சேவையை விரிவாக்கம் செய்யும் வேலையில் இறங்கி இருக்கிறது. தன் விரிவாக்கப் பணிகளுக்கு லோக்கல் கேபிள் ஆபரேட்டர்களுடன் சேர்ந்து வேலை செய்ய இருக்கிறார்களாம்.
லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள்
வீடுகளில் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவது எல்லாம் கேபிள் ஆபரேட்டர்களின் வேலையாம். அதற்கு வரும் வருவாயில் ஒரு பங்கை கேபிள் ஆபரேட்டர்களுக்கு வழங்குவார்களாம். ஃபைபர் கட்டமைப்புகளை பராமரிப்பதும் கேபிள் ஆபரேட்டர்களின் பொறுப்பு தானாம். வருவாய் மேலாண்மை, வாடிக்கையாளர் சேவை, ஹார்ட்வேர் எல்லாம் ஏர்டெல் நிறுவனம் பார்த்துக் கொள்வார்களாம்.
இலக்கு என்ன
பார்தி ஏர்டெல் கம்பெனி, தன் பிராட்பேண்ட் சேவையை இந்தியாவில் இருக்கும் 24 கோடி (240 மில்லியன்) குடும்பங்களில், 4 கோடி (40 மில்லியன்) குடும்பங்களைச் சென்று அடைவதை இலக்காக வைத்து இருக்கிறது. அதோடு இந்தியாவில் 1,000 நகரங்களில் தங்களின் சேவையை அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் விரிவாக்கம் செய்யவும் இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.
120 நகரங்களில் 2.6 மில்லியன் வாடிக்கையாளர்கள்
வீட்டில் பிராட்பேண்ட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, ஏர்டெல் கம்பெனிக்கு மெல்ல அதிகரித்து வருகிறது. பார்தி ஏர்டெல் நிறுவனம், தன் பிராட்பேண்ட் சேவையை 120 நகரங்களில் வழங்கி வருகிறது. தற்போது சுமாராக 26 லட்சம் (2.6 மில்லியன்) வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம். ஏர்டெல் தன் இலக்கை அடைய வாழ்த்துக்கள்.