இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் 3 டெலிகாம் நிறுவனங்கள் மத்தியில் நாளுக்கு நாள் போட்டி அதிகரித்து வரும் இதேவேளையில் வருமானம் இல்லாமல் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது எனப் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா தொடர்ந்து புலம்பி வருகிறது.
பலமுறை டெலிகாம் கட்டணத்தை உயர்த்த பார்தி ஏர்டெல் முடிவு செய்த நிலையில், சக போட்டி நிறுவனங்கள் போதுமான ஆதரவு அளிக்காத காரணத்தால் தனது முடிவைக் கைவிட்டது. இந்நிலையில் தற்போது AGR கட்டண நிலுவை கழுத்தை நெருக்கும் காரணத்தால் கட்டணத்தை உயர்த்திக் கூடுதலான வருமானத்தைப் பெறத் திட்டமிட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா
பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் தனது ப்ரீபெய்டு பிரிவு வாடிக்கையாளர்களின் டெலிகாம் திட்டங்களின் கட்டணங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதனால் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் கூடுதலான கட்டணத்தைச் செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.
AGR கட்டண சுமை
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் படி AGR கட்டணத்தின் தவணை தொகையைச் செலுத்த வேண்டியும், இதர பேமெண்ட் பிரச்சனைகளும் இருக்கும் காரணத்தால் இந்தக் கட்டண உயர்வின் மூலம் கூடுதலான வருமானத்தைப் பெற்று அதன் வாயிலாகத் தவணை செலுத்தத் திட்டமிட்டுள்ளது இவ்விரு டெலிகாம் நிறுவனங்கள்.
டெலிகாம் நிறுவனங்கள்
குறிப்பாக டெலிகாம் நிறுவனங்களில் தற்போது 4ஜி வாடிக்கையாளர்கள் அதிகளவிலான வருமானத்தைப் பெற்றுத் தரும் காரணத்தால் இப்பிரிவில் இருக்கும் திட்டங்களின் கட்டணத்தை உயர்த்த பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா முடிவு செய்துள்ளது.
ஏர்டெல் முடிவு
இத்திட்டத்தின் முதல் படியாக ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களின் துவக்கத் திட்டமான 49 ரூபாய் திட்டத்தை நீக்கியுள்ளது. இதன் மூலம் ஏர்டெல் வாடிக்கையாளரின் அடுத்த துவக்கத் திட்டமாக 79 ரூபாய் திட்டம் தான் உள்ளது, இது முந்தைய திட்டத்தை விட 60 சதவீதம் காஸ்ட்லி.
வோடபோன் ஐடியா (Vi)
இதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனமும் அடுத்தச் சில நாட்களில் 49 ரூபாய் திட்டத்தை நீக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவ்விரு நிறுவனங்களும் சமீபத்தில் போஸ்ட்பெய்டு திட்ட கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், முதலாவதாக ஏர்டெல் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
AGR கட்டண தவணை
மார்ச் 2022க்குள் AGR கட்டண தவணையாக வோடபோன் ஐடியா 9000 கோடி ரூபாயும், பார்தி ஏர்டெல் 4100 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும். இதைச் சமாளிக்கவே தற்போது டெலிகாம் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இதனால் பாதிப்பு சாமானிய மக்களுக்குத் தான்.
சுனில் மிட்டல்
சில வாரங்களுக்கு முன்பு ஏர்டெல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பார்தி ஏர்டெல்-ன் தலைவர் சுனில் மிட்டல் ஒரு முக்கியமான வர்த்தக கூட்டத்தில் ஏர்டெல் நிறுவனம் தனது டெலிகாம் கட்டணத்தை உயர்த்த எவ்விதமான தயக்கமும் காட்டாது என வெளிப்படையாகவே தெரிவித்தார். இது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் எதிர்கொண்டது.
ரிலையன்ஸ் ஜியோ
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கட்டணத்தை உயர்த்தும் காரணத்தால் கணிசமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்திற்கு மாற அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது. இதன் காரணமாக ஜியோ தற்போது எவ்விதமான கட்டணத்தையும் உயர்த்தாமல் காத்திருக்கிறது.
ஆனால் ரிலையன்ஸ் ஜியோவும் கூடுதல் வருமானத்திற்காகவும், சக நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் கட்டணத்தை உயர்த்தவும் வாய்ப்பு உள்ளது.