டெல்லி: தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு இது போறாத காலமே. ஏனெனில் ஏற்கனவே பலத்த போட்டியின் காரணமாக பெருத்த அடி வாங்கிய நிறுவனங்கள், தற்போது இன்னும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
கடந்த மே மாதத்தில் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள், தலா 4.7 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.
இதே காலத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 3.7 மில்லியன் பயனர்களை சேர்த்துள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் புதன் கிழமையன்று தெரிவித்துள்ளது.
இடம் பெயர்ந்த தொழிலாளர்கள்
மேலும் 2ஜி மற்றும் 3ஜி மற்றும் 4ஜி உள்ளிட்ட வயர்லெஸ் சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது, மே மாதத்தில் 0.5% குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக நகர்புறங்களிலிருந்து, கிராமப்புறங்களுக்கு தொழிலாளர்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ளனர்.
நகர்புறங்களில் எண்ணிக்கை குறைவு
டிராயின் கூற்றுப்படி, கடந்த மே மாதத்தில் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையானது 5.61 மில்லியனாக குறைந்துள்ளது. இதுவே நகர்புறங்களில் வயர்லெஸ் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது ஏப்ரல் மாத இறுதியில் 629 மில்லியனாக இருந்த நிலையில், மே 31 இறுதியில் 620 மில்லியனாக குறைந்துள்ளது.
கிராமப்புறங்களில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கிராமப்புறங்களில் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு அதே நேரத்தில் இது கிராமப்புறங்களில் ஏப்ரல் மாதத்தில் இருந்து 520 மில்லியன் பயனர்களில் இருந்து, மே 31 வரையில் 523 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது கிராமப்புற வயர்லெஸ் சந்தாக்களில் 0.70% மாதாந்திர வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளது என்று டிராய் தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
மே மாதத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவானது, ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட போக்கினையே பின்பற்றுகிறது. இது 8.2 மில்லியன் சந்தாதாரர்கள் இழப்பினை கண்டது. ஜூன் காலாண்டில் தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் சந்தாதாரர்களை இழந்துள்ளனர்.
ஏனெனில் நகர்புறங்களிலிருந்து, கிராமப்புறங்களுக்கு மக்கள் தொகை மாறுவது, வேலை இழப்புகள் மற்றும் பல சிம் கார்டுகளை வைத்துள்ளவர்கள் செயலிழக்கச் செய்தல் என பல காரணங்களினால், பல வாடிக்கையாளர்கள் தங்களது சேவையினை முடித்துக் கொண்டுள்ளனர்.
வாடிக்கையாளர்கள் அதிகரிப்பு
ஜியோவைத் தவிர பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் மே மாதத்தில் 2,01,593 வாடிக்கையாளார்களை சேர்த்துள்ளதாக டிராய் அறிக்கை தெரிவித்துள்ளது. அதோடு 2.98 மில்லியன் வாடிக்கையாளர்கள் தங்களது நெட்வொர்க்கினை மாற்றம் செய்ய கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் 488.23 மில்லியனாக இருந்த நிலையில், மே மாதத்தில் 491.21 மில்லியனாக அதிகரித்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது.
அதோடு இந்தியாவின் லேன்ட்லைன் இணைப்பும் மே மாதத்தில் குறைந்துள்ளது.