பங்கு சந்தையில் பணத்தை இழக்கும் அபாயம் அதிகம் என்று தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவ்வளவு லாபம் கிடைக்குமா என்றால் கிடைக்கும். சரியான பங்கினை தேர்வு செய்தால் மட்டுமே கிடைக்கும்.
நாம் எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் அதனை பற்றி ஒன்றுக்கு பல முறை யோசித்து, அதை பற்றி தெரிந்து கொண்டு அதில் முதலீடு செய்வோம். ஆனால் பங்கு சந்தை முதலீட்டில் மட்டும் யாரோ ஒருவர் சொல்லும் பங்குகளை வாங்கி வைப்போம். இது படகே ஓட்ட தெரியாமல் கப்பலில் பயணிப்பது போலத் தான். பங்கு சந்தை முதலீட்டை பொறுத்த வரையில் எந்த அளவுக்கு நாம் அதனை பற்றி தெரிந்து வைத்துள்ளோமோ? அந்த அளவுக்கு லாபம் சம்பாதிக்க முடியும்.
மேலும் பொறுமையும் இதற்கு மிக அவசியம். எனக்கு தெரிந்து பல வருடங்களாய் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஈடுபடும் நண்பர் ஒருவர், பேச்சு வழக்கில், ஒரு பங்கை வாங்கும் போது நீ எருமையாய் இரு, அதை விற்க ஆமையாய் காத்திரு என்று அடிக்கடி கூறுவார்.
நிறுவனத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்
அதற்காக அவர் கூறிய விளக்கம், ஒரு எருமை மாட்டின் முன்பு அதற்கு தீனியை போட்டாலும், அது மெதுவாக, இது நல்ல தீனியா, பசியடங்குமா? இதை சாப்பிடலாமா? என்றும் பார்த்து மெதுவாகத் தான் சாப்பிட ஆரம்பிக்கும். அதுபோலத் தான் பங்கு சந்தையும். நமக்கு பசிக்கிறது என்பதற்காக ஒரே நேரத்தில் நினைத்ததை வாங்கிட முடியாது. ஒரு பங்கினை வங்குகிறோம் என்றால். அந்த நிறுவனத்தை பற்றி முழுமையான தகவலையும் சேகரிக்க வேண்டும்.
பொறுமை மிக அவசியம்
அதற்கு வரும் காலத்தில் தேவை எப்படி இருக்கும் என்றெல்லாம் பல கோணத்தில் யோசிக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயமே நாம் வாங்கியவுடன் பங்கு விலை சரிய ஆரம்பிக்கும். உடனே நாம் பயத்தில் நஷ்டத்தில் விற்று விட்டு வெளியே வந்துவிடுவோம். ஒரு பங்கினை வாங்க எருமையாய் காத்திருந்த நீங்கள், அதை வாங்கிய பின் ஆமையாய் தான் நகர வேண்டும். அவ்வளவு பொறுயுடன் இருப்பது அவசியம் என்பார்.
அசத்தல் லாபத்தில் அஜந்தா பார்மா
அந்த வகையில் அஜந்தா பார்மா பங்கு விலை 10 ஆண்டுகளில் 8,122 சதவிகிதம் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த அக்டோபர் 30, 2009ல் வெறும் 12.41 ரூபாயாக இருந்த பங்கின் விலை இன்று 1038 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த 2009ல் இந்த பங்கில் நீங்கள் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் லாபம் 83 லட்சம் ரூபாய். உதாரணத்திற்கு நீங்கள் 12.41 ரூபாய் என்ற விலையில் 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், உங்களிடம் 8058 பங்குகள் இருந்திருக்கும், இன்றைய அதன் விலை 1038 ரூபாய், இந்த நிலையில் உங்கள் முதலீடு சுமார் 83 லட்சம் ரூபாயாக வளர்ச்சி கண்டிருக்கும்.
மற்ற பார்மா நிறுவனங்கள் எப்படி?
கடந்த 10 ஆண்டுகளில் நல்ல லாபத்தை கொடுத்துள்ளது இந்த பார்மா பங்கு. இதே ஐபிசிஏ லேபாரட்டீஸ் பங்கு விலை கூட 438 சதவிகித லாபத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இதே நாட்கோ பார்மா 2,571 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ளது. ஜிண்டஸ் வெல்னஸ், க்ளென்மார்க் பார்மா, ஜூபிலியண்ட் லைஃப்சயன்ஸ், கேம்பிள் ஹெல்த் உள்ளிட்ட பங்குகள் முறையே 919%, 37% மற்றும் 126%, 816% மட்டுமே ஏற்றம் கண்டுள்ளன.
தொடர்ச்சியான லாபம்
இந்த நிலையில் அஜந்தா பார்மா கடந்த செப்டம்பர் மாத காலாண்டு அறிக்கையை நவம்பர் 5ம் தேதி வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் காலாண்டில் இதன் நிகரலாபம் 8.5 சதவிகிதம் அதிகரித்து,115 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் வருவாய் 19.7 சதவிகிதம் அதிகரித்து, 612 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் 25 சதவிகிதம் ஏற்றுமதி அதிகரித்துள்ளதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் பொதுவான விற்பனை 67 சதவிகிதம் கூடியுள்ளதாகவும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடன் தொகை இவற்றிற்கு முந்தைய வருவாய் 7 சதவிகிதம் அதிகரித்து 168 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வலுவான செயல்திறன் தான் காரணம்
இந்த வலுவான ஏற்றம் இந்த நிறுவனத்தின் வலுவான நிதி மற்றும் செயல்திறன் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உதாரணத்திற்கு கடந்த 2019ம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 2055.37 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த 2010ல் வெறும் 407.72 கோடி ரூபாயாக விற்பனை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே கடந்த 2019ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் 386.97 கோடி ரூபாய் லாபத்தில் இருந்துள்ளது. இதுவே கடந்த 2010ம் நிதியாண்டில் வெறும் 34 கோடி ரூபாயாக இருந்துள்ளது. ஆக இதுபோன்ற சிறந்த பங்குகளை தேர்வு செய்து, அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பெறலாம்.