இந்தியாவில் தொடர்ந்து பல வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர்ந்து நிதிநெருக்கடியில் சிக்கி வரும் நிலையில், முதலீட்டாளர்களுக்கும், மக்களுக்கும் எவ்விதமான பாதிப்பும் ஏற்படாதவாறு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள வீட்டுக்கடன் சேவை அளிக்கும் திவான் ஹவுஸ்சிங் பைனான்ஸ் கார்ப்ரேஷன் எனப்படும் DHFL நிறுவனத்தைக் கடும் போட்டிக்கு மத்தியில் இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்களின் ஏகோபித்த ஆதரவின் மூலம் ஆஜய் பிராமல் தலைமையிலான பிராமல் குரூப் கைப்பற்ற உள்ளது.
DHFL நிறுவனம்
DHFL நிறுவனத்தைக் கைப்பற்ற அதானி குருப், அமெரிக்காவின் தனியார் முதலீட்டு நிறுவனமான ஓக்ட்ரீ கேப்பிடல், பிராமல் குரூப் ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டிப்போட்டு வந்த நிலையில், தற்போது பிராமல் குரூப் DHFL நிறுவனத்தை மட்டும் அல்லாமல் அதன் வர்த்தகம் என அனைத்தையும் சுமார் 37.250 கோடி ரூபாய்க்குக் கைப்பற்ற உள்ளது.
கௌதம் அதானியின் அதானி குழுமம்
DHFL நிறுவனம் திவாலாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்தவர்கள் தலைமையிலான குழு இந்நிறுவனத்தையும், இந்நிறுவன வர்த்தகத்தையும் விற்பனை செய்ய முடிவு செய்தது. இதன் படி விருப்ப விண்ணப்பம் பெறப்பட்ட நிலையில் கௌதம் அதானி தலைமையிலான அதானி குரூப்-ன் மறு விண்ணப்பம் மூலம் சில பிரச்சனைகள் உருவாகி அனைத்து விண்ணப்பதாரர்களும் புதிய விண்ணப்பம் சமர்ப்பிக்க வாய்ப்பு பெற்றனர்.
அஜய் பிராமல்
இதன் அடிப்படையில் பிராமல் குரூப் DHFL நிறுவனத்தைச் சுமார் 37,250 கோடி ரூபாய்க்குக் கைப்பற்றத் தயார் என விருப்ப விண்ணப்பம் கொடுத்தது அஜய் பிராமல் தலைமையிலான பிராமல் குருப்.
அஜய் பிராமல் தான் முகேஷ் அம்பானியின் ஓரே மகளான ஈஷா அம்பானியின் மாமனார் ஆவார்.
ஓகேட்ரீ கேப்பிடல்
இந்நிலையில் விருப்ப விண்ணப்பங்களை ஆய்வு செய்த DHFL நிறுவனத்தின் கடன் கொடுத்தவர்கள், அமெரிக்காவின் தனியார் முதலீட்டு நிறுவனமான ஓக்ட்ரீ கேப்பிடல் நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கு வெறும் 45 சதவீத ஆதரவை மட்டுமே கொடுத்தனர்.
பிராமல் குரூப்
ஆனால் பிராமல் குரூப்-க்கு சுமார் 94 சதவீதம் பேர் ஆதரவு கொடுத்த காரணத்தால் DHFL நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளது உறுதியாகியுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் அதானி குழுமம், ஓக்ட்ரீ கேப்பிடல் மத்தியிலான போட்டியில் அஜய் பிராமல் தலைமையிலான பிராமல் குரூப் வென்றுள்ளது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்
இந்நிலையில் DHFL நிறுவனம் குறித்த இந்த முடிவைத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. என்சிஎல்டி அமைப்பு ஒப்புதல் அளித்த உடன் DHFL நிறுவனத்தை முழுமையாக அஜய் பிராமல் நிறுவனத்தின் நிதி சேவை பிரிவின் கீழ் இணைக்கப்பட உள்ளது.