நல்ல நிறுவனம், கைநிறைய சம்பளத்தில் வேலை இதுதான் இன்றைய இளைய தலைமுறையினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆனால் இவை அனைத்தும் கிடைத்தும் அதை உதறித் தள்ளிவிட்டு தன் கனவை நோக்கி பயணத்திருக்கிறார் ஒருவர். இதில் விஷயம் என்னவென்றால் அவருடைய கனவுக்கு யாருமே ஆதரவு கொடுக்கவில்லை. தனிநபராக போராடி இன்று 600 கோடி ரூபாய் மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். யார் இவர்?, அப்படி என்ன செய்கிறார்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
பெங்களூரில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பிறகு சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றவர் சசிகுமார். பட்டம் பெற்ற பின்னர் ஐடி துறையில் பல ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தியாவின் முன்னணி IT நிறுவனமான விப்ரோவில் லீட் ஆர்கிடெக்ட்-ஆக 12 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
அங்கு ஊரே பொறாமைப்படும் அளவுக்கு நல்ல சம்பளம் கிடைத்தது. இருந்தும் 2010-ஆம் ஆண்டில் தன்னுடைய வேலையை ரிசைன் செய்து விட்டு விவசாயத்தில் இறங்க முடிவு செய்தார். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைக்கும் போது ஒரு சில குடும்பங்கள் உடனே அதற்கு ஆதரவு தரும். ஆனால் ஒரு சில குடும்பத்தினர் கண்டிப்பாக எதிர்க்கத்தான் செய்வார்கள். இதே நிலைதான் சசிகுமாருக்கும் ஏற்பட்டது. இவர் விவசாயத்திற்கு வந்ததால் சசிகுமாரின் தந்தை அவருடன் 8 ஆண்டுகள் பேசவே இல்லை.

சசிகுமாருக்கு விவசாயத்தின் மீது ஏற்பட்ட ஆர்வம் திடீரென வரவில்லை. 1991-ஆம் ஆண்டு முதல், தான் கல்லூரியில் படித்த போதிலிருந்து தன் குடும்பம் விவசாயம் செய்வதை பார்த்தே வளர்ந்தவர். அப்போதெல்லாம் தனது தந்தையிடம் இயற்கை விவசாயம் செய்யலாமா என்று கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஆனால் விவசாயத்தில் இருந்த கஷ்டத்தினால் சசிகுமாரின் தந்தை அவரை IT துறையில் நுழைய வைத்துள்ளார்.
சசிகுமார் இயற்கை விவசாயம் செய்யும் சிலரை அவ்வப்போது சந்திப்பார். அப்படித்தான் எதிர்பாராத விதமாக உடுப்பியைச் சேர்ந்த ஒரு இயற்கை விவசாயியை சந்தித்துள்ளார். அவர் வெறும் 2 ஏக்கர் நிலத்திலேயே இயற்கை விவசாயம் செய்ய முடியும் என்று பரிந்துரைக்கவே சசிகுமாருக்கு விவசாயத்தின் மீது இன்னும் ஆர்வம் அதிகரித்தது.
அக்ஷய கல்பா ஆர்கானிக்கின் தொடக்கம்: எது நடந்தாலும் சரி விவசாயம் செய்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்த சசிகுமார், ஒரு பால் பண்ணையை ஆரம்பித்தார். அதற்கு அக்ஷய கல்பா ஆர்கானிக் என்று பெயர் சூட்டினார். நிறுவனத்தை தொடங்கிய ஆரம்ப காலத்தில் 10 முறை அதை மூடும் நிலைக்கு தள்ளப்பட்டார். அப்போது அவருடைய மனைவி ஷில்பா தனது சேமிப்பிலிருந்து ரூ.30 லட்சமும், அவருடைய மாமா ரூ.10 லட்சமும் பணம் கொடுத்து உதவினர்.
இந்த ரூ.40 லட்சம் தான் சசிக்குமாரின் கனவை நினைவாக்கியது. தானும் வளர்ந்து விவசாயிகளுக்கும் கை கொடுக்க வேண்டும் என்று நினைத்த சசிகுமார் பல்வேறு பிரிவுகளை தன் நிறுவனத்தில் அறிமுகம் செய்தார்.
பால் உற்பத்தி, தேனி வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு, வாழை சாகுபடி, இப்படி பல பிரிவுகளை இந்நிறுவனம் கொண்டிருக்கிறது. சுமார் 2,800 கிராமங்களைச் சேர்ந்த 2,800 விவசாயிகள் இந்நிறுவனத்தில் உள்ளனர். ஒவ்வொரு விவசாயிக்கும் கிட்டத்தட்ட ரூ.1.28 லட்சம் வரை மாத வருமானமும் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ரூ. 600 கோடி வரை வருமானம் ஈட்டும் மிகப்பெரிய சாம்ராஜ்யமாக அக்ஷயகல்பா ஆர்கானிக்கை மாற்றியுள்ளார்.
அக்ஷயகல்பா ஆர்கானிக் நிறுவனத்தில் பால் பொருட்கள், தயிர், வெண்ணெய், பன்னீர், மோர் என பல்வேறு பொருட்கள் விற்பனை ஆகிறது. அதோடு தேன், தேங்காய் எண்ணெய், இட்லி, தோசை மாவு, ஆர்கானிக் காய்கறிகள், பழங்கள் என ஏராளமான பொருட்களும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications
