75 கோடி ரூபாய் சம்பளத்தினை யாரேனும் வேண்டாம் என கூறுவோமா? முதலில் கனவில் இப்படி நினைப்போமா? என்றால் நிச்சயம் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் மாதம் லட்சக் கணக்கில் சம்பளம் என்றாலே ஆச்சரியமான விஷயமாக ஊழியர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கொரோனாவின் வருகைக்கு பிறகு இதனை பற்றி யோசிப்பதே குறைந்துள்ளது. ஏனெனில் கொரோனாவினால் தங்கள் வேலையினை இழந்து, வாழ்வாதாரத்தினை இழந்தவர்கள் ஏராளம். அந்த காலகட்டத்தில் அடிப்படை தேவைகளுக்கு கூட கஷ்டப்படும் நிலைக்கு பலரும் கஷ்டப்பட்டனர்.
இப்படி ஒரு நிலையில் 75 கோடி சம்பளம் என்றால் கசக்வா செய்யும்? ஆனால் அப்படி ஒரு சம்பளம் கிடைத்தும் வேண்டாம் என தூக்கி எறிந்த ஒருவரை பற்றித் தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
யுனிகார்ன் கிளப்பில் இணைந்த பிசிக்ஸ் வாலா
இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனமான பிசிக்ஸ்வாலா யுனிகார்ன் கிளப்பில் இணைந்துள்ளது. இது முதல் முறையாக 100 மில்லியன் டாலர்களை திரட்டிய யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனம் இந்தியாவின் 101ஆவது யுனிகார்ன் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த யுனிகார்ன் நிறுவனம் ஒரு எடெக் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 1.1 பில்லியன் டாலராகும்.
என்ன செய்கிறது?
இது ஜே இ இ, மற்றும் நீட் தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்கும் ஆன்லைன் எடெக் நிறுவனமாகும். இந்த நிறுவனம் சீரிஸ் ஏ மூலம் 777 கோடி ரூபாய் நிதியினை திரட்டியுள்ளது. இதில் வெஸ்ட் பிரிட்ஜ் மற்றும் ஜிஎஸ்வி வென்ச்சர் போன்ற நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த நிதி திரட்டலானது அதன் சேவையினை விரிவாக்கம் செய்யும் பொருட்டு திரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆரம்பம் இது தான்
அதெல்லாம் சரி யாரிந்த அலக் பாண்டே. 75 கோடி சம்பளத்தினை நிராகரித்தது ஏன்? அவருக்கும் பிசிக்ஸ்வாலாவுக்கும் என்ன சம்பந்தம் வாருங்கள் பார்க்கலாம்.
உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆசிரியரான அலக் பாண்டே என்ற ஆசிரியரால் தொடக்கப்பட்ட ஒரு யூடியூப் சேனல் தான் பிசிக்ஸ்வாலா. இது 6 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு சேனலாக இருந்தது. இதற்கு பெரும் வரவேற்பு கிடைக்கவே, இன்று பிசிக்ஸ்வாலா ஒரு யுனிகார்ன் நிறுவனமாக உருவெடுத்தது.
பாதியிலேயே நின்று போன கல்லூரி படிப்பு
ஆரம்பத்தில் மாதம் 5000 சம்பாதித்து வந்த அலக் பாண்டே, தனது கல்லூரி படிப்பினை பாதியிலேயே நிறுத்தியவர். எனினும் இவரின் திறமையை கண்ட மற்றொரு கல்வி நிறுவனம் இவருக்கு 75 கோடி சம்பளம் (லைவ் மிண்ட் அறிக்கையின் படி) கொடுக்க தயாரானது. ஆனால் அதனை நிராகரித்த அலக், பிசிக்ஸ்வாலவினை ஸ்டார்ட் அப் நிறுவனமாக தொடங்குகிறார்.
லாபம் இல்லா தொழில் வேண்டாம்
சமீபத்தில் அலக் ஒரு பேட்டியில் லாபம் இல்லாத தொழிலை மட்டும் செய்ய முடியாது என்று கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. 75 கோடி ரூபாய் சம்பளத்தினை நிராகரித்த அலக்கிற்கு, அதனை விட சிறந்த வாய்ப்பு காத்துக் கொண்டுள்ளது என்று நினைத்ததன் விளைவே, இன்று 1.1 பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தினை உருவாக்க முடிந்திருக்கிறது.
அலக்கின் கனவு
அலக்கின் கனவே, பிசிக்ஸ்வாலா மூலம், ஒரு ரிக்ஷாவாலா, செய்தித்தாள் விற்பனையாளர், சலவை செய்பவர் கூட தங்கள் குழந்தையை மருத்துவராக படிக்க வைக்க வேண்டும் என்பது தானாம். அவர் மேற்கண்ட 75 கோடி ரூபாய் சம்பளத்தினை மறுத்ததன் பின்னணியும் இது தான் என கூறியுள்ளார். இந்தியாவின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் கல்வி கற்பிக்க வேண்டும் என்ற தொலை க்கு பார்வையே நல்ல வாய்ப்பினை மறுக்க காரணமாகவும் இருந்துள்ளது.
போட்டி நிறுவனங்களின் நிலை
இவரின் இந்த தொலை நோக்கு பார்வை போட்டி நிறுவனங்களை குறுகிய காலத்திலேயே பந்தாட வைத்துள்ளது. மற்றொரு எடெக் நிறுவனமான அன்அகாடாமியின் 2021 வருவாய் விகிதம் 398 கோடி ரூபாயாகும். இதே பிசிக்ஸ் வாலாவின் வருவாய் விகிதம் 350 கோடி ரூபாயாகும். ஆனால் அன்அகாடாமி விளம்பரங்களுக்காக 411 கோடி ரூபாய் செலவழித்துள்ளது. ஆனால் பிசிக்ஸ்வாலாவின் விளம்பர செலவு கிட்டதட்ட பூஜ்ஜியம் என விங்டார்ட் நிறுவனம் அனுராக் ஸ்ரீ வாஸ்தவா சுட்டிக் காட்டியுள்ளார்.
பிசிக்ஸ்வாலா யூடியூப் சேனல்
எந்தவொரு டெக்னாலஜி ஆடம்பர காரணிகளையும், ஆடியோ வீடியோவை பயன்படுத்தாமல் மிக சாதாரணமாக தொடங்கப்பட்ட யூடியூப் சேனலை நினைவுகூர்ந்த, பிசிக்ஸ்வாலாவின் தலைமை செயல் அதிகாரி, இன்று பிசிக்ஸ்வாலா சேனல் 6.91 மில்லியன் சந்தாதார்களை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அது மட்டும் அல்ல ஜே இ இ மற்றும் நீட் தேர்வுகளில் பிசிக்ஸ்வாலா ஆட்சி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பிசிக்ஸ்வாலா ஊழியர்கள்
பிசிக்ஸ்வாலா 500 ஆசிரியர்கள், 90 - 100 தொழில்நுட்ப வல்லுனர்கள் உட்பட 1900 பேரை பணியமர்த்தியுள்ளது. மாணவர்களுக்கு உதவுவதற்காக 200 துணை பேராசிரியர்களும், தேர்வுக்கான கேள்விகளை உருவாக்க 200 நிபுணர்களும் உள்ளனர்.
75 கோடி ரூபாய் சம்பளத்தினை நிராகரித்த அலக் பாண்டே, இன்று அவரை போன்ற பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பளிக்கும் நிறுவன தலைவராக உருவெடுத்திருப்பது அவரின் உழைப்புக்கு கிடைத்த பரிசே.