இந்தியாவில் மே 1 ஆம் தேதி முதல் பல்வேறு நிதி தொடர்பான மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. இவை சாமானிய மக்களின் பட்ஜெட்டையே பதம் பார்ப்பவையாக இருக்கின்றன. அந்த வகையில் சிலிண்டர் தொடங்கி பிஎஃப் வரை என்னென்ன மாற்றங்கள் மே மாதத்தில் அமலுக்கு வருகின்றன என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.
சிலிண்டர் விலை: மாதம் தோறும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையில் மாற்றம் கொண்டு வரும். ஏப்ரல் 1ஆம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் விலை 60 ரூபாய் உயர்த்தப்பட்டது. அந்த வகையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஈரான் போர் காரணமாக மே மாதமும் சிலிண்டர் விலை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் சேவை: சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி மே 1 முதல் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது பழைய பயண அட்டைகளை முழுமையாக நிறுத்திவிட்டு, சிங்கார சென்னை அட்டைக்கு மாறுவதாக அறிவித்துள்ளது. எனவே பயணிகள் பழைய CMRL மெட்ரோ அட்டை வைத்திருந்தால் மே 1 முதல் அவை செல்லாது. மெட்ரோ பயணிகள் இனி சிங்கார சென்னை அட்டையை மட்டுமே பயன்படுத்தி மெட்ரோவில் பயணிக்க முடியும்.
டிஜிட்டல் பரிவர்த்தனைகள் : இனி ஒவ்வொரு டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகப் பாதுகாப்பாக கொண்டதாக மாறும். அதாவது two factor authentication நடைமுறைக்கு வருகிறது. யுபிஐ, நெட் பேங்கிங் அல்லது கார்டு மூலம் பணம் செலுத்தும் போது OTP மட்டுமில்லாமல் அத்துடன் பின் நம்பர் அல்லது பயோமெட்ரிக் தரவுகளை உள்ளிட்டு இரண்டாவதாக பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டி இருக்கும்.
ஆன்லைன் விளையாட்டுகள்: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டு தொடர்பான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது மே 1 முதல் அமலுக்கு வருகிறது. சூதாட்டம் இல்லாத சாதாரண விளையாட்டுகளுக்கு பதிவு அவசியமில்லை என கூறப்படுகிறது. இருப்பினும் 'இ-ஸ்போர்ட்ஸ்' விளையாட்டுக்களுக்கு கட்டாய பதிவு அவசியம். ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய இது வழிவகை செய்கிறது.
பிஎஃப் பணம்: EPFO மே மாதம் முதல் EPFO 3.0 திட்டத்தை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் PF பணத்தை எடுக்க ஆன்லைனில் விண்ணப்பித்து வார கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் புதிய வசதி மூலம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை யுபிஐ , ஏடிஎம் மூலம் எடுக்கலாம்.
பான் கார்டு: அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் மீதான கண்காணிப்பை அரசு இப்போது கடுமையாக்கியுள்ளது. ஒரு நிதியாண்டில் 10 லட்சத்திற்கு மேல் பணம் டெபாசிட் செய்யும் அல்லது எடுக்கும் நபர்கள் பான் எண் கொடுப்பது கட்டாயமாகிறது.


Click it and Unblock the Notifications

