டெல்லி : ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஜனவரி 1 முதல் மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் செல்லாது என்று கடந்த சில வாரங்களுக்கு முன்பே அறிவித்தது.
இது கடந்த சில வாரங்களாகவே கூறப்பட்டு வரும் நிலையில், இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், வாடிக்கையாளார்கள் கடைசி நேரத்தில் அவதிப்படுவதை விட, இப்போதிலிருந்தே அதை மாற்ற முயற்சிக்கலாம்.
இதன் மூலம் உங்களது ஏடிஎம் கார்டுகள் ஹேக் செய்யப்படுவது குறையும் என்றும், திருட்டு நடைபெறுவதை தடுக்க முடியும் என்றும் கருதப்படுகிறது.
மேக்னடிக் ஸ்ட்ரிப் கார்டுகளை மாற்றிடுங்கள்
நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால் நிச்சயம் இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும். நீங்கள் உபயோகப்படுத்தும் எஸ்பிஐ ஏடிஎம் கார்டு மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட கார்டுகளா? அப்படி எனில் வங்கி சென்று அதை விரைவில் மாற்றி விடுங்கள். ஏனெனில் டிசம்பர் 31 வரையில் தான் அந்த கார்டுகள் செல்லும். இந்த வகையான மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்ய முடியும் என்பதால், பாதுகாப்பு கருதி எஸ்பிஐ இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாதுகாப்பான இஎம்வி சிப் கார்டு
உங்களது பழைய மேக்னடிக் ஸ்ட்ரிப் கார்டை தவிர்த்து, கூடுதல் பாதுகாப்பிற்காக இஎம்வி சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை பெற்று பயன் பெறுங்கள். மேலும் எஸ்பிஐ வங்கியின் இஎம்வி சிப் இல்லாத பழைய டெபிட் கார்டுகளை டிசம்பர் 31ஆம் தேதியோடு முடக்கவுள்ளதாக அவ்வங்கி நிர்வாகம் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாகவே அறிவித்துள்ளது.
தகவல்கள் திருட்டு
ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது மறைமுகமாக கேமரா பொருத்தி பின்கள் மற்றும் கார்டின் விவரங்களை அறிந்து எளிதாக பணம் திருடப்படுகிறது. மேலும் ஸ்கிம்மர்கள் மூலமாகவும் உங்களது தகவல்கள் திருடப்படுகிறது. அதிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறாமல் இருக்கத் தொடர்ந்து காவல்துறையினரும், வங்கி நிர்வாகமும் தொடர்ந்து மக்கள் மத்தியில் பல விழிப்புணர்வுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர்.
என்ன காரணம்?
மேக்னடிக் ஸ்ட்ரிப் கொண்ட இந்த ஏடிஎம் கார்டுகள் எளிதாக ஹேக் செய்து விடுகின்றனர். ஆக இவற்றைத் தவிர்த்துக் கூடுதல் பாதுகாப்பிற்காக இஎம்வி சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. எஸ்பிஐ மட்டும் அல்ல அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும், இந்தக் கார்டுகளைப் பெற வேண்டும் எனவும் அனைத்து வங்கிகளும் கூறி வருகின்றன.
பழைய கார்டுகள் முடக்கம்
இவ்வாறு பாதுகாப்பற்றதாக கருதப்படம் எஸ்பிஐ வங்கி நிர்வாகம் சிப் பொருத்தப்படாத அனைத்துக் கார்டுகளையும் டிசம்பர் 31ஆம் தேதியோடு முடக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதன் பின்பு பழைய சிப் பொருத்தப்படாத கார்டுகளை ஏடிஎம் மற்றும் எந்தவிதப் பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்த முடியாது எனவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
புதிய இஎம்வி சிப் கார்டுகளை எப்படிப் பெறுவது?
புதிய ஏடிஎம் கார்டுகளை வாங்க வங்கிக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது எஸ்பிஐ யோனோ ஆப், ஆன்லைன் பேங்கிங் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இதில் விண்ணப்பிக்கும் முன் உங்களது வீட்டு முகவரி சரியாக உள்ளதா என்பதையும் சரிப்பார்த்துக் கொள்ளவும். மேலும் வங்கிகளில் நேரடியாகச் சென்று விண்ணப்பிப்பவர்கள் நீங்கள் எந்த கிளையில் கணக்குத் தொடங்கினீர்களோ அங்கு சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு எந்தவித கட்டணமும் இன்றி என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது கவனிக்கதக்கது.