சீனா உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் ஒரு மிகப்பெரிய பொருளாதார நாடு, அடுத்த சில வருடத்தில் வல்லரசு நாடான அமெரிக்காவிற்கு இணையாக, ஏன் அமெரிக்காவை விடவும் மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர சக்தி கொண்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் சமீப காலமாகப் பெரும் தொழிலதிபர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளைப் பார்த்து உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளது.
உலகின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா நிறுவனத்தை உருவாக்கிய ஜாக் மா அரசை விமர்சனம் செய்து பேசி ஒரே காரணத்திற்காக அலிபாபா நிறுவனம், ஜாக் மாவும் சீன அரசு கட்டுப்பாடுகள், நெருக்கடி மூலம் சின்னபின்னமாகி வருகிறது.
இதனால் சீனாவில் இருக்கும் பிற தொழிலதிபர்கள் வாயடைத்து அரசு சொல்லும் அனைத்து விதிமுறை கட்டுப்பாடுகளுக்கும் எவ்விதமான மறுப்பும் தெரிவிக்காமல் தலையாட்டும் நிலை உருவாகியுள்ளது.
ஜாக் மா-வின் இன்றைய நிலை
உலகமே வியக்கும் வண்ணம் மாபெரும் ஈகாமர்ஸ் மற்றும் மார்டன் வர்த்தகத் தளத்தை உருவாக்கிய ஜாக் மா இன்று சீனா அரசின் நெருக்கடி காரணமாக வீட்டிலேயே முடங்கியது மட்டும் அல்லாமல் ஓவியம் வரைந்தும், tai chi கலையைக் கற்றுக்கொண்டு வருகிறார். எவ்விதமான வர்த்தகம், தொழில் தொடர்புடைய விஷயங்களில் பங்குகொள்வது இல்லை.
ரஷ்ய அதிபர் புடின்
சமீபத்தில் ரஷ்யாவின் ஜியோகிராபிக் அமைப்பு நடத்திய ஒரு வீடியோ வாயிலாக ஆலோசனைக் கூட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் உட்படப் பல தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலும் ஜாக் மா எவ்விதமான ஆர்வமும் இல்லாமல் கண்ணத்தில் வைத்து உட்கார்ந்து இருந்தார்.
அலிபாபா ஈகாமர்ஸ் தளம்
20 வருடத்திற்கு முன்பாக ஜாக் மா மிகவும் துடிப்புடன் சீனாவின் இண்டர்நெட் காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த ஒரு மாபெரும் தலைவர் என்றால் மிகையாகாது. சீனாவின் தென் முனையில் இருந்து மேற்கு முனை வரையில் பல கோடி விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள் எனப் பல தரப்பினரை இணைந்து சீனாவின் மொத்த நுகர்வோர் சந்தைக்கும் ஒரே தளத்தில் வர்த்தகத்தை அளித்தார்.
டிஜிட்டல் பணப்பரிமாற்ற சேவை
இதுமட்டும் அல்லாமல் இன்று உலகம் முழுவதும் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டு இருக்கையில் சீனாவின் மொத்த டிஜிட்டல் வர்த்தகத்தையும் பல ஆண்டுகளுக்கு முன்பே ஜாக் மா-வின் ஆன்ட் குரூப் கைப்பற்றியது. இதுமட்டும் அல்லாமல் ஒரு வங்கி அளிக்கும் அனைத்து சேவைகளையும் சாமானிய மக்களுக்குத் தனது ஆன்ட் குரூப் மூலம் கொண்டு சேர்த்தார்.
சீன அரசின் நெருக்கடி
ஆனால் ஜி ஜின்பிங் தலைமையிலான சீனா அரசு பல ஆண்டுக் காலமாக அரசுக்கு எதிராகப் பேசும் தொழிலதிபர்களையும், அதிகச் சொத்துமதிப்பு, மக்கள் செல்வாக்கும் கொண்டவர்களுக்கும் அதிகளவிலான நெருக்கடியை அளித்து வருகிறது. இது தான் தற்போது ஜாக் மாவுக்கும் நடந்துள்ளது.
சீனாவின் Iron rule
ஜாக் மா மட்டும் அல்லாமல் அலிபாபா, ஆன்ட் குரூப் சாம்ராஜ்ஜியமும் தற்போது சீன அரசு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. சீனாவில் ஒரு iron rule என ஒன்று உள்ளது, அதாவது அரசு அமைப்பைத் தாண்டி யாரும் சக்தி வாய்ந்த தனி நபரோ அல்லது நிறுவனமோ இருக்கக் கூடாது என்பது தான். அப்படி யாரேனும் ஒருவர் உருவானால் நிலையே வேறு தான்.
உயர் அதிகாரிகள் பதவி விலகல்
சீனா அரசு அலிபாபா-விற்குக் கொடுக்கும் நெருக்கடி காரணமாக ஆன்ட் குரூப்-ன் தலைமை நிர்வாக அதிகாரி சிமோன் ஹூ மார்ச் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார், அடுத்த சில நாட்களில் அலிபாபா-வை விடவும் வேகமாக வளரும் Pinduoduo நிறுவனத்தின் தலைவர் Colin Huang பதவி விலகினார். வெறும் 12 மாதத்தில் 788 மில்லியன் வாடிக்கையாளர்களை Pinduoduo பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
டென்சென்ட் போனி மா
இந்நிலையில் சீனா அரசு தலைமையில் கடந்த வாரம் இண்டர்நெட் நிறுவனங்கள் மத்தியில் நடந்த ஒரு கூட்டத்தில் டென்சென்ட் நிறுவனத்தின் தலைவராகப் போனி மா மூலம் சீனாவின் இண்டர்நெட் நிறுவனங்களுக்கு மிகவும் கடுமையான ஒரு விதிமுறைகளைச் சமர்ப்ரித்தார். இதைச் சீன அரசு "innovative methods of regulation and governance" பெயரில் வெளியிட்டது.
சில மணிநேரத்தில் ஒப்புதல்
சில மணிநேரத்தில் 34 டாப் இண்டர்நெட் நிறுவனங்களும் எவ்விதமான மறுப்பு தெரிவிக்காமலும், கேள்விகள் எழுப்பாமலும் முழுமையாக ஏற்றுக்கொண்டது மட்டும் அல்லாமல் புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப வர்த்தகத்தை மாற்றத் துவங்கியுள்ளது.
சீன அரசின் மீது பயம்
இந்த விதிமுறைகளை மறுத்தால் அலிபாபாவுக்கும், ஜாக் மாவுக்கும் நடந்தது தான் பிற தொழிலதிபர்களுக்கும் நடக்கும் என்ற பயத்தில் ஏற்றுக்கொண்டு வருகின்றனர். சீனாவில் அரசின் மீது நம்பிக்கையைத் தாண்டி பயம் உருவாகியுள்ளது என்பது தான் தற்போதைய உண்மை நிலையாக உள்ளது.
இண்டர்நெட் நிறுவனம்
உற்பத்தித் துறை, சேவைத் துறை, வர்த்தகத் துறை ஆகிய அனைத்தும் சீன அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் இண்டர்நெட் நிறுவனங்கள் மட்டும் சற்றுச் சுதந்திரமாக இருந்தது ஆனால் அதையும் தற்போது கடுமையான விதிமுறைகள் மூலம் சீன அரசு தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
புதிய விதிமுறையின் உண்மை நிலை
இப்புதிய விதிமுறைகள் என்பது ஒரு நிறுவனம் innovate முறையில் வளர்ச்சி அடைகிறது என்பதற்காகவே அறிவிக்கப்பட்டு உள்ளது எனச் சீன அரசு தெரிவித்துள்ளது, ஆனால் உண்மையில் இந்த விதிமுறையின் மூலம் சீன நிறுவனங்கள் innovation குறையும் என்பது தான் உண்மை என லோவி இண்ஸ்டியூட்-ன் மூத்த ஆய்வாளர்கள் Richard McGregor தெரிவித்துள்ளார். இவர் "The Party: The Secret World of China's Communist Rulers." என்ற புத்தகத்தை எழுதியவர்.