ஏர் இந்தியாவை போல் பல போராட்டத்திற்கு பின்பு ஜெட் ஏர்வேஸ், முடங்கியிருந்த விமான சேவையை விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக சஞ்சீவ் கபூர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இவருடைய நியமனத்திற்கு பின்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பல நிர்வாக மாற்றங்களையும், செயல்முறை மாற்றங்களையும் செய்து வருகிறார். இந்நிலையில் டிவிட்டரில் முக்கியமான ஒரு கேள்விக்கு சஞ்சீவ் கபூர் நச் என்று பதிலை கொடுத்துள்ளார்
வெளிநாட்டு விமான சேவை
மத்திய அரசு கொரோனா தொற்று உலக நாடுகளில் குறைந்து வருவதை தொடர்ந்து இந்திய விமான நிறுவனங்களுக்கு வெளிநாட்டு விமான சேவை அளிக்க அனுமதி அளித்துள்ளது. இதனால் ஏர் இந்தியா உட்பட அனைத்து விமான நிறுவனங்களும் கொண்டாட்டத்தில் இருக்கும் வேளையில் விமான எரிபொருள் விலை உயர்வு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமான எரிபொருள் விலை
இந்த விமான எரிபொருள் விலை தாக்கத்தை குறைக்கும் வகையில் டிவிட்டரில் விஷால் என்பவர் ஏர் இந்தியா, ஏர் விஸ்தாரா, ஏர் ஏசியா இந்தியா போன்ற முன்னணி நிறுவனங்களை டேக் செய்து, நீங்கள் ஏன் ஆண் கேபின் க்ரூவை பணியில் அமர்த்துகிறீர்கள். முழுக்க முழுக்க பெண் கேபின் க்ரூ ஊழியர்களை நியமித்தால் விமான எடை சுமையில் 100 கிலோ குறையும், இதனால் எரிபொருள் செலவு ஒரு விமான பயணத்திற்கு 1000 ரூபாய் குறையும்.
3.65 கோடி ரூபாய் சேமிப்பு
இதுவே நீங்கள் ஒரு நாளுக்கு 100 விமானங்களை இயக்கும் பட்சத்தில் வருடத்திற்கு 3.65 கோடி ரூபாய் தொகையை விமான எரிபொருளில் மட்டுமே சேமிக்க முடியும் என டிவிட் செய்தார். இதற்கு பதில் அளித்துள்ள சஞ்சீவ் கபூர், இந்த லாஜிக் படி ஏன் பெண் பயணிகளுக்கு குறைவான கட்டணத்தையோ அல்லது ஆண் பயணிகளுக்கு அதிக கட்டணத்தை விதிக்க கூடாது என டிவீட் செய்துள்ளார்.
பெண் கேபின் க்ரூ
சஞ்சீவ் கபூரின் பதிலுக்கு மறு கேள்வி கேட்டார், இதில் அது உண்மையல்லவா? சில விமான நிறுவனங்கள் பெண் கேபின் க்ரூவை மட்டுமே பணியமர்த்த இதுவும் ஒரு காரணம் தானே என கேட்டார். அதற்கும் சஞ்சீவ் கபூர் சரியான முறையில் பதில் அளித்து உள்ளார்.
விமான எடை சுமை
விமானத்தில் எடை சுமை குறையும் போது நிச்சயமாக எரிபொருள் செலவுகள் பெரிய அளவில் குறையும். ஆனாலும் சரியானது இல்லை. என் பார்வையில் இது ஒரு வகை பாலின பாகுபாடு. பெரும்பாலான இடங்களில், பல நிறுவனத்தில் இத்தகைய முறை தடை செய்யப்பட்டு உள்ளது.
பெண் பைலட்
ஏன் கேபிள் க்ரூ-வில் மட்டும் பெண்களை சேர்க்க வேண்டும், பைலட் பணியிலும் பெண்களை நியமித்தால் வருடத்திற்கு 1.8 கோடி ரூபாய் சேமிக்க முடியும் எனவும் கூறினார். பாலின பாகுபாடு எந்த இடத்தில் இருந்தாலும் தப்புதான். இதற்கு ஆண் பெண் பேதம் இல்லை.