உலக நாடுகளில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து, வட்டி விகிதம் உயர்ந்து வரும் நிலையில் வல்லரசு நாடுகளில் ரெசிஷன் அச்சம் நிலவி வருகிறது.
ஏற்கனவே அமெரிக்காவில் பல நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில் இந்தியாவில் டெக் ஊழியர்களுக்கு அதிகமாக டிமாண்ட் இருந்துகொண்டு தான் இருக்கிறது. ஆனால் கூடவே ஒரு அச்சமும் இருந்து வருகிறது.
அமெரிக்காவில் பண பலம் கொண்ட டெஸ்லா, பேஸ்புக், டிவிட்டர் போன்ற முன்னணி பார்சூன் 500 நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், புதிய ஊழியர்களைப் பணியில் சேர்ப்பதையும் நிறுத்தியுள்ளது.
இந்த வரிசையில் தற்போது தமிழரான சுந்தர் பிச்சை தலைமை வகிக்கும் ஆல்பபெட் நிறுவனமும் இணைந்துள்ளது.
கூகுள் அறிவிப்பு
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும், டெஸ்லா, பேஸ்புக், டிவிட்டர் போன்ற நிறுவனங்கள் எடுத்துள்ள முடிவுகளையே எடுத்துள்ளது. அதாவது சில பிரிவுகளைத் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்குவது அல்லது இந்த ஆண்டு முழுவதும் மொத்தமாக அனைத்து துறையிலும் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவதை மெதுவாக்கத் திட்டமிட்டுள்ளது.
பொருளாதாரச் சரிவு
வரலாற்று ரீதியாக, தொழில்நுட்பத் துறையின் பொருளாதாரச் சரிவுகளிலிருந்து கூகுள் ஒப்பீட்டளவில் அதிகளவிலான எதிர்ப்புச் சக்தியுடன் தான் இருந்துள்ளது. உலகின் மிகப்பெரிய இன்டர்நெட் சேவை நிறுவனமான கூகுள் கடைசியாக ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு பணியமர்த்துவதைச் சில மாதங்களுக்குப் பின்பு தற்காலிகமாக நிறுத்தியது.
அதிகப்படியான ஊழியர்கள்
ஆனால் அதைத் தொடர்ந்து கூகுளின் விளம்பர வணிகத்தின் பிரம்மாண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து அதிகப்படியான ஊழியர்களைச் சேர்த்துக்கொண்டது. இதேவேளையில் கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள், லெல்ப் ட்ரைவிங் கார்கள், போன்ற பல திட்டங்கள் இன்னும் லாபகரமாக இல்லாத நிலையில் தற்போது ஊழியர்களின் சுமை அதிகமாகியுள்ளது.
1,64,000 ஊழியர்கள்
மார்ச் 31 வரை கிட்டத்தட்ட 1,64,000 ஊழியர்களை உலகம் முழுவதும் இருக்கும் அலுவலகத்தில் கூகுள்-ன் தாய் நிறுவனமான ஆல்பெட் பணியமர்த்தியது. சமீபத்திய ஆண்டுகளில் கூகுள் அதிகப்படியான ஊழியர்களைக் கிளவுட் பிரிவு மற்றும் வன்பொருள் துறையில் பணியமர்த்தியது.
ஸ்னாப் டூ டெஸ்லா
இந்நிலையில் கொரோனா தொற்று பாதிப்பிற்குப் பின்பு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை, மே மாதத்தில் ஸ்னாப் மற்றும் லிஃப்ட் பணியமர்த்துவதைத் தற்காலிகமாக ஸ்லோடவுன் செய்வதாக அறிவித்தது, அதைத் தொடர்ந்து டெஸ்லா அதன் மொத்த பணியாளர்களில் 10 சதவீத பேரை பணிநீக்க செய்ய உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது.
மைக்ரோசாப்ட்
இந்த வார தொடக்கத்தில், டெக் உலகின் மற்றொரு ஜாம்பாவானான மைக்ரோசாப்ட் சிறிய அளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. மேலும் மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் அதாவது பேஸ்புக் தாய் நிறுவனம் புதிதாக ஊழியர்களை நியமிப்பதை நிறுத்தவும், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சை ஊழியர்களுக்குக் கடிதம்
இந்நிலையில் கூகுள் 2வது காலாண்டில் மட்டும் 10000 ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ள நிலையில், இனி வரும் 6 மாதத்தில் இன்ஜினியரிங், டெக்னிக்கல், மற்றும் இதர முக்கியமான பணிகளில் மட்டுமே ஆட்களைப் பணியில் சேர்க்க உள்ளோம். மற்ற பணிகள், பிரிவுகளில் ஆட்சேர்ப்பு வேகத்தைக் குறைக்க உள்ளதாகச் சுந்தர் பிச்சை கூறினார்.