அமெரிக்காவின் முன்னணி டெக் மற்றும் ஈகாமர்ஸ் சேவை நிறுவனமான அமேசான் மத்திய அரசின் ஆத்மநிர்பர் பார்த் திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முதல் முறையாக அதுவும் நம்ம சென்னையில் தனது ஆஸ்தான எலக்ட்ரானிக்ஸ் பொருளான பையர் டிவி ஸ்டிக்-ஐ உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளது.
Recommended Video
அமேசானின் இந்தத் திட்டத்தை இந்நிறுவனத்தின் இந்திய வர்த்தகப் பிரிவின் தலைவரான அமித் அகர்வால், மத்திய அமைச்சரான ரவி சங்கர் பிரசாத்-க்கு விவரித்தார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனது டிவிட்டர் கணக்கில் அமேசான் திட்டம் குறித்துக் குறிப்பிட்டு இருந்தார்.
அசத்தும் இந்தியா
ஆப்பிள், சாம்சங் உட்பட உலகின் பல முன்னணி ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் இந்தியாவில் புதிதாக உற்பத்தி தளத்தை அமைத்து விரிவாக்கம் செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க ஆர்வம் காட்டு நிறுவனங்களுக்குப் பல்வேறு சிறப்புச் சலுகைகளை மத்திய அரசு அளித்து வருகிறது.
பாக்ஸ்கான் டெக்னாலஜி
இந்நிலையில் தற்போது இந்தியாவில் முதல் முறையாக அமேசான் தனது பையர் டிவி ஸ்டிக்-ஐ தயாரிப்பதற்காகச் சென்னையில் மிகப்பெரிய உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தளத்தை வைத்திருக்கும் பாக்ஸ்கான் டெக்னாலஜி குரூப்-ன் கிளை நிறுவனமான கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து அமேசான் தனது உற்பத்தியை துவங்க உள்ளது. இக்கூட்டணி 2021ஆம் ஆண்டுக்குள் தனது தயாரிப்பைத் துவங்கவும் முடிவு செய்துள்ளது.
உற்பத்தி மேம்படுத்தும் திட்டம்
இந்த உற்பத்தி திட்டத்தின் மூலம் இந்திய வர்த்தகச் சந்தைக்குத் தேவையான பையர் ஸ்டிக்-ஐ தயாரிக்கவும், டிமாண்ட் பொருத்து உற்பத்தி அதிகரிக்கவும் பிற வர்த்தகச் சந்தைகளுக்கும் தேவையானவற்றைத் தயாரிக்கும் வகையில் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக அமேசான் தெரிவித்துள்ளது.
ரவி சங்கர் பிரசாத்
அமேசான் நிறுவனத்தை அறிவிப்பை வரவேற்ற மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், அமேசான் கிளவுட் நெட்வொர்க் டெக்னாலஜி நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து புதிதாக அமைக்க உள்ள உற்பத்தி தளத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறு மறறும் நடுத்தர நிறுவனங்கள்
மேலும் அமேசான் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் 10 மில்லியன் சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களை டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டு வந்து, அவர்களது தயாரிப்பை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் வகையில் மேம்படுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
1 மில்லியன் வேலைவாய்ப்புகள்
இந்தத் திட்டத்தின் மூலம் அமேசான் இந்தியாவில் இருந்து சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை வெளிநாட்டுச் சந்தையில் விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் 2025ஆம் ஆண்டுக்குள் 1 மில்லியன் வேலைவாய்ப்புகளை இதன் மூலம் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.