இந்திய ரீடைல் சந்தையைச் சில மாதங்களுக்கு முன்பு புரட்டி போட்ட பியூச்சர் குரூப் - ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம், அமேசான் வழக்கின் எதிரொலியாகத் தடைபட்டு நிற்கிறது. இந்தப் பிரச்சனையில் இருந்து ரிலையன்ஸ் மற்றும் பியூச்சர் குரூப் மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த முக்கியமான செய்தி வெளியாகியுள்ளது.
அமேசான் மற்றும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்திற்கு மத்தியில் நடந்த ஒப்பந்தத்தில் அமேசான் பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் சில முக்கியமான நிறுவனங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் முதலீடு செய்து பங்குகளைக் கைப்பற்ற கூடாது எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்கான ஆதாரங்களை அமேசான் சிங்கப்பூர் நடுவர் அமைப்பிற்கு சமர்ப்பித்து தனது தரப்பு வாதத்தை வலிமையாக்கியுள்ளது. இதனால் பியூச்சர் குரூப் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் இந்தப் பிரச்சனை தீர்க்கப்படுவதும் தற்போது சந்தேகமாகவே உள்ளது.
அமேசான் வழக்கு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் கிஷோர் பியானியின் பியூச்சர் குரூப் இடையிலான 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் ரத்துச் செய்யக் கோரி அமேசான்.காம்-இன் தாய் நிறுவனம் அமேசான், சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் (SIAC) சில வாரங்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்து அதில் வெற்றிப் பெற்றது.
இதன் எதிரொலியாக இந்தியச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பியூச்சர் குரூப் பங்குகள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
அமேசான் - பியூச்சர் குரூப் ஒப்பந்தம்
2019ல் அமேசான் நிறுவனம், பியூச்சர் குரூப் குழுமத்தின் கிளை மற்றும் ஹோல்டிங் நிறுவனமான பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் சுமார் 1,500 கோடி ரூபாய் முதலீட்டில் 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியது.
இந்த 49 சதவீத பங்குகள் மூலம் அமேசான், பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தில் மறைமுகமாக 7.3 சதவீத பங்குகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. இந்தப் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் கீழ் தான் உணவு மற்றும் மளிகை பொருட்களின் வர்த்தகம், பிக் பஜார் மற்றும் ஈசிடே ஆகிய வர்த்தகங்கள் உள்ளது.
ஒப்பந்தத்தில் செக்
அமேசான் - பியூச்சர் குரூப் மத்தியில் நடந்த இந்த 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் அமேசான், பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உட்படச் சுமார் 15 நிறுவனங்களை வெளிப்படையாகவே குறிப்பிட்டு, இந்த நிறுவனங்கள் எந்தக் காரணத்திற்காகவும் பங்குகளையோ, வர்த்தகத்தையோ கைப்பற்றக் கூடாது எனக் குறிப்பிட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
15 நிறுவனங்கள்
இந்த ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்டரீஸ், வால்மார்ட், அலிபாபா, சாப்ட்பேங்க், கூகிள், நேஸ்பர்ஸ், ஈபே, டாக்கெட், பேடிஎம், சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய நிறுவனங்களின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கான ஆதாரத்தை அமேசான் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் (SIAC) சமர்ப்பித்துள்ளது.
புதிய பிரச்சனை
இந்த ஆதாரத்தை அமேசான் வெளிப்படையாகச் சமர்ப்பித்துள்ள நிலையில் 24,713 கோடி ரூபாய் மதிப்பிலான பியூச்சர் குரூப் உடனான ரிலையன்ஸ் ரீடைல் ஒப்பந்தம் முறிவடையுமா என்ற கேள்வியும் எழுகிறது.
கடந்த வாரம் சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தின் தீர்ப்புகள் இந்திய சட்டதிட்டங்களுக்குப் பொருந்தாது எனவும், இந்தத் தடை உத்தரவை இந்திய கட்டுப்பாட்டு ஆணையம் ஏற்க கூடாது எனவும் பியூச்சர் குரூப் கடிதம் அனுப்பியது. இதேபோல் அமேசானுக்கு எதிராக இந்திய நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவும் தயார் எனவும் கிஷார் பியானி தெரிவித்தார்.
கிஷோர் பியானி
அமேசான் - பியூச்சர் குருப் இடையிலான இந்த 1,500 கோடி ரூபாய் ஒப்பந்தம் மூலம் அடுத்த 3 முதல் 10 வருடத்தில் அமேசான் பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுத் தான் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமேசான் உடனான ஒப்பந்தம் செய்யப்பட்டும் போது பியூச்சர் நிதி நெருக்கடியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வர்த்தகப் போட்டியின் காரணமாகவும், நிதி நெருக்கடி, கடன் பிரச்சனை ஆகியவற்றின் காரணமாகப் பியூச்சர் குருப் தலைவர் கிஷோர் பியானி அவசர அவசரமாகப் பங்குகளை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதிய
பியூச்சர் குரூப் வர்த்தகத்தை அமேசான் வாங்க முயற்சித்துக் கொண்டு இருக்கும் வேளையில் ரிலையன்ஸ் இந்நிறுவன வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றியுள்ளது. அமேசானுக்கு முன்பாக ரிலையன்ஸ் முந்திக் கொண்டு தற்போது புதிய பிரச்சனையில் சிக்கியுள்ளார் முகேஷ் அம்பானி.