டெல்லி : நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோகம் காரணமாக, தங்கள் வருவாயை வாரி குவித்து வருகின்றன ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள். இந்த நிலையில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் உச்சத்தில் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் இந்த இரு நிறுவனங்களுக்கும் போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஆன்லைன் சில்லறை வர்த்தக விற்பனையை ஆரம்பிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிலும் தற்போது இந்த ஆன்லைன் வியாபாரங்கள் களைகட்டி வரும் நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் இதில் காலடி எடுத்து வைத்தால், மற்ற நிறுவனங்கள் காணமல் போக கூட வாய்ப்புகள் உண்டு.
ஆன்லைன் வர்த்தகத்தில் காலடி வைக்கும் ரிலையன்ஸ்
ஏனெனில் பொதுவாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும், அதில் தான் தனிகாட்டு ராஜவாக வலம் வருவது குறிப்பிடத்தக்கது. உதாரணத்துக்கு ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் பல தொலைத் தொடர்பு நிறுவனங்கள் காணமல் போயின. குறிப்பாக நிறைய ஆஃபர்கள் மற்றும் தள்ளுபடிகள் என வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தும் ரிலையன்ஸ், ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் மட்டும் என்ன சும்மாவா விட்டு விடும்.
வலுக்கும் போட்டி
எந்த துறையானலும் அதில் தனித்து நின்று ஒற்றையாளாய் ஜெயிக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இது, இந்த ஆன்லைன் சில்லறை வர்த்தகம் ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கே கடுமையான போட்டி என்றும் கருதப்படுகிறது. ஆக அடுத்த 2020ம் ஆண்டு வரும் தீபாவளி மற்ற ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்களுக்கு மோசமான ஆண்டாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது.
நடப்பு ஆண்டு பரவாயில்லை
நடப்பு ஆண்டில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய இரு நிறுவனங்களுமே, விழாக்கால விற்பனையில் விற்பனையில் பெரும் சாதனை படைத்தன. இதனால் வருவாயையும் அள்ளின. இந்த நிலையில் 2019ம் ஆண்டின் பிற்பகுதி இந்த இரு நிறுவனங்களுக்கும் அவ்வளவு மோசம் இல்லை என்றும் கூறப்படுகிறது. எனினும் வரவிருக்கும் ஆண்டின் பிறபாதி அப்படி இருக்குமா என்பது சந்தேகம் தான்.
இமாலய விற்பனை
ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 19,000 கோடி ரூபாய்) மதிப்பில் விற்பனையை வெறும் ஒரு வாரத்தில் செய்துள்ளன. தீபாவளிக்கு முந்தைய செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை இந்த விற்பனை இலக்கை எட்டியுள்ளதாகவும், பெங்களூருவைச் சேர்ந்த ரெட்சீர் கன்சல்டிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நுழைவு
ஏற்கனவே நீயா நானா என போட்டி போட்டுக் கொண்டு அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் லாபத்தை அள்ளி வரும் நிலையில், அடுத்த ஆண்டு தீபாவளிக்குள் இந்திய ஆன்லைன் சில்லறை சந்தையில் ரிலையன்ஸ் நிறுவனம் நுழையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஆண்டு அமேசான், பிளிப்கார்டுகளுக்கு கொஞ்சம் மோசமான காலமாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சலுகையில் ராஜாதான்?
ஏற்கனவே சலுகை தள்ளுபடியில் தனிகாட்டு ராஜவாக திகழும் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு இந்த நிறுவனங்களின் போட்டி அவ்வளவு பெரியதாக இருக்கும் என்றும் தோன்றவில்லை. ஆக அடுத்த ஆண்டு மிக கலக்கலான பொலிவுடன் மளிகை பிரிவில் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ் நுழையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மற்ற நிறுவனங்களுக்கு கவலையை அளிக்கும் என்றும் இத்துறை சேர்ந்த அதிகாரிகள் கூறுகின்றனர்.
சில்லறை வர்த்தகத்தில் ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் சில்லறை நிறுவனம் 6,600க்கும் மேற்பட்ட நகரங்களில் 10,415 கடைகளை இயக்கி வருகிறது. இது மேலும் வலுவான அடிப்படை தளமாக ரிலையன்ஸூக்கு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தனது உணவு மற்றும் மளிகை பயன்பாட்டை சோதனைக்காக தனது ஊழியர்களிடையே அறிமுகப்படுத்தியுள்ளது.
எது எப்படியாக இருந்தாலும், ரிலையன்ஸ் இந்தியாவை சேர்ந்த நிறுவனம் என்பதால், இதனால் இந்தியாவின் வருமானம் பெருகும். மேலும் இதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். இதெல்லாவற்றையும் விட இந்திய சிறு குறு மொத்த வியாபாரிகளுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.