இந்திய ரீடைல் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் அமேசான் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இத்துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தை வாங்க போட்டிப்போட்டு வந்தனர்.
அமேசான் ஏற்கனவே பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் உடன் முதலீடு செய்து பங்குகளை வைத்திருக்கும் நிலையில் பியூச்சர் குரூப் கட்டுப்பாடுகளை மீறி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து அமேசானும், அமேசானுக்கு எதிராகப் பியூச்சர் குரூப்-ம் மாறி மாறி வழக்கு தொடுத்து வருகிறது. இந்நிலையில் தற்போது முக்கியமான திருப்பம் ஏற்பட்டு உள்ளது.
அமேசான் - பியூச்சர் கூப்பன்ஸ்
டிசம்பர் 17ஆம் தேதி CCI அமைப்பு அமேசான் உண்மையை மறைத்து பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதால், இந்த ஒப்பந்தம் ரத்துச் செய்யப்படுகிறது என அறிவித்துள்ளது. அமேசான் நிறுவனம் 2019 ஒப்பந்தத்தில் அதன் உண்மையான நோக்கம் மற்றும் விவரங்களையும் மறைத்து பொய்யான விபரங்களைக் கொடுத்து ஒப்புதல் பெற்றுள்ளது.
சிசிஐ அமைப்புத் தீர்ப்பு
இதனால் CCI அமைப்பு பியூச்சர் கூப்பன்ஸ் மற்றும் அமேசான் மத்தியில் நடந்த ஒப்பந்தத்தை மீண்டும் புதிதாக ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது எனவும், மறு ஆய்வு செய்து ஒப்புதல் அளிக்கும் வரையில் இரு நிறுவனங்களுக்கும் மத்தியிலான ஒப்பந்தம் தடையாக இருக்கும் எனச் சிசிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
200 மில்லியன் டாலர் முதலீடு
அமேசான் நிறுவனம் பியூச்சர் ரீடைல் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பியூச்சர் கூப்பன்ஸ் நிறுவனத்தில் 200 மில்லியன் டாலர் தொகையை முதலீடு செய்து 49 சதவீத பங்குகளைக் கைப்பற்றியதன் நோக்கம் இந்நிறுவனத்தை மறைமுகமாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதாக உள்ளது.
CAIT அமைப்பு
இது முற்றிலும் தவறு எனப் பியூச்சர் கூப்பன்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் CAIT அமைப்புக் குற்றம்சாட்டியது, சிசிஇ அமைப்பு ஆய்வு செய்து தீர்ப்பு அளித்துள்ளது. அமேசான் மேலும் வழக்குத் தொடுக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.
200 கோடி அபராதம்
சிசிஐ அமைப்பு 200 கோடி ரூபாய் அளவிலான அபராதம் மட்டும் அல்லாமல், தனது தரப்பு வாதத்தையும், ஒப்பந்தத்தின் முழுமையான விபரத்தையும் சமர்ப்பிக்கக் கால அவகாசம் கொடுத்துள்ளது. 200 கோடி ரூபாய் அபராதம் என்பது அமேசானுக்குப் பெரிய தொகை இல்லை என்றாலும், இதன் மூலம் இந்நிறுவனத்திற்குப் பெரும் அவமானத்தையும் பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தும்.
சிசிஐ மறு ஆய்வு முடிவுகள்
சிசிஐ-யின் மறு ஆய்வு முடிவுகள் பல மாதங்களாக இந்தியா மற்றும் சிங்கப்பூரில் நடக்கும் வழக்குகளுக்கு முடிவு எடுக்கப்படும், இதன் மூலம் ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் குரூப் - அமேசான் மத்தியிலான பிரச்சனை முடிந்து ரிலையன்ஸ் ரீடைல் - பியூச்சர் ரீடைல் மத்தியிலான 24500 கோடி ரூபாய் வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.