ரிசர்வ் வங்கி தலைமையில் உருவாக்கப்பட்ட தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அமைப்பிற்குப் போட்டியாக இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சந்தையில் அமேசான், ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இணைந்து ஒரு புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டிஜிட்டல் பேமெண்ட் சந்தையின் அடித்தளமாக விளங்கும் யூபிஐ பேமெண்ட் முறையை நிர்வாகம் செய்யும் அமைப்பு தான் இந்தத் தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா. இந்த அமைப்பிற்குப் போட்டியாக ஒரு தனியார் அமைப்பை உருவாக்க ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துள்ள நிலையில் அமேசான் மாபெரும் கூட்டணியை உருவாக்கியுள்ளது.
இதேவேளையில் அமேசானுக்குப் போட்டியாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவும், டாடாவும் இத்துறையில் இறங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அமேசான் திட்டம்
அமெரிக்காவின் முன்னணி ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அமேசான்.காம் இந்திய கிளையான அமேசான் இந்தியா உடன் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, பேமெண்ட் சேவை நிறுவனங்களான பைன் லேப்ஸ் மற்றும் பில் டெஸ்க் ஆகிய ஐந்து பேரும் இணைந்து டிஜிட்டல் பேமெண்ட் பரிமாற்றங்களை நிர்வாகம் செய்வதற்காக NPCI அமைப்பிற்கு இணையாக New Umbrella Entity (NUE) உருவாக்க முடிவு செய்துள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு
இந்தத் திட்டம் குறித்து அமேசான் இந்தியா, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை இணைந்து ரிசர்வ் வங்கியிடம் அடுத்த சில நாட்களில் விவரிக்க உள்ளது. மேலும் இந்தியாவில் புதிதாக New Umbrella Entity (NUE) உருவாக்குவதற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கக் கடைசி நாள் நெருங்கிவிட்ட நிலையில் இதை உடனடியாகச் செய்யத் திட்டமிட்டுள்ளது இந்தக் கூட்டணி.
இந்தத் தனியார் அமைப்பின் திட்டத்திற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தால் மாதம் 2 பில்லியன் எண்ணிக்கையிலான வர்த்தகம் செய்யப்படும் யூபிஐ-ஐ ஆதிக்கம் குறையும்.
NPCI அமைப்பு
ரிசர்வ் வங்கியால் 2008ஆம் ஆண்டு இந்தியாவில் ரீடைல் பேமெண்ட் மற்றும் செட்டில்மென்ட் பணிகளைச் செய்ய ஒரு லாபமற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டது தான் இந்தத் தேசிய பேமெண்ட் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா அமைப்பு.
NPCI அமைப்பு இந்தியாவில் 56 வங்கிகளின் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் சேவைக்கு உதவி செய்கிறது. இதுமட்டும் அல்லாமல் யூபிஐ, ரூபே, பாஸ்டேக் பேமெண்ட் ஆகியவற்றையும் நிர்வாகம் செய்கிறது.
ரிசர்வ் வங்கி கண்டிஷன்
இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய பேமெண்ட் சந்தையில் புதிய டெக்னாலஜியை கொண்டு வரும் நோக்கில் New Umbrella Entity (NUE) அமைப்பதற்கான விதிமுறை மற்றும் வழிமுறையைக் கொண்டு வந்தது.
இப்புதிய நிறுவனம் NPCI அமைப்புடன் போட்டிப்போடவோ அல்லது அமைப்பை அப்படியே காப்பி அடிக்கவோ கூடாது, அமைப்புடன் இணைந்து செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு
ரிசர்வ் வங்கியின் NUE அமைப்பு அமைக்கும் முடிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் ரிசர்வ் வங்கி யூபிஐ-யை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்றும் பேமெண்ட் துறையில் புதிய தொழில்நுட்பம் வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த அமைப்பை அமைக்க முடிவு செய்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளுக்குத் தடை
இந்நிலையில் மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் இப்புதிய முயற்சியில் பொதுத்துறை வங்கிகளை ஈடுபட வேண்டும் என அறிவித்துவிட்ட நிலையில் தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் மட்டுமே தற்போது இந்த NUE அமைப்பை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
ரிலையன்ஸ் மற்றும் டாடா
இந்நிலையில் NUE அமைப்பை உருவாக்குவதற்காக ரிலையன்ஸ் ஜியோ கூகுள் மற்றும் பேஸ்புக் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதேபோல் டாடா குழுமமும் இத்துறையில் இறங்கத் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.