முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் அதன் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக தொடர்ந்து பல அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.
பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு தடுப்பூசி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நிவாரணம், கொரொனாவினால் இறந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் என பல உதவிகளை வாரி வழங்கி வருகின்றன.
அதே போல மக்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள நிறுவனங்களும், அரசும் பல வகையிலும் அறிவித்து வருகின்றன.
அமேசானின் அதிரடி அறிவிப்பு
சில ஊழியர்கள் தடுப்பூசி போட்டால் தான் அலுவலகம் வர வேண்டும். சம்பளம் கொடுக்கப்படும், என பல்வேறு வகையான அதிரடியான அறிவிப்புகளையும் கொடுத்து வருகின்றன. சில நிறுவனங்கள் ஒரு படி மேலே போய் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டால், பல சலுகைகளையும் வழங்கி வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் அதிரடியான அறிவிப்பினை பற்றித் தான் பார்க்க விருக்கிறோம்.
ஊழியர்களுக்கு சலுகை
அமேசான் நிறுவனம் அதன் முன்னிலை ஊழியர்களுக்கு ஒரு பிரம்மாண்ட அறிவிப்பினைக் கொடுத்துள்ளது. அதன் ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கும் விதமாக இப்படியொரு அறிவிப்பினைக் கொடுத்துள்ளது. அதன் படி தடுப்பூசி போடுக் கொண்ட அதன் ஊழியர்களுக்கு, ஒரு லாட்டரி முறையில் பரிசினை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேக்ஸ் யுவர் வாக்ஸ் - போட்டி
மேக்ஸ் யுவர் வாக்ஸ் என்ற இந்த போட்டியானது ஊழியர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த போட்டியில் அதன் கிடங்கு மற்றும் லாகிஸ்டிக்ஸ் ஊழியர்கள், அதன் உணவு சந்தையில் பணிபுரியும் ஊழியர்கள் என அனைவரும் அடங்குவர் எனவும் தெரிகிறது.
என்னென்ன பரிசுகள்
இதுகுறித்து ப்ளூம்பெர்க் வெளியிட்ட தகவலின் படி, ஏறக்குறைய 2 மில்லியன் டாலர் மதிப்புடைய 18 பரிசுகளை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த போட்டியில் இரண்டு 5,00,000 டாலர்களும், ஆறு பேருக்கு 1,00,000 டாலர்களும், புதிய வாகனங்கள், 5 விடுமுறை பேக்கேஜ்கள் என பலவும் அடங்கும் என தெரிவித்துள்ளது. மொத்தத்தில் ஊழியர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள இது ஊக்கமாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி கட்டாயம்
எனினும் அமேசான் தரப்பில் இது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. டிஸ்னி மற்றும் வால்மார்ட் உள்ளிட்ட மிகப்பெரிய நிறுவனங்களும் ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என அறிவித்துள்ளன. எனினும் அமேசான் இதுவரையில் கட்டாயம் என அறிவிக்கவில்லை. அமேசான் ஊழியர்கள் கொரோனா காலத்திலும் கூட பணியாற்றியுள்ளனர்.
ஊழியர்களுக்கு ஊக்கம்
இந்த நிலையில் தான் அமேசான் அதன் ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் தடுப்பூசிகளை வழங்கியது. எனினும் ஜூலை மாதத்தில் இந்த சேவை நிறுத்தப்பட்டது. அமேசான் மற்ற நிறுவனங்களை போல தடுப்பூசி கட்டாயம் என்பதை விட, அமேசானின் இந்த அறிவிப்பானது ஒரு ஊக்கமாக அமையும். இது ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட ஊக்கப்படுத்தும் என நிறுவனம் தரப்பில் கூறப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
எனினும் தற்போது அமெரிக்காவில் உருமாற்றம் அடைந்து பரவி வரும் டெல்டா வகையான கொரோனாவின் காரணமாக, அமேசான் ஆகஸ்ட் 9ல் இருந்து முகக்கவசம் கட்டாயம் என அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பற்பல நிறுவனங்களும் ஊழியர்களை அலுவலகம் வர கூறிய நிலையில், தற்போது மீண்டும் அதனை தள்ளி வைத்துள்ளன.
ஆபீஸ் வரும் முன் இதை செய்யுங்க
முன்னணி நிறுவனங்களான ஆல்பாபெட் இன்க், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக் கொண்டு அலுவலகத்திற்கு வர கூறியுள்ளன. ஏற்கனவே அலுவலகத்திற்கு வரும் ஊழியர்களுக்கு தடுப்பூசியினை கட்டாயமாக்கியிருந்த லிஃப்ட் இன்க் நிறுவனம், செப்டம்பர் மாதம் திறப்பதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் இதனை பிப்ரவரி மாதம் வரையில் மீண்டும் தள்ளி வைத்துள்ளது.
மாஸ்க் கட்டாயமா?
நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதன் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவித்துள்ளது. இதே போல ஆப்பிள் இன்க் நிறுவனமும், அதன் சில்லறை வர்த்தக கடைகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரும், தடுப்பூசியே போட்டிருந்தாலும் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் கூறுகின்றன.
மொத்தத்தில் அமேசானின் இந்த அறிவிப்பு ஊழியர்களை ஊக்குவிக்கும் என்பதோடு, ஊழியர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கும்.