கொரோனா காரணமாக மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்க அதிகளவில் வெளியில் செல்ல முடியாத காரணத்தால், தற்போது ஈகாமர்ஸ் தளத்தை மக்கள் அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இந்த லாக்டவுன் காலத்தில் பெரு நகரங்களைத் தாண்டி 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களில் இருந்து ஈகாமர்ஸ் தளத்திற்குப் புதிய வாடிக்கையாளர்கள் வந்துள்ளது. இதேபோல் நகரங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியப் பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையும் மோசமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையிலும் ஈகாமர்ஸ் துறை லாக்டவுனுக்கு முந்தைய அளவில் 71 சதவீத வர்த்தகத்தைத் திரும்பப் பெற்றுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் தான் தீபாவளி பண்டிகை வருகிறது, இதைச் சிறப்பாகப் பயன்படுத்தி இந்திய ரீடைல் சந்தையைப் பிடிக்க வேண்டும் என அனைத்து முன்னணி நிறுவனங்களும் திட்டமிட்டு, மிகப்பெரிய அளவில் தயாராகி வருகிறது. இதற்காக இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமாக இருக்கும் அமேசான் சுமார் 1,125 கோடி ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்ய உள்ளது.
அமேசான்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஈகாமர்ஸ் மற்றும் டெக்னாலஜி நிறுவனமான அமேசான் இந்தியாவில் புதிதாக 1,125 கோடி ரூபாய் அளவிலான தொகையைத் தனது அமேசான் செல்லர் சர்வீசஸ் பிரிவில் முதலீடு செய்துள்ளது.
மக்களின் நிலை
தீபாவளி பண்டிகை அடுத்த சில வாரங்களில் வர உள்ள நிலையில், கொரோனா காரணத்தால் இந்திய மக்கள் பண்டிகை கால ஷாப்பிங்கிற்கு அதிகளவில் ஈகாரமஸ் நிறுவனங்களையே சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என நாட்டின் அனைத்து முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களும் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனைக்குத் தயாராகியுள்ளது.
போட்டி
ஏற்கனவே இந்திய ரீடைல் சந்தையைக் கைப்பற்ற வால்மார்ட் தலைமையிலான பிளிப்கார்ட் கூட்டணி நிறுவனங்களும், முகேஷ் அம்பானியின் ஜியோ மார்ட், அமேசான் மத்தியில் கடுமையான போட்டி நிலவி வரும் வேளையில், அமேசான் நிறுவனத்தின் இந்த 1,125 கோடி ரூபாய் அளவிலான முதலீடு பண்டிகை கால விற்பனையில் மிகப்பெரிய போட்டியை உருவாக்கும் என்பது திட்டவட்டமாகத் தெரிகிறது.
முதலீடுகள்
அமேசான் ஜனவரி மாத இந்தியச் சந்தையில் தனது வர்த்தக விரிவாக்கத்திற்காக 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்தது. இதில் 2,310 கோடி ரூபாயை ஜூன் மாதத்தில் முதலீடு செய்த நிலையில் தற்போது புதிதாக 1,125 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
இதேபோல் பிளிப்கார்ட் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யச் சுமார் 1.2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை திரட்டப்போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஜியோ மார்ட் தளத்தை அறிமுகம் செய்த பின்பு ரீடைல் வர்த்தக அடித்தளத்தை வலிமையாக்க சுமார் 24,713 கோடி ரூபாய் முதலீடு செய்து பியூச்சர் குரூப் வர்த்தகத்தை மொத்தமாகக் கைப்பற்றியது.