உலக நாடுகளில் தற்போது கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், தள்ளு வண்டியில் செய்யும் வர்த்தகம் முதல் தங்கம் வர்த்தகம் செய்யும் வர்த்தகம் வரையிலும் அனைவரும், கொரோனாவினால் நிச்சயம் பாதிப்பினை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் இதற்கு மத்தியில் ஒர் ஆய்வறிக்கை ஒன்று வெளி வந்துள்ளது. அது யார் எப்போது டிரில்லியன் என்பது தான்.
அதன்படி, அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெஃப் பெசோஸ் 2026ம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனராகக் கூடும் என்றும், அது அவரின் 62வது வயதில் இருக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு
இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் அவரது சமீபத்திய விவாகரத்தின் ஒரு பகுதியாக 38 பில்லியன் டாலர்களை இழந்த போதிலும், பெசோஸ் இன்னும் உலகின் பணக்காரர் ஆக இருந்து வருகிறார். மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் அவரது நிகர மதிப்பு சராசரியாக 34 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் Comparisun என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க் எப்போது இந்த வாய்ப்பு?
இதே பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் பெசோஸை விட, கிட்டதட்ட ஒரு தசாப்தத்திற்கு பிறகே டிரில்லியனர் இடத்தினை பிடிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஜூக்கர்பெர்கின் தற்போதைய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, அவரின் 51 வயதில் தான் டிரில்லியன் டாலர் மதிப்பினை அடைவார் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகேஷ் அம்பானிக்கு டிரில்லியனர் வாய்ப்பு?
இதே இந்தியாவின் முதல் பணக்காரர் ஆன அண்ணன் முகேஷ் அம்பானியோ, 2033ம் ஆண்டில், அவருக்கு 75 வயதாகும் போது ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பினை அடைவார் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதே சீனாவின் ரியல் எஸ்டேட் அதிபர் சூ ஜியாயின் பெசோஸைப் பின் தொடர்ந்து 2027ல் உலகின் இரண்டாவது டிரில்லியனராக மாறுவார் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அலிபாபாவின் ஜாக்மா?
இதே சீனாவின் மிகப்பெரிய நிறுவனமான அலிபாபாவின் ஜாக்மா 2030ம் ஆண்டில் ஒரு டிரில்லியனராக மாறக்கூடும். அப்போது அவரின் வயது 65 ஆக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறுவனம் பகுப்பாய்வு செய்த 25 நபர்களில், 11 பேருக்கு மட்டுமே, அவர்களது வாழ் நாளில் டிரில்லியனர் ஆக வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இது அவர்களது சமீபத்திய செல்வ வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னும் யாரெல்லாம் லிஸ்டில்?
இந்த பட்டியியலில் டென்சென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி Ma Huateng, பெர்னார்ட் அர்னால்டு, மொயட் ஹென்னெஸியின் தலைமை நிர்வாக அதிகாரி, மைக்ரோசாப்டின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் பால்மர், டெல் டெக்னாலஜியின் நிறுவனர் மைக்கேல் டெல், கூகுளின் இணை நிறுவனர்கள் லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் உள்ளிட்டோர் இதில் அடங்குவர்.