ஒரு வழியாக ஷாப்பிங் திருவிழா இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது. ஆனால் இந்த திருவிழா காலத்தில் கஷ்டப்பட்ட ஊழியர்களுக்கு, காது குளிர ஒரு நல்ல விஷயத்தினை அறிவித்துள்ளது அமேசான்.
அது அடுத்த ஆண்டு ஜூன் 2021 வரை அமேசான் ஊழியர்கள் வீட்டில் இருந்தே அதன் ஊழியர்கள் பணிபுரியலாம் என்பது தான்.
இது குறித்து அமேசான் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக ஊழியர்கள் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான, காலக்கெடுவை நீடிக்கிறது.
அடுத்த ஆண்டு ஜூன் வரை WFH தான்
அதாவது வீட்டில் இருந்தே திறம்பட பணிபுரியும் ஊழியர்கள், மீண்டும் அலுவலகத்திற்கு திரும்புவதற்கான காலக்கெடுவை அமேசான் நீடித்துள்ளது. இது சர்வதேச அளவில் பொருந்தும் என்றும் கூறியுள்ளது. முன்னதாக அமேசான் ஜனவரி வரை தனது விருப்பத்தினை அறிவித்தது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான இது, அதன் ஊழியர்களில் 19,000 பேருக்கு கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்?
சமீபத்திய மாதங்களில் சில ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள், கொரோனா பெருந்தொற்று நோயின் போது கிடங்கு திறந்து வைத்திருப்பதன் மூலம், அமேசான் அதன் ஊழியர்களின் ஆரோக்கியத்தை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் கூறினர். மேலும் அலுவலகத்திற்கு வரவிரும்பும் ஊழியர்கள், சமூக இடைவெளி, கை கழுவுதல், வெப்ப நிலை சோதனைகள் என பலவற்றிற்கும், குறிப்பிடத்தக்க நிதியினை அமேசான் ஒதுக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
ட்விட்டர் சலுகை
கடந்த மே மாதத்தில் ட்விட்டர் நிறுவனம் அதன் ஊழியர்களை காலவரையின்றி, வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்கும் என்றும் கூறியது. இதற்கிடையில் மற்ற டெக் ஜாம்பவான்களான மைக்ரோசாப்ட் கார்ப் நிறுவனங்களும் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதை அதிகப்படுத்தியுள்ளது.
பேஸ்புக்கின் சலுகை
இதே பேஸ்புக் நிறுவனமும் அடுத்த ஆண்டு ஜூலை வரை, அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறியுள்ளது. இதே கூகுள் நிறுவனமும் அடுத்த ஆண்டு ஜூன் வரையில் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் தாம் ஆன்லை இ-காமர்ஸ் ஜாம்பவான் ஆன அமேசான் நிறுவனமும் வீட்டில் இருந்து பணிபுரிய ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.