டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் 5000 எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
மத்திய அரசு ஜூலை 1 முதல் ஒரு சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற அறிவிப்பு வெளியானதிலிருந்து அமேசான் பல முக்கிய மாற்றங்களை செய்துள்ளது.
மத்திய அரசின் சுற்றுச்சூழல் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தரும் வகையில் அமேசான் எடுத்த மாற்று நடவடிக்கைகள் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
பிளாஸ்டிக் தடை
இந்தியாவில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற அறிவிப்பு வெளிவந்த உடனே அமேசான் நிறுவனம் காலநிலைக்கு ஏற்ப நடைமுறைகளை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பேக்கேஜ் செய்வது, மின்சார வாகனங்களை பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் வாடிக்கையாளர்களையும், இந்திய அரசையும் பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமேசான் இந்தியாவின் இயக்குனர் அபினவ் சிங் அவர்கள் கூறியுள்ளார்.
அமேசான்
2020 ஆம் ஆண்டு முதன் முதலில் நாங்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் விலக்கி விட்டோம் என்றும், கடந்த ஆண்டு பிற்பகுதியில் பிளாஸ்டிக் அஞ்சல் அனுப்பும் முறையில் இருந்தும் விலகி விட்டோம் என்றும் அபினவ் சிங் தெரிவித்துள்ளார்.
காகித நாடாக்கள்
பழுப்பு நிற பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காகித நாடாக்களை தான் தற்போது பயன்படுத்துகிறோம் என்றால் அது மட்டுமின்றி பேக்கேஜிங் இல்லாமல் ஷிப்மென்ட் செல்ல முடியுமா என்பதை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
டாடாவுடன் ஒப்பந்தம்
2025ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 10,000 எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்றும் குறிப்பாக சமீபத்தில் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்துடன் 5000 எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
மேலும் இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் நாங்கள் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் எங்களது வாகனங்களை பரிசோதனை செய்வது, பேட்டரிகளை மாற்றுவது, தரத்தை பரிசோதனை செய்வது போன்ற பணிகளுக்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் என்று அபினவ் சிங் தெரிவித்துள்ளார்.
சன் மொபிலிட்டி
மேலும் இந்தியாவில் உள்ள எங்கள் நெட்வொர்க் முழுவதும், எங்களின் சில வசதிகளுக்காக சன் மொபிலிட்டி பேட்டரி ஸ்வாப்பிங் ஸ்டேஷனை பயன்படுத்தியுள்ளோம். டெல்லி என்சிஆர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீர்வாக பேட்டரிகளை மாற்ற முடிவு செய்தோம், இதனை நாடு முழுவதும் செய்ய போகிறோம்.
ரயில்வே துறையுடன் ஒப்பந்தம்
மேலும் பொருட்களை டெலிவரி செய்வதற்கு டிரக்குகளுக்கு பதிலாக ரயிலில் கொண்டு செல்வதற்காக இந்திய ரயில்வே உடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என்றும், சாலை மார்க்கத்தை விட ரயில் போக்குவரத்து மிகவும் ஆற்றல் கொண்டதாக இருப்பதால் ரயில் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முழு ஒத்துழைப்பு
இந்திய அரசாங்கம் எடுத்து வரும் பிளாஸ்டிக் தடை நடவடிக்கைகளுக்கு எங்கள் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்தியர்களின் நலனில் எங்களுக்கு முழு அக்கறை உண்டு என்றும் அபினவ் சிங் மேலும் தெரிவித்துள்ளார்.