உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமாக உருவெடுத்திருக்கும் அமேசான்.காம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜூலை 5ஆம் தேதி பதவியேற்கும் ஆன்டி ஜேசி-க்கு அமேசான் நிர்வாகம் தனது சம்பளத்தைத் தாண்டி கூடுதலாக 200 மில்லியன் டாலர் பங்குகளை அளிக்க முடிவு செய்துள்ளது.
ஜூலை 5ஆம் தேதி அளிக்கப்படும் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான சுமார் 61,000 பங்குகளை அடுத்த 10 வருடத்திற்குப் பிரித்து ஆன்டி ஜேசி-க்கு அளிக்க அமேசான் நிர்வாகம் முடிவு செய்தது. வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்த 61000 பங்குகளின் மதிப்பு 214 மில்லியன் டாலர்.
1994ஆம் ஆண்டுத் துவங்கப்பட்ட அமேசான்.காம் நிறுவனத்தில் முதல் முறையாக 2021 ஜூலை 5ஆம் தேதி சீஇஓ பதவியில் புதிதாக ஒருவர் நியமிக்கப்பட உள்ளார். இந்த மாற்றம் அமேசான் நிறுவனத்திற்கும், அதன் வரலாற்றுக்கும் மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
1.77 டிரில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான்.காம் சாம்ராஜ்ஜியத்தைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்காக ஊக்கப்படுத்தும் வகையில் இந்த 200 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை அளிக்க உள்ளது.