இந்தியா போன்ற மிகப்பெரிய ரீடைல் சந்தையைக் கைப்பற்ற யாருக்குத் தான் ஆசை இருக்காது. அதுவும் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் இந்திய ரீடைல் சந்தையைப் பிடிப்பதில் மிகப்பெரிய போட்டி நிலவுவது அனைவருக்கும் தெரியும். எந்தத் துறை எடுத்தாலும், எந்தச் சேவை எடுத்தாலும் குறைந்தது 3 நிறுவனங்கள் அப்பிரிவில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தப் போட்டி தற்போது மொத்த ரீடைல் சந்தையிலும் இருமுனை போட்டியாக மாறும் நிலை உருவாகியுள்ளது. ஆம் கடந்த சில மாதங்களாக இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரீடைல் வர்த்தகப் பிரிவில் மிகப்பெரிய அளவிலான வர்த்தக விரிவாக்கம் செய்து வரும் நிலையில், தனது ஜியோ தளத்தை அனைத்து சேவைகளுக்கும் ஒன் ஸ்டாப் சொல்யூஷனாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் முகேஷ் அம்பானி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜியோவுக்குப் போட்டியாக அமெரிக்க நிறுவனமான அமேசானும் தனது வேலையைக் காட்டு துவங்கியுள்ளது.
முதலில் பார்மா..
சில வாரங்களுக்கு முன்பாகவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆன்லைன் மருந்து விற்பனையில் இறங்க முடிவு செய்யுள்ளதாகவும், அதற்காகச் சென்னையைச் சேர்ந்த Netmeds நிறுவனத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தமிழ்குட்ரிட்டன்ஸ் தளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்நிலையில் இன்று Netmeds நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளைச் சுமார் 620 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் இந்த முடிவிற்குப் போட்டியாக அமேசான் நிறுவனமும் தனது ஈகாமர்ஸ் தளத்தில் புதிதாக மருந்து விற்பனை சேவையை அடுத்த சில வாரத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்தது.
அடுத்தடுத்த சேவைகள்
இந்தியாவில் ஜியோவின் அதிரடி வர்த்தக விரிவாக்கத்தைப் பார்த்து மிரண்டு போன அமேசான், ரிலையன்ஸ் ஜியோ சேவைகளுக்கு இணையான ஒரு சேவை தளத்தை உருவாக்க வேண்டும் எனத் திட்டமிட்டுக் கடந்த சில வாரங்களில் கார் மற்றும் மைக் இன்சூரன்ஸ் விற்பனை சேவை, உணவு டெலிவரி சேவையில் அதிரடி விரிவாக்கம் எனப் பல புதிய சேவைகளைத் தனது அமேசான் ஈகாமர்ஸ் தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.
நிதியியல் சேவைகள்
இந்தியாவில் ஆன்லைன் நிதியியல் சேவையில் முன்னணி நிறுவனமாகத் திகழும் பேடிஎம் நிறுவனத்திற்குப் போட்டியாக அமேசான் தனது ஈகாமர்ஸ் தளத்தில் கார் மற்றும் மைக் இன்சூரன்ஸ் விற்பனை சேவையைத் துவங்கிய நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் இன்சூரன்ஸ், ப்ரோக்கிங், மியூச்சவல் பண்ட் சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சீனா தடை
இந்தியாவில் சீன வர்த்தகம் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து அமேசான் மற்றும் ஜியோ அனைத்து விதமான டிஜிட்டல் சேவையிலும் தனது கால்தடத்தைப் பதிக்க முடிவு செய்துள்ளது.
இதில் முகேஷ் அம்பானி ஒரு படி மேல். புதிதாகச் சேவையைத் துவங்கினால் காலதாமதம் ஆகும் என்பதை உணர்ந்து இத்துறையில் முன்னணி நிறுவனங்களை மொத்தமாகவும் அல்லது நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கான பங்குகளை வாங்கித் தனது ஜியோ தளத்துடன் இணைத்து வருகிறார். இதன் காரணமாகவே கடந்த 4 மாதத்தில் பல புதிய சேவைகளை ஜியோ தளத்தில் துவங்கப்பட்டுள்ளது.
மளிகை பொருட்கள்
இந்திய ரீடைல் சந்தையில் 55 சதவீதம் வர்த்தகச் சந்தையைக் கொண்டிருக்கும் மளிகை பொருட்கள் விற்பனை தான் தற்போது ஜியோமார்ட் மற்றும் அமேசானின் முக்கிய இலக்காக உள்ளது.
குறுகிய காலகட்டத்தில் ஜியோமார்ட் இந்தியாவில் சுமார் 200 நகரங்களில் தனது மளிகை பொருட்கள் விற்பனை சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. இதேபோல் அமேசான் தனது Amazon Pantry சேவை மூலம் அடுத்தகட்ட விரிவாக்க பணிகளைச் செய்து வருகிறது.
சோதனை திட்டம்
இன்றைய ஆன்லைன் சேவையில் மிகப்பெரிய சவாலாக விளங்குவது பழம் மற்றும் காய்கறிகள் டெவரி தான். அமேசான் தற்போது விவசாயிகளிடம் இருந்து பழம் மற்றும் காய்கறிகளைப் பெற்று நேரடியாக வாடிக்கையாளர்கள் வீட்டில் டெலிவரி செய்யும் திட்டத்தைச் சோதனை செய்து வருகிறது.
2 மணிநேர டெலிவரி
இதேபோல் ஜியோமார்ட் தளத்திலும் பழம் மற்றும் காய்கறிகளை ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டாலும், இதை ஆர்டர் செய்யப்பட்ட அடுத்த 2 மணிநேரத்தில் டெலிவரி செய்யும் முறையைத் தற்போது சோதனை செய்து வருகிறது. இதோடு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் தற்போது பியூச்சர் குரூப் வர்த்தகத்தைக் கைப்பற்றுவதன் மூலம் தனது ரீடைல் வர்த்தகத் தளத்தை வலிமையாக்க உள்ளது.
ஜியோ Vs அமேசான்
தற்போது இந்தியாவில் ஜியோ மற்றும் அமேசான் மத்தியில் நடக்கும் வர்த்தகப் போர் மிகப்பெரியதாக வெடிக்க உள்ளது. இவ்விரு நிறுவனங்களின் இலக்கும், மக்களின் அனைத்து விதமான சேவைகளைக் கொடுக்கக் கூடிய இடம் தனது நிறுவனமாக இருக்க வேண்டும் என்பது தான்.
அடுத்த சில வருடத்தில் இந்தியாவில் 50 சதவீத ரீடைல் சந்தை இவ்விரு நிறுவனங்கள் கையில் இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
வர்த்தகர்கள்
இந்த மாற்றத்தால் தற்போது இருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் அதிகளவிலான வர்த்தகத்தையும், லாபத்தை இழக்க நேரிடும் என்ற அச்சமும் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இதற்கு முக்கியமான காரணம், தற்போது இந்தியாவில் இண்டர்நெட் தரம் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ள நிலையில் ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் தொடர்ந்து 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்களுக்கு வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகின்றனர். இதனால் நாடு முழுவதிலும் இருக்கும் விற்பனையாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் பாதிக்கப்படுவார்கள்.
இன்று ஸ்விக்கி, சோமேட்டோ, ஓலா போன்ற நிறுவனங்கள் வந்துள்ள நிலையில் நாளை பிற ஆன்லைன் சேவை நிறுவனங்களும் வரும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.