லாஸ் வேகாஸ், அமெரிக்கா: பெரிய பெரிய டெக் நிறுவனங்கள் அனைத்துமே தங்களுடைய அன்றாட வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை அதிகரித்துவிட்டன. ஏஐ ஏஜெண்டுகள் தான் தற்போது நம்முடைய வேலைகளை படிப்படியாக பறிக்க தொடங்கிவிட்டன.
வாடிக்கையாளர் சேவை, கோடிங் , ஹெச்ஆர், என பல வேலைகளும் ஏஐ வசம் சென்று வருகின்றன. இப்படி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய சூழலில் அமேசான் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களுக்கு வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஊழியர்கள் ஒரு மென்பொருள் கருவியாக மட்டும் கருதக்கூடாது என தெரிவித்திருக்கும் அமேசான் நிறுவனம் அதை உங்களுடன் வேலை செய்யக்கூடிய ஒரு சக ஊழியராக அணுக வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அமேசான் வெப் சர்விஸ் நிறுவனத்தின் ஆண்டு கூட்டம் லாஸ் வேகாஸில் நடைபெற்றது.
அப்போது அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள் நிறுவனத்தின் உற்பத்தி திறனில் ஏஐ பெரிய புரட்சியை ஏற்படுத்தப் போகிறது என தெரிவித்தனர். இதன் தலைமை செயல் அதிகாரியான கார்மென் அமேசான் நிறுவனத்தில் ஏஐ தொழில்நுட்ப பயன்பாடு மேலும் அதிகரிக்க போகிறது என்றார்.

இதற்கு முன்பு ஒரு மேஜர் கோடிங்கை திரும்ப எழுதுவதற்கு மனிதர்கள் மட்டுமே வேலை செய்த போது 30 பேர் 18 மாதங்கள் வேலை செய்தார்கள். ஆனால் ஏஐ உதவியோடு ஆறு பேர் மட்டுமே 71 நாட்களில் அந்த வேலையை முடித்தார்கள் என அமேசான் வெப் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்மென் தெரிவித்திருக்கிறார்.
ஏஐ ஏஜெண்டுகள் நம்முடைய வேலை செய்யும் விதத்தை எப்படி எல்லாம் மாற்றப் போகிறது என்பது குறித்து முக்கியமாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது . அப்போது வரும் காலத்தில் பெரும்பாலான பணிகள் ஏஐ வசம் சென்றுவிடும் அந்த வேலையை ஏஐ எப்படி செய்கிறது என்பதை மேற்பார்வையிடும் வேலைகள் மட்டுமே மனிதர்கள் வசம் இருக்கும் என நிறுவன மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏஐ கருவிகளையும் ஏஐ ஏஜெண்டுகளை நீங்கள் ஒரு மென்பொருளாக பார்க்கக்கூடாது என்றும் உங்களுடன் பணியாற்றக்கூடிய ஒரு சக ஊழியராக பார்க்க பழகி கொள்ளுங்கள் என்றும் அப்போது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஏனெனில் வருங்காலத்தில் உங்களின் கீழ் வேலை செய்யப் போவது ஏஐ தான் என்றும் நம்முடைய பாரம்பரியமான பணிச்சூழல் படிப்படியாக தானியங்கு முறைக்கு மாறி வருகிறது என்றும் அப்போது தெரிவித்தனர்.
அண்மையில் தான் அமேசான் நிறுவனம் தங்களுடைய கார்ப்பரேட் ஊழியர்களில் 14,000 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டது. உலகம் முழுவதும் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது .ஏஐ தொழில்நுட்பத்தை மிகத் தீவிரமாக அமல்படுத்துவதே இதற்கு காரணம் என அமேசான் கூறியது. இந்த சூழலில் தான் ஏஐ தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பார்க்காதீர்கள் சக ஊழியராக பார்த்து தொடங்குங்கள் என அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications