இந்தியாவில் டிரான் தயாரிக்கவும், அதன் உற்பத்தியைப் பெரிய அளவில் மேம்படுத்தவும் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி ஆகியோரின் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது.
ஏற்கனவே பல துறைகளில் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானியின் வர்த்தகக் குழுமங்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது டிரோன் தயாரிப்பைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து இந்தியச் சந்தையின் முன்னோடியாகத் திகழ வேண்டும் எனத் திட்டமிட்டு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் இருக்கும் ஏஸ்ட்ரியா ஏரோஸ்பேஸ், அதானி குழுமத்தின் கீழ் இருக்கும் அதானி டிபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ், ஐடியாபோர்ஜ் டெக்னாலஜி, டைனமேட்டிக் டெக்னாலஜிஸ் என 4 நிறுவனங்கள் ட்ரோன் உற்பத்தி அல்லது அசம்பிளி பிரிவை விரிவாக்கம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியா ட்ரோன் மற்றும் அதைச் சார்ந்த வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் பல முக்கியமான தளர்வுகளை அறிவித்துள்ளது. இதன் எதிரொலியாகத் தற்போது 4 முன்னணி ட்ரோன் தயாரிப்பு நிறுவனங்கள் தனது ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
PLI திட்டம்
மேலும் மத்திய அரசு ட்ரோன் தயாரிப்பு மற்றும் உற்பத்தித் துறைக்கும் இந்தியாவில் தற்போது உற்பத்தி நிறுவனங்களுக்கு மிகவும் பிடித்த தளமாக இருக்கும் PLI திட்டத்தை இத்துறைக்கும் வழங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
ட்ரோன் உற்பத்தித் துறை
ட்ரோன் உற்பத்தித் துறைக்கும் PLI திட்டம் அமலாக்கம் செய்யப்படுவதன் மூலம் இத்துறைக்குத் தேவையான 70 சதவீத பொருட்களை இந்தியாவிலேயே தயாரிக்கலாம். இதற்காக இத்துறை சார்ந்த நிறுவனங்களிடம் மத்திய அரசு தொடர்ந்து இணைப்பில் உள்ளதாக இதுகுறித்து நன்கு அறிந்த மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
1 பில்லியன் டாலர் முதலீடு
இந்தியாவில் ட்ரோன் உற்பத்தி மற்றும் அசம்பிளி துறையில் மட்டும் சுமார் 1 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை ஈர்க்க வாய்ப்புகள் உள்ளதாக ஐடியாபோர்ஜ் நிறுவனத்தின் சிஇஓ அன்கிட் மேத்தா தெரிவித்துள்ளார். இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் தயாரிக்கப்படும் ட்ரோன்கள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய வாய்ப்புகள் உள்ளது.