டெல்லி: இந்தியா அன்னிய முதலீடுகளை கவரும் கவர்ச்சிகரமான நாடுகளில் ஒன்றாகும். அதிலும் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையிலும் கூட, இந்தியாவின் பக்கம் சற்று காற்று வீசத் தொடங்கியுள்ளது எனலாம்.
அப்படி என்ன நல்ல விஷயம் என்று தானே யோசிக்கிறீர்கள். அது அன்னிய நேரடி முதலீடு தான்.
கொரோனாவின் ரணகளத்தினால் உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் உள்ள நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன.
சீனா மீது குற்றச்சாட்டு
இப்படி இருக்கையில், இதனை தனக்கு சாதகமாக சீனா பயன்படுத்திக் கொள்வதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அன்னிய நேரடி முதலீட்டு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ளது. இதில் வல்லரசு நாடான அமெரிக்காவும் ஒன்று. இந்த நிலையில் கவர்ச்சிகரமான முதலீடுகளை ஈர்க்கும் வல்லமை படைத்த இந்தியாவில், அன்னிய முதலீடுகளுக்கு என பல சலுகைகள் உள்ளன.
இந்தியா வர விருப்பம்
இதனால் சுமார் 1,000 நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேற விரும்புவதாகவும், அவர்களில் நான்கில் ஒரு பங்கு நிறுவனங்கள் மிக தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருதாகவும் கூறப்பட்டது. மேலும் இது குறித்தான அறிக்கை, கொரோனா லாக்டவுன் முடிந்த பின்னர் வெளி வரலாம் என்றும் கூறப்பட்டது.
சீனாவுக்கு மாற்று இந்தியா
இந்த நிலையில் சீனாவில் இருந்து, இந்தியாவில் தங்களது உற்பத்தியை தொடங்க முடிவெடுத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களை, அமெரிக்கா ஆதரிப்பதாக இடி-யில் வெளியான ஒர் அறிக்கை கூறுகிறது. இது குறித்து வெளியான செய்தியில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு பின்னர், சீனாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்க நிறுவனங்களுக்கு மாற்று முதலீட்டு இடமாக இந்தியா தோன்றக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை ஆதரவு
இதனை அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத் துறையில் மூத்த அதிகாரிகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் அமெரிக்கா நிறுவனங்களில் மூத்த பிரதிநிதிகள் இடையே கூட்டம் நடைபெற்றது. அதில் சீனாவிலிருந்து வணிகங்களை இந்தியாவுக்கு மாற்றுவதற்கு சாதகமான இடமாக இந்தியா மாறுவது பற்றி பேசப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சலுகை வேண்டும்
மேலும் தற்போது சீனாவில் நடைபெற்று வரும் தொழில்துறை நடவடிக்கைகளுக்கு, இந்தியா விரைவில் சாதகமான அதிகார வரம்பாக மாற முடியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கூறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் அல்ல அமெரிக்காவை தளமாகக் கொண்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள், இந்தியாவில் அமெரிக்க நிறுவனங்களின் வணிகங்களின் பெருக்கத்திற்கு உதவும் சலுகைகளை அளிக்குமாறு இந்திய அரசிடம் முன்மொழியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உறவு வலுப்படும்
இதனால் நாட்டில் அதிகமான வணிகங்கள் வருவதற்கான சூழல் ஏற்படும். இதனால் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகள் வலுப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் புது டெல்லியில் உள்ள அமெரிக்கா தூதரகர் இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
முதலீடுகளை ஈர்பதற்கான சாத்தியக் கூறுகள்
இதற்கிடையில் கடந்த திங்கட்கிழமையன்று சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்களில் இருந்து முதலீடுகளை ஈர்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறு மாநில முதல்வர்களை கேட்டுக் கொண்டதாகவும் இடி செய்திகள் கூறுகின்றன. சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை மற்றும் எம்எஸ்எம்இ போன்ற அமைச்சங்கள் மிக ஆர்வமாக உள்ள நிலையில் முதலீடுகள் அதிகரிக்கப்படலாம் என்றும் ஒரு தரப்பு கூறுகிறது. எப்படி இருப்பினும் இந்த கேள்விகளுக்கெல்லாம் கொரோனா பிரச்சனை முடிந்த பின்பே இது குறித்தான தெளிவான அறிக்கைகள் அரசு தரப்பில் இருந்து வரலாம்.