டெல்லி: சர்வதேச அளவில் பல நாடுகளை ரவுண்டு கட்டி அடித்து வரும் அமெரிக்காவின் பார்வை, தற்போது இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது. இந்தியா இழந்த முன்னுரிமை வர்த்தக நாடுகள் அந்தஸ்தை திரும்ப பெற இந்தியாவுக்கு செக் வைத்துள்ளது அமெரிக்கா.
அப்படி என்ன செக். அதுவும் இந்தியாவுக்கு? புதிதாக என்ன பிரச்சனையை கொண்டு வரப் போகிறார் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் என்று கேட்கிறீர்களா?
இந்தியாவுக்கு அளிக்கப்பட்டு வந்த முன்னுரிமை அந்தஸ்தை, கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா ரத்து செய்த நிலையில், அதை மீண்டும் பெற வேண்டுமானால் அமெரிக்காவுக்கு சாதமாக சில விஷயங்களை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியா மீண்டும் இழந்த சலுகையை பெற முடியும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கே நிபந்தனை
ஜிஎஸ்பி ரத்தால் இந்தியா பெரும் சலுகைகளை இழந்ததோடு, பல இழப்புகளையும் சந்தித்தது எனலாம். இப்படியொரு நிலையில் இந்தியா தனக்கு கிடைத்து வந்த பலவருட சலுகையை இழந்தது என்று தான் கூற வேண்டும். இந்த நிலையில் இந்தியாவுக்கு இழந்த சலுகை மீண்டும் கிடைக்க வேண்டுமானால், அமெரிக்காவின் விவசாய பொருட்களை கூடுதலாக இறக்குமதி செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பதாக அரசல் புரசலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்
இந்தியா ஏற்கனவே அமெரிக்காவிடம் இருந்து பல பொருட்களை இறக்குமதி செய்து வரும் நிலையில், தற்போது கூடுதலாக சுமார் 6 பில்லியன் டாலர் மதிப்புள்ள, அமெரிக்க விவசாய பொருட்களை இறக்குமதி செய்தால், வர்த்தக முன்னுரிமை பட்டியலில் இந்தியாவைப் மீண்டும் இணைத்துக் கொள்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடியை சந்திக்கும் டிரம்ப்
மேலும் இது தவிர அடுத்த மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்கா ஜனாதிபதி சந்திக்கவிருக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆக இவ்விரு தலைவர்கள் சந்திப்புக்கு முன்னதாக இப்படியொரு நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதில் அதிக வரி விதிக்கப்பட்டுள்ள விவசாய பொருட்கள், குறிப்பாக பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் ஆப்பிள் போன்ற சில பண்னை சார்ந்த பொருட்கள் வரி குறைப்பும் உள்ளதாக இது பற்றி அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒப்பந்தம் ஏற்படுமா?
இரு அரசுகளுக்கும் கடந்த ஆண்டே ஒரு வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் என்றும் நம்பப்பட்ட நிலையில், இது ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கும் மிக சிரமப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் சமரசம் ஏற்படுமா? இந்த பேச்சு வார்த்தை கைடுக்குமா? ஜிஎஸ்பி பட்டியலில் இந்தியா மறுபடியும் சேருமா? என்று இனி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அமெரிக்காவுடன் ஒத்து போகலாம்
இது குறித்து அறிந்த அதிகாரிகள் மத்தியில், அமெரிக்கா மருந்து நிறுவனங்களை காயப்படுத்திய மருத்துவ சாதனங்களின் விலைக்கு, தற்போது இந்தியா ஓரளவு நிவாரணம் அளித்துள்ள நிலையில், அமெரிக்கா கோருவது போல அமெரிக்கா மீதான கட்டணங்களை திரும்ப பெறுவதிலும் சூமுகமான நிலை ஏற்படலாம் என்றும் கூறுகின்றனராம். இதனால் ஜிஎஸ்பியில் அமெரிக்கா இனிப்பு வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கோழி இறக்குமதியை அதிகரிக்க வேண்டும்
மேலும் இந்த பேச்சு வார்த்தகைகளின் ஒரு பகுதியாக இந்தியா, பதப்படுத்தப்பட்ட கோழிகளை இறக்குமதியை அதிகரிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா கோரியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இதற்கான வரிகளை குறைக்க அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், தற்போது இறக்குமதியையும் அதிகரிக்க அழுத்தம் கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவுக்கு கிடைத்து வந்த சலுகை
ஜிஎஸ்பி திட்டத்தினால் வாகன உதிரிபாகங்கள், ஜவுளிப் பொருட்கள், என 2000 தயாரிப்புகளுக்கு இந்தியா அமெரிக்காவுக்கு வரி ஏதும் இல்லாமல் ஏற்றுமதி செய்து வந்தது. இந்த நிலையிலேயே அமெரிக்கா ஜனாதிபதி இந்தியாவுக்கு கிடைத்து வந்த சலுகையை ரத்து செய்தார். ஜிஎஸ்பி பட்டியலில் இந்தியா இணைக்கப் பட்டால் மீண்டும் அந்த சலுகைகள் திரும்ப பெறப்படலாம்.
இறக்குமதி வரி அதிகரிப்பு
அமெரிக்கா இறக்குமதிக்கு இந்தியா கடுமையான கட்டுபாடுகள் விதித்து வருவதாகவும், அந்த வகையில் இந்தியா முறையான வர்த்தக உறவை கடைபிடிக்க தவறியதாகவும் இந்தியா மீது குற்றம் சாட்டியது அமெரிக்கா. எனினும் அமெரிக்காவில் உள்ள குறுந்தொழில் செய்யும் நிறுவனங்களோ, ஜிஎஸ்பி நாடுகளில் இருந்து அதிகளவில் நன்மை பெற்று வந்ததாகவும், ஆனால் தற்போது இறக்குமதிக்கு கூடுதல் வரிகளை செலுத்த வேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளன.
வரி அதிகம்
உலகளவில் இந்தியா தான் அதிகளவில் வரி வசூலுப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், தற்போது ஈ காமர்ஸ் நிறுவனங்களுக்கு இந்திய அரசு பலத்த கடினமான விதிமுறைகளை விதித்திருப்பதும், இது அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களின் வருவாயை குறைத்துள்ளது. இதனால் டிரம்ப் நிர்வாகம் மேலும் அழுத்தம் கண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
சலுகை மீண்டும் கிடைக்குமா?
கடந்த ஆண்டே இது குறித்தான பேச்சு வார்த்தையில் கடந்த ஆண்டு சூமுக தீர்வு எட்டப்படாத நிலையில், தற்போது மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு இந்தியா வளைந்து கொடுக்குமா? அமெரிக்காவின் மகுடிக்கு இந்தியா தலைவணங்குமா? பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.