சீனாவின் மிகக் கொடிய தொற்று வைரஸான கொரோனாவின் கொடூர தாண்டவத்தால் இது வரை 813 பேர் இறந்துள்ளதாகவும், இதில் சீனாவில் மட்டும் 811 பேர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில் இதுவரை 37,198 பேர் இந்த தொற்றுதலுக்கு ஆளாகி இருப்பதாக சீனா தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் கொடுமை என்னவெனில் முந்தைய 24 மணி நேரத்தில் மட்டும் 89 பேர் இறந்துள்ளதாகவும், 2,656 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும் சீனா சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
பொருளாதாரத்திலும் வீழ்ச்சி
ஒரு புறம் தங்கு தடையின்றி பரவி வரும் கொரோனா வைரஸ், மறுபுறம் பொருளாதார வீழ்ச்சி என்னும் ஆயுதம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. சொல்லப்போனால் இதில் சீனா மட்டும் பாதிக்கப்படவில்லை. அமெரிக்காவும் படு அடி வாங்க காத்துக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம். ஏனெனில் அந்தளவுக்கு சீனாவில் அமெரிக்கா நிறுவனங்கள் உள்ளது.
எந்தெந்த நிறுவனம் மூடல்
குறிப்பாக சொல்லவேண்டுமானால் மெக்டொனால்டு, ஆப்பிள் மற்றும் ஸ்டார்பக்ஸ் உள்ளிட்ட பல அமெரிக்கா நிறுவனங்கள் சீனாவில் உள்ளன. கொரோனாவின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் அந்த நிறுவனங்கள் தங்களது சேவையினை தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால் பெரும் பொருளாதார இழப்பினை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொருளாதாரத்தில் எதிரொலி
கொரோனாவின் இந்த கொடிய தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து லாரியல் பர்சனல் கேர் நிறுவனம், சீனாதான் தங்களுக்கு மிகப்பெரிய சந்தை என்று தெரிவித்துள்ளது. ஆனால் சீனாவில் நிலவி வரும் மோசமான கொடிய கொரோனா காரணமாக தங்களது நிறுவனங்களை பாதித்துள்ளதாக கூறின. இதனால் தாங்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளன.
தினசரி இழப்பு
இதே போல் வின் ரிசார்ட்ஸ் ஒரு நாளைக்கு 2,4 மில்லியன் டாலர் முதல் 2.6 மில்லியன் டாலர் வரை இழந்து வருவதாக தெரிவித்துள்ளது. மக்காவில் அதன் சூதாட்ட விடுதிகள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் அதன் 12,200 ஊழியர்களுக்கான ஊதியச் செலவுகள் காரணமாக தலைமை நிர்வாக அதிகாரி மாட் மடோக்ஸ் வருவாய் இழப்பு ஏற்படலாம் என்றும் தெரிவித்தார்.
30% நிறுவனங்கள் நஷ்டம்
உலகின் மிகப்பெரிய சூதாட்ட மையமான மக்கா மற்றும் அண்டை நாடான ஹாங்காங்கில் பல உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் இருந்த பின், அதன் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதோடு கேஎஃப்சி மற்றும் பிட்சா ஹட், டகோ பெல் பிராண்டுகளை இயக்கும் சீனாவில் அதன் 30% மேற்பட்ட உணவகங்கள் மற்றும் அதன் கிளைகளை மூடியுள்ளன. இவை தற்காலிகமாக மூடப்பட்டிருந்தாலும், எப்போது மீண்டும் வழக்கம்போல் இயங்கும் என்று கணிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
உற்பத்தியை பாதிக்கும்
கொரோனா வைரஸ் சீனாவின் சப்ளை சங்கிலி சீர்குலைவால், தென் கொரியாவில் உள்ள ஆலைகளில் உற்பத்தி வரிகளை நிறுத்தி வைப்பதாக தென் கொரிய வாகன உற்பத்தியாளர் ஹூண்டாய் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. கொரோனா வைரஸ் ஹூண்டாய் மோட்டார் சீனாவின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கண்கானிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
விமானம் நிறுத்தி வைப்பு
யுனைடெட் டெல்டா மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல விமான நிறுவனங்கள் சீனாவுக்கு செல்லும் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளன. தேவை குறைந்து வருவதால் ஹாங்கிற்கான விமானங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் செவ்வாய்கிழமை அறிவித்தது. சான் பிரான்சிஸ்கோவிற்கும் ஹாங்கிற்கும் இடையிலான விமானங்களை பிப்ரவர் 8 முதல் பிப்ரவரி 20 வரை நிறுத்தி வைப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பல நிறுவனங்கள் மூடல்
இதே போல் ஆப்பிள் நிறுவனம் கொரோனாவின் பாதிப்பால் சீனாவில் உள்ள அனைத்து பிரதான கிளைகளையும் அலுவலகங்களையும் தற்காலிகமாக மூடியுள்ளது. இதே போல் ஹோண்டா, நிசான் உள்ளிட்ட பல சர்வதேச நிறுவனங்களும் சீனாவில் மூடப்பட்டுள்ளன. பல சர்வதேச நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், அமெரிக்கா நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் பெரும் பொருளாதார சரிவை சந்தித்துள்ளன.
மெக்டொனால்டு கிளை மூடல்
இதே போல் மெக்டொனால்டு சீனாவின் சில இடங்களில் உள்ள கிளைகளையும் மூடப்பட்டுள்ளது. இதே போல் ஷாங்காய் மற்றும் மற்றும் ஹாங்காங்கில் டிஸ்னி இரண்டு தீம் பூங்காக்களை தற்காலிகமாக மூடியது. மேற்கூறிய அனைத்து நிறுவனங்களும் தற்காலிகமாக மூடியிருந்தாலும், எப்போது திறக்கப்படலாம் என்று கணிப்புகள் இல்லை என்பது தான் வேதனையான விஷயமே.