கடந்த சில மாதங்களாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ள நிலையில் மோசடி மூலமும் ஏராளமான பணத்தை முதலீட்டாளர்கள் இழந்துள்ள தகவல் கிடைத்துள்ளது.
குறிப்பாக கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களை குறிவைத்து ரொமான்ஸ் குரலில் பேசி மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடம் மோசடி செய்பவர்கள் முதலில் பெண்களை வைத்து ரொமான்ஸாக பேசி உங்கள் முதலீட்டுக்கு ஆபத்து விளைவிப்பதில் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
கிரிப்டோகரன்சி
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022ஆம் ஆண்டு மார்ச் வரையிலான 15 மாதங்களில் அமெரிக்க மக்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டில் ரொமான்ஸ் மோசடி மூலம் சுமார் 185 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகளை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தொகை இந்திய மதிப்பில் சுமார் 1500 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
ரொமான்ஸ் மோசடி
மோசடி செய்பவர்கள் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடம் கொள்ளையடிக்க புதுப்புது வழிகளை பயன்படுத்தி வருகின்றனர் என்பதும் அவ்வாறு அவர்கள் புதிதாக தேர்ந்தெடுத்த வழி தான் ரொமான்ஸ் மோசடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஃபெடரல் டிரேட் கமிஷன்
ஃபெடரல் டிரேட் கமிஷன் (FTC) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் கிட்டத்தட்ட 46,000 அமெரிக்கர்கள் கிரிப்டோவில் $1 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை இழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரொமான்ஸ் மோசடியால் பணத்தை இழந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.
வலை
முதலில் கிரிப்டோகரன்சி முதலீடு செய்தவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு ஆலோசனை வழங்குவது போல இனிமையான குரலில் இளம்பெண்கள் பேசுகின்றனர். இந்த வலையில் அதிகம் விழுபவர்கள் இளைஞர்கள்தான் என்று புள்ளிவிவரம் கூறுகிறது.
இளைஞர்கள்
ஃபெடரல் டிரேட் கமிஷன் அறிக்கையின்படி 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் மோசடி செய்பவர்களிடம் ரொமான்ஸ் முறையில் பணத்தை இழந்து உள்ளதாகவும் வயதானவர்களை விட மூன்று மடங்கு அதிகமாக இளைஞர்கள்தான் அதிகம் இழந்துள்ளனர் என்றும் புள்ளிவிவரம் கூறுகின்றன.
டேட்டிங்
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்பவர்களிடம் மோசடி செய்பவர்கள் பெண்களை பயன்படுத்தி முதலில் டேட்டிங் போன்ற விஷயங்களை ரொமான்ஸ் குரலில் பேசுகின்றனர். அதன்பிறகு சமூக ஊடகங்களில் அவர்களுடைய காதல் பேச்சுக்கள் தொடர்கின்றன. அதன்பின்னர் முதலீடு செய்பவர்களின் நம்பிக்கையை பெற்ற பின்னர் அவர்கள் தங்களுடைய கிரிப்டோ நிறுவனத்தில் முதலீடு செய்யுமாறு ஆலோசனை வழங்குகின்றனர்.
திரும்ப கிடைக்க வழியில்லை
ரொமான்ஸ் வலையில் சிக்கியிருக்கும் முதலீட்டாளர்கள் அந்த மோசடி பெண்களிடம் ஏமாந்து அவர்களுடைய போலி கிரிப்டோ இணையதளங்களில் முதலீடு செய்கின்றனர். அதன்பின் மோசடி செய்தவர்கள் திடீரென காணாமல் போன பிறகுதான் முதலீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்கின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் ரொமான்ஸ் மூலம் ஏமாற்றப்பட்டோம் என்பதை மிகவும் தாமதமாக உணர்வதால் அவர்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறுவதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். ஆனால் அதற்கான வழிகள் எங்கும் கிடைக்கவில்லை என்பதுதான் இப்போதைய நிலையாக உள்ளது.
175 மில்லியன் மோசடி
2021 ஆம் ஆண்டு மட்டும் கிரிப்டோகரன்சி மூலம் மோசடி செய்த மொத்த தொகை 175 மில்லியன் என்று ஃபெடரல் டிரேட் கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது. முதலில் மோசடியாளர்கள் முதலீடு செய்பவர்களிடம் விரைவாக அதிக வருமானம் பெறலாம் என்று ஆசை வார்த்தை கூறுகின்றனர். அந்த ஆசை வார்த்தையுடன் ரொமான்ஸ் பேச்சும் சேர்ந்து கொள்வதால் அந்த வலையில் விழும் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் போலி போலி தளங்களில் முதலீடு செய்து தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இவ்வாறான சூழ்ச்சியில் விழுந்தால் தங்களது பணத்தை அவர்களுக்கு திரும்பப் பெறுவது என்பது கிட்டத்தட்ட முடியாத காரியம் என்று தான் ஃபெடரல் டிரேட் கமிஷன் அறிக்கை தெரிவித்துள்ளது.