2024ஆம் ஆண்டு உத்திரபிரதேச மாநிலம் அயோத்தில் ராமர் கோயில் கட்டப்பட்டது முதலே இந்த பகுதி பெரிய ஆன்மீக சுற்றுலா தலமாக மாறி இருக்கிறது. இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் பலரும் அயோத்தி வந்து ராமரை தரிசனம் செய்து செல்கின்றனர்.
அயோத்தி முக்கியமான சுற்றுலா தலமாக மாறி இருக்கும் நிலையில் பாலிவுட் பிரபலங்கள் அதிகமாக இங்கே வருகை தர தொடங்கியுள்ளனர். வழக்கமாக சாமி தரிசனம் செய்ய வரும் நடிகர்கள், நடிகைகள் தற்போது வேறு ஒரு காரணத்திற்காக அயோத்திக்கு அதிகமாக படையெடுக்கின்றனர். அது தான் ரியல் எஸ்டேட். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் அயோத்தியில் தேடி தேடி இடம் வாங்குகிறாராம்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், அண்மையில் கூட அயோத்தியில் 15,000 சதுர அடி நிலத்தை ஒரே நாளில் 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய சம்பவம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. The House of Abhinandan Lodha நிறுவனத்தின் தலைவரான அபிநந்தன் லோதா, அமிதாப் நிலம் வாங்கியது தொடர்பாக ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். அவர் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது, ஒரு நாள் அதிகாலை 3 மணியளவில் அமிதாப் பச்சனிடமிருந்து போன் வந்ததாம்.
காலை 3 மணிக்கு அமிதாப் போன் செய்கிறாரே என அறிந்து உடனே கால் செய்தாராம், அப்போது அமிதாப் பச்சன், "அபிநந்தன் ஜி, நான் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவன், எனக்கு அயோத்தியில் நிலம் வாங்க வேண்டும்" என கூறியுள்ளார். அமிதாப் பச்சனின் சொந்த ஊர் உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் ஆகும். தனது வேர்களுடனான தொடர்பை நீட்டிக்க வேண்டும் என்பதற்காக அவர் தேடி தேடி அங்கே இடம் வாங்கி போடுகிறாராம்.

அமிதாப் பச்சன் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்தவுடன், அவரிடம் விலை குறித்து பேசுவதைவிட, அந்த விருப்பத்தை நிறைவேற்றுவதே முக்கியம் என தான் அப்போது கருதியதாக கூறியுள்ள அபிநந்தன் லோதா அமிதாப் பச்சன் 15,000 சதுர அடி நிலம் வேண்டும் எனக் கேட்டதற்கு, அதன் மதிப்பு சுமார் 15 கோடி வரும் என பதில் தந்தாரார். அடுத்த நாள் காலையிலேயே, அமிதாப் பச்சன் 15 கோடியை அவருக்கு டிரான்ஸ்பர் செய்தாராம்.
அயோத்தியில் நிலம் வாங்க ஆர்வம் காட்டும் பிரபலங்களில் ஒருவராக அமிதாப் பச்சன் திகழ்கிறார். ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு முன்பே, 'தி சரயு' திட்டத்தில் அவர் தனது முதல் நிலத்தை வாங்கினார். அதன் பிறகு, அவர் அயோத்தியில் தொடர்ந்து தனது சொத்துக்களை விரிவுபடுத்தி வருகிறார்.
ராமர் கோயிலில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில், தனது தந்தையின் பெயரிலான ஹரிவன்ஷ் ராய் பச்சன் மெமோரியல் டிரஸ்ட் மூலம் சுமார் 54,454 சதுர அடி நிலத்தை வாங்கியுள்ளார். மேலும், மார்ச் 2026-இல், திஹுரா மஜா பகுதியில் 2.67 ஏக்கர் நிலத்தை ரூ. 35 கோடிக்கு வாங்கியுள்ளார்.
அமிதாப் பச்சனைத் தொடர்ந்து, நடிகர் ரன்பீர் கபூரும் அயோத்தியில் நிலம் வாங்கியுள்ளார். அவரும் 'தி சரயு' திட்டத்தில் சுமார் 2,134 சதுர அடி நிலத்தை 3.31 கோடிக்கு வாங்கியுள்ளார். ஆன்மீக சுற்றுலா அதிகரிப்பதால் அயோத்தியில் ரியல் எஸ்டேட் மதிப்பு உயர்ந்து வருகிறது, இது தான் பாலிவுட் பிரபலங்கள் அங்கே தேடி சென்று முதலீடு செய்வதற்கு முதல் காரணம்.


Click it and Unblock the Notifications

