2023-24 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதம் வரையில் வளர்ச்சி அடையும், இது பிற பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சி அளவீடாகும்.
ரஷ்யா - உக்ரைன் பாதிப்பு மூலம் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
முதல் பட்ஜெட்
அம்ரித் கால்-ன் முதல் பட்ஜெட் அறிக்கை இது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொருளாதார மதிப்பில் 10வது இடத்திலிருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளோம், மேலும் உலகப் பொருளாதாரத்தில் ஒளிரும் நட்சத்திரமாக இந்தியா ஆக உள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு
நேற்று முதலே பட்ஜெட் குறித்த பரபரப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்தப் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மத்திய அரசு 2023 ஆம் ஆண்டு ரெசிஷன் அச்சம் நிறைந்த காலகட்டத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஏழு முன்னுரிமைகள்
இந்த மத்திய பட்ஜெட் 2023-ன் ஏழு முன்னுரிமைகள் கொண்டு மொத்த அறிக்கையை உருவாக்கப்பட்டு உள்ளது.
1. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
2. கடைசி மைல் வரை அடையும் சேவை
3. உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு
4. திறனை வெளிக்கொணரும் முயற்சி
5. பசுமை வளர்ச்சி
6. இளைஞர் சக்தி
7. நிதித்துறை
விவசாயிகள்
மோடி ஆட்சியில் 11.4 கோடி விவசாயிகளுக்கு வங்கிகள் மூலம் நேரடியாக உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது, 47.8 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வங்கி மற்றும் நிதியியல் சேவை உறுதி செய்யப்பட்டு உள்ளது.
காப்பீட்டுத் திட்டம்
மேலும் பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் 44.6 கோடி பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்றும், 2023-ம் ஆண்டு மேலும் ஓராண்டுக்கு இலவசமாக உணவு தானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
எரிவாயு இணைப்புகள்
இதோடு சிறுதானியங்கள் உற்பத்தியில் இந்தியா உலகில் முதலிடம் வகிக்கிறது, உஜ்வாலா திட்டத்தின் கீழ் 9.16 கோடி இலவச சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் கால்நடை வளர்ப்பு, மீன் வளத்துறைக்கு ரூ20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கிராமம்
சிறுதானிய உற்பத்திக்கு மத்திய அரசு முன்னுரிமை தரும் வகையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும், கிராமப்புறங்களில் வேளாண் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்புச் செய்ய முக்கிய அறிவிப்புகள் வெளியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.