சில தினங்களுக்கு முன்பு தான் பார்தி ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா நிறுவனத்தின் செப்டம்பர் 2019 காலாண்டு முடிவுகள் வெளியானது. ஜூலை 01 2019 முதல் செப்டம்பர் 30, 2019 வரையான 92 நாட்களுக்கு ஏர்டெல் சுமார் 23,000 கோடி ரூபாய் நஷ்டம் எனச் சொன்னது.
அதே போல, வொடாபோன் ஐடியா நிறுவனம் தன் செப்டம்பர் 2019 காலாண்டில், 92 நாளில் சுமார் 50,000 கோடி ரூபாய் நஷ்டம் என கணக்கு சொன்னது.
மத்திய அரசே இவ்வளவு பெரிய நஷ்டத்தைக் கண்டு கொஞ்சம் கதி கலங்கிவிட்டது. அரசு, இந்திய டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்க வேண்டிய பாக்கி தொகையை வசூலிப்பதில் அவசரம் காட்டாது எனச் சொன்னார் நிதி அமைச்சர்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு
இத்தனை பெரிய நஷ்டங்களுக்கு சமீபத்தில் வந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பும் ஒரு காரணம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, சுமார் 92,000 கோடி ரூபாயை இந்திய டெலிகாம் நிறுவனங்கள் செலுத்த வேண்டி இருக்கிறது. இந்த 92,000 கோடி ரூபாயில் ஏர்டெல் மட்டும் சுமார் 21,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். வொடாபோன் ஐடியா சேர்த்து சுமார் 28,000 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். இந்த தொகையை வசூலிப்பதில் தான் அரசு அவசரம் காட்டாது எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர்.
டெலிகாம் தரப்பு
பொதுவாகவே டெலிகாம் துறைக்கு அதிக முதலீடுகள் தேவையாக இருக்கும். அதுவும் விரைவில் டெக்னாலஜி மாறிக் கொண்டு இருக்கும் இந்த காலத்தில், புதிய டெக்னாலஜிக்களை எல்லாம் உடனுக்குடன் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க அதிகம் முதலீடு செய்ய வேண்டி இருக்கும். அப்படியே முதலீடு செய்து கொண்டு எல்லா வசதிகளையும் கொடுத்தாலும், அடுத்த சில வருடங்களில் புதிய டெக்னாலஜி வந்து விடும் என்கிறார்கள்.
உதாரணம்
கடந்த 10 வருடங்களில் இந்திய டெலிகாம் துறை, 2ஜி சேவையில் இருந்து இன்று 5ஜி சேவையை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறது. சராசரியாக கணக்கிட்டால் 2ஜி மூன்று வருடம், 3ஜி மூன்று வருடம், 4ஜி மூன்று வருடம் என பயன்படுத்தி இருக்கிறோம் எனச் சொல்லலாம். இன்னும் சில வருடங்களில் 5ஜியில் வேலை செய்ய இருக்கிறோம். இதற்கு எல்லாம் எவ்வளவு செலவாகும்..?
பெரிய முதலீடுகள்
சமீபத்தில் கூட ஏர்டெல் நிறுவனம் 25,000 கோடி ரூபாயை ரைட்ஸ் பங்குகளை வெளியிட்டு திரட்டியது நினைவில் இருக்கலாம். அந்த பணத்தை வைத்து ஏர்டெல் புதிய சேவைகளை எல்லாம் தொடங்கவில்லை. தன்னுடைய 4ஜி சேவையை விரிவாக்கிக் கொண்டது. இப்படி விரிவாக்கப் பணிகளுக்கே இத்தனை கோடிகள் என்றால், புதிய டெக்னாலஜிகளுக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டி இருக்கும் என்று நீங்களே கணக்கு போட்டுப் பாருங்கள். ஆகையால் தான் இப்போது கட்டணங்களை அதிகரிக்க இருக்கிறது ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா.
கணிப்பு
ஐ ஐ எஃப் எல் நிறுவனத்தின் துணைத் தலைவர் சஞ்ஜிவ் பசின், ஏர்டெல் மற்றும் வொடாபோ ஐடியா நிறுவனம் அடுத்த சில மாதங்களில் 30 - 45 சதவிகிதம் வரை விலை ஏற்றலாம். அடுத்த 2 வருடங்களுக்கும் தற்போது இருக்கும் விலையை விட 3 மடங்கு வரை அதிகரிக்கலாம் என கணித்து இருக்கிறார். இதுவரை ஏர்டெல் மற்றும் வொடாபோன் ஐடியா எவ்வளவு விலை அதிகரிக்க இருக்கிறார்கள் என குறிப்பிடவில்லை.
உதாரணம்
உதாரணமாக, தற்போது நாம் மாதம் ஒன்றுக்கு, வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பேக்குகளுக்கு 150 ரூபாய் செலவழிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அடுத்த சில மாதங்களில் இது 195 ரூபாய் முதல் 217 ரூபாய் வரை போகலாம். அடுத்த இரண்டு வருடத்தில் ஒரு மாத வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பேக்குகளுக்கு 450 ரூபாய் செலுத்தும் நிலை வரலாம் என பயமுறுத்துகிறார்கள்.