மும்பை: இந்தியாவின் ஆட்டோமொபைல் வணிக சாம்ராஜ்யங்களில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமமும் ஒன்று.
1945-ல் தொடங்கபட்ட இந்த நிறுவனத்தை, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து தலைவராக வழி நடத்தி வந்தவர் ஆனந்த் மஹிந்திரா. தற்போது 64 வயதாகும் ஆனந்த் மஹிந்திரா தன் அடுத்த வாரிசை தேர்வு செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.
இவர் வரும் ஏப்ரல் 01, 2021-ல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி, நான் எக்ஸிக்யூட்டிவ் தலைவராக இருக்கப் போகிறார்.
எனவே அடுத்து தன் இடத்தை நிரப்ப அனிஷ் ஷா என்பவரை தேர்வு செய்து இருக்கிறார். இவர் வரும் ஏப்ரல் 01, 2020-ல் துணை நிர்வாக இயக்குநர் மற்றும் மஹிந்திரா குழுமத்தின் முதன்மை நிதி ஆலோசகராகவும் நியமிக்கப்படுவாராம்.
ஒரு வருட வழிகாட்டலுக்குப் பின் ஏப்ரல் 02, 2021-ல் மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரியாக அனிஷ் ஷா பதவி ஏற்பாராம்.
அனிஷ் ஷா தற்போது மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் ஸ்ட்ராட்டஜிஸ்ட் தலைவராக இருக்கிறார். 49 வயதாகும் அனிஷ் ஷா, ஒரு முன்னாள் ஐஐஎம் அஹமதாபாத் மாணவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகி, நான் எக்ஸிக்யூட்டிவ் தலைவராக பதவி ஏற்பது குறித்து, ஆனந்த் மஹிந்திராவிடம் கேட்ட போது "என்னுடைய புதிய பதவியில் (நான் எக்ஸிக்யூட்டிவ் சேர்மேன்), மஹிந்திரா குழுமத்தின் வழிகாட்டியாக இருப்பேன். மஹிந்திரா குழுமத்தின் மதிப்புகளை காக்கும் காவலனாக இருப்பேன். குறிப்பாக பங்குதாரர்களின் நலனை கண்காணிப்பவனாக இருப்பேன். மஹிந்திரா இயக்குநர் குழுவையும் மேற்பார்வை செய்வேன்" எனச் சொல்லி இருக்கிறார் ஆனந்த் மஹிந்திரா.
பொதுவாகவே நம் ஆனந்த் மஹிந்திராவை சமூக வலைதளங்களில் அதிகம் பார்க்கலாம். இப்போது, அடுத்த ஒரு வருடத்துக்குள், கிட்ட தட்ட மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தினசரி வேலைகளில் இருந்து ஓய்வு பெறுவதால், இனி ஆனந்த் மஹிந்திராவிடம் இருந்து நிறைய சமூக வலைதள செய்திகளில் வருவார் என எதிர்பார்க்கலாம்.