இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் ஒன்றான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா-வின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா எவ்வளவு தான் தனது நிர்வாகப் பணிகளில் பிசியாக இருந்தாலும், தனது டென்ஷனை குறைக்கும் ஒரு இடமாகவும், இன்றைய தலைமுறையினரிடம் நெருங்கிப் பழகும் ஒரு அனுபவத்தையும் டிவிட்டரில் பெற்று வருகிறார்.
இதனாலேயே ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் ஆனந்த் மஹிந்திரா தற்போது வெளியிட்டுள்ள ஒரு டிவீட்டால் அனைவரும் ஒரு மணி ரத்னத்தை மிஸ் பண்ணிட்டோமே என முணுமுணுத்து வருகின்றனர்.
ஆனந்த மஹிந்திரா
எப்போதும் டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் ஆனந்த மஹிந்திரா பொது மக்கள் கேட்கும் கேள்விக்கு அவ்வப்போது பதில் அளிப்பது மூலம் டிரெண்டிங்-லேயே உள்ளார். இதுமட்டும் அல்லாமல் ஆனந்த மஹிந்திரா பலருக்கும் டிவிட்டர் வாயிலாகப் புதிய கார், வாகனங்கள் கொடுத்து உதவி செய்தும் உள்ளார்.
டிவிட்டர்
இந்நிலையில் சமீபத்தில் ஈஸ்வரன் என்பவர் டிவிட்டரில் ஆனந்த மஹிந்திரா-வை டேக் செய்து நீங்கள் இப்போது மஹிந்திரா குழுமம் என மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை வழிநடத்தி வருகிறீர்கள்.. ஆனால் உங்கள் பள்ளி/கல்லூரி நாட்களில் உங்கள் லட்சியம் என்ன? நீங்கள் எப்போதாவது வேறு பிடித்தமான தொழிலைத் தவறவிட்டதாக உணர்ந்து உள்ளீர்களா? என்று கேள்வி கேட்டார்.
ஈஸ்வரன் டிவிட்டுக்குப் பதில்
ஆனந்த் மஹிந்திரா தனக்கு வரும் 100 டிவீட்டில் ஒரு டிவீட் என எடுத்துக்கொள்ளாமல் ஈஸ்வரன் டிவிட்டுக்குப் பதில் அளித்துள்ளார். இதனாலேயே இன்றைய இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாகவும், பிடித்த தொழிலதிபராகவும் திகழ்கிறார் ஆனந்த் மஹிந்திரா.
திரைப்பட இயக்குனராக
இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது மிகவும் எளிது. நான் ஒரு திரைப்பட இயக்குனராக விரும்பினேன், இதற்காகக் கல்லூரியில் சேர்ந்தும் படித்தேன். எனது ஆய்வறிக்கைக்காக 77 கும்பமேளா விழாவை படம் பிடித்தேன் என்று தனது டிவிட்டரில் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
16mm கேமரா
ஆனால் இந்தப் புகைப்படம் இந்தூருக்கு அருகிலுள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் ஒரு ஆவணப்படத்தைப் படமாக்கிய போது எடுக்கப்பட்டது. நான் பயன்படுத்தியுள்ள இந்தக் கையடக்க 16mm கேமராவை பற்றித் தெரிந்த அல்லது யூகிக்கக் கூடிய வயதானவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? என்றும் நகைச்சுவையாகக் கேட்டுள்ளார்.
மணி ரத்னம்
ஆனந்த் மஹிந்திரா தொழிற்துறைக்குள் வரவில்லை எனில் கட்டாயம் மணி ரத்னம் போன்று நாட்டின் முன்னணி திரைப்பட இயக்குனர் அல்லது தயாரிப்பாளராக உயர்ந்திருப்பார் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. நீங்க என்ன சொல்றீங்க..