நம்மில் பலருக்கும் சுயமாக தொழில் செய்ய வேண்டும். அதனை சொல்லிக் கொண்டும் இருப்போம்,. ஆனால் இதனை வெற்றிகரமாக எத்தனை பேர் செயல்படுத்தியிருக்கிறோம் என்றால், அதற்கு விடை கேள்விக்குறி தான்.
ஏனெனில் 100 பேரில் ஓரிருவர் மட்டுமே அதனை சாதித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு, இந்த நிலை மாறியுள்ளது எனலாம்.
ஏனெனில் படித்த பட்டதாரிகள் முதல் நம்மூரில் இருக்கும் தாத்தாமார்கள் வரையில் சுயதொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். கொரோனா காரணமாக பலரும் தங்களது வேலையினை இழந்தனர். தங்கள் வாழ்வாதரத்தினை இழந்தனர். இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் தான் பலரும் சொந்தமாக தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
நம்பிக்கையான பதிவு
அப்படி வாழ்வில் வெறும் கஷ்டத்தினை மட்டுமே அனுபவித்து வாழ்க்கையில் அடுத்து கட்டத்திற்கு எப்படி செல்வது? அடுத்து என்ன செய்வது? வழிகாட்டலுக்கு ஆள் இல்லையே? நாம் என்ன செய்ய போகிறோம் என்று யோசிப்பவர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும் பதிவினை பற்றி தான் பார்க்கவிருக்கிறோம்.
யார் இந்த தாமோதரம்
ஆந்திராவில் பிறந்த தாமோதரம் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். இன்னும் இதனை தெளிவாக சொல்ல வேண்டுமானால் வாத்து மேய்த்துக் கொண்டிருக்கும், ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். அக்கா, அண்னன் என 4 குழந்தைகள், இருக்கும் ஒரு குடும்பம். இருக்க வீடு இல்லாமல் ஊர் ஊராக சென்று அலைந்து வருகின்றனர்.
பள்ளி பருவத்திலேயே வேலை
ஆக இவரை உற்சாகப்படுத்தி படிக்க வேண்டும் என கூறும் அளவுக்கு கூட யாரும் இல்லை எனலாம். ஏனெனில் தறி நெசவு செய்யும் அக்கா, அண்ணன் ஒருபுறம் கூலி வேலைக்கு செல்கிறார். அதுவும் அவர்கள் தனது பாட்டி இருக்கும் மற்றொரு ஊரில் குடிசையில் வசித்து வருகின்றனர். தனது அக்கா, அண்ணனை பார்க்க செல்லும் ஒரு சிறு கிராமத்தில், அருகில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை பார்த்து தானும் பள்ளி செல்ல வேண்டுமென கேட்டுள்ளார்.
பாட்டி மூலம் பள்ளிக் கல்வி
ஆனால் இது நமது வாழ்க்கை அல்ல, நாம் சென்று ஆக வேண்டும் என தந்தை, தாய் கூறியதும், ஊருக்கு செல்லும் அந்த நேரத்தில் ஓடி ஓளிந்து கொண்டுள்ளார். இதனால் அவரின் அண்ணனை கூட்டிக் கொண்டு, சென்றனர். இதனையடுத்து தனது பாட்டியின் துணையுடன் பள்ளிக்கு சென்றுள்ளார்.
படிக்கும் காலத்திலேயே பணி
அந்தளவுக்கு ஒரு மோசமான நிலையில் இருந்து, எப்படியும் விடாமுயற்சியால் தன்னுடைய பள்ளி படிப்பை தெலுங்கு மொழியில் முடித்துள்ளார். ஆனால் படிக்கும் காலத்திலேயே நியூஸ் பேப்பர் போடுவது என பல சிறுசிறு வேலைகளை செய்து தான் படித்து முடித்துள்ளார்.
சென்னையில் வாட்ச்மேன்
இதனையடுத்து பல சவால்களுக்கும் மத்தியில் கல்லூரி படிப்பினை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலத்தில், மொழி தெரியாமல் சென்னை வந்துள்ளார். அதன் பிறகு சென்னையில் ஒரு கோவிலில் 4 வருடம் வாட்ச்மேன் ஆக பணிபுரிந்த தாமோதரம், பல அவமானங்களையும் சந்தித்துள்ளார். இப்படி கடினமான முயற்சிகளுக்கு மத்தியில் சிஏ படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.
நல்ல சம்பளத்தில் வேலை
கஷ்டப்பட்டு சிஏ படித்து முதல் முறையாகவே, சிஏ முதல் வகுப்பில் வெற்றிபெற்றுள்ளார். பிறகு அமெரிக்கன் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணியை தொடங்கியுள்ளார். ஆனால் தனது நிறுவனத்தில் பலரும் எம்காம், பிகாம் என படித்து இருந்தாலும், சிஏ படித்தவர்கள் என்பது மிக குறைவே.
ஏன் அகாடமி
தனது நிறுவனத்திலேயே 3,000 பேர் வேலை பார்த்தார்கள் எனில், 10 பேர் 15 பேர் தான் சிஏ படித்தவர்கள் என தெரிந்து கொண்டுள்ளார். ஆனால் தன்னுடைய நுணுக்கமான திறனாலும், அனுபவத்தினாலும், இதனையே தொழிலாக செய்ய தொடங்கியுள்ளார். இது தான் இன்று பல ஆயிரம் பட்டதாரிகளுக்கு வாழ்வாதாரமாக அமைந்துள்ளது.
சொந்தமாக சிஏ அகாடமி
தான் மேற்கொண்ட சவால்களையே அடிக்கல்லாக மாற்றி 2014ல் mycareer point என்ற சிஏ அகாடமியை தொடங்கியுள்ளார். இன்று அதன் மூலம் பல ஆயிரம் சிஏக்களையும் உருவாக்கி வருகிறார். பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த சிஏக்கள் இன்று இந்த அகாடமியில் பணிபுரிந்து வருகின்றனர்.
நம்பிக்கை கொடுக்கும் பதிவு
பல ஆயிரம் திறமையான சிஏக்களை உருவாக்கி வருவதோடு, பல இளைஞர்களுக்கும் நம்பிக்கை கொடுக்கும் ஒரு நல்ல ஆசானாகவும் இருந்து வருகின்றார். உண்மையில் இன்று பல இளைஞர்கள் நம்பிக்கை இழந்து, வழிகாட்டுதல் இல்லாமல், திறமை இருந்தும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு ஒரு சமர்ப்பணம்.