இந்தியாவிலேயே அதிகம் தங்கம் உற்பத்தி செய்யும் மாநிலமாக ஆந்திரப் பிரதேசம் உருவெடுக்கப் போகிறது. கர்நூல் மாவட்டம் மற்றும் அம்மாநிலத்தின் பிற பகுதிகளில் அதிக அளவில் தங்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவித்த சுரங்க துறை முதன்மை செயலாளர் முகேஷ் குமார் மீனா, இனிவரும் ஆண்டுகளில் ஆந்திரப் பிரதேசம் நாட்டின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக திகழும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகேஷ் குமார் மீனா, கர்னூல் மாவட்டத்தில் இருக்கும் ஜொன்னகிரி கிராமத்தில் மட்டும் 50 டன் தங்கம் இருப்பதாகக் கூறினார். மேலும் ராமகிரி, ஜவ்வாக்குலா மற்றும் சிகுருகுண்டா பிஸ்னதம் உள்ளிட்ட இடங்களிலும் தங்க இருப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப்பூர்வ தகவல்களின் அடிப்படையில், ஏற்கனவே ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் ஜொன்னகிரியில் தங்க உற்பத்தி தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. இங்கு தங்க சுரங்க பணிகளுக்காக 1500 ஏக்கர் நிலம் 10 ஆண்டுகளுக்கு முன்னரே ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் தற்போது வரை வெறும் 500 ஏக்கர் நிலத்தில் மட்டுமே தங்கம் கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தோண்டப்பட்ட 500 ஏக்கரில் மட்டும் 13 டன்கள் இருக்கலாம் என்று சுரங்க பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மீதமிருக்கும் 1000 ஏக்கர் பரப்பளவில் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை. அவை இனிவரும் காலத்தில் தொடங்கப்படும் என்றும் முகேஷ் குமார் மீனா தெரிவித்திருக்கிறார். முழுப் பணியும் நிறைவடையும்போது 50 டன் தங்கம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சுரங்கப் பணிகள் எப்படி நடைபெறும்? என்று விளக்கிய முகேஷ் குமார் மீனா.. இந்தப் பணிகளுக்கு நிறைய முதலீடு தேவைப்படும் என்றும், அதற்காக டெண்டர் மூலம் இந்தப் பணிகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
சுரங்கத்தை பொறுத்தவரையில் தங்கத்தை பிரித்து எடுப்பது என்பது பெரிய சவாலாக இருந்து வருகிறது. இதற்கு முன்பு ஒரு டன் சுரங்க கழிவிலிருந்து கிடைக்கும் தங்கம் 3 கிராமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த அளவு 1 கிராமாகக் குறைந்துள்ளது. இன்னும் வரும் ஆண்டுகளில் 1 டன் சுரங்க கழுவிலிருந்து 0.8 கிராமுக்கும் கீழ் தங்கம் கிடைத்தால் அது கண்டிப்பாக நஷ்டமாகவே அமையும்.
இது போன்ற சூழ்நிலைகளில் தங்கம் பிரித்தெடுக்கப்பட்டால் கண்டிப்பாக அது லாபகரமானதாக இருக்காது. ஆந்திராவில் எந்த அளவுக்கு தங்கம் கிடைக்கப்போகிறது என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும். அம்மாநில முதல்வர் என் சந்திரபாபு நாயுடு இந்த தங்க சுரங்க திட்டத்தை ஜூன் மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications