சித்தூர்: நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் திட்டம் மெதுவாக தற்போது வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் ஆந்திராவின் ஆளும் கட்சியான YSR காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரு சட்டமன்ற பெண் உறுப்பினர் தான் நடிகை ரோஜா.
இவர் தனது தொகுதி மக்களிடம் ஒரு கிலோ பிளாஸ்டிக்கிற்கு பதிலாக ஒரு கிலோ அரிசியை வழங்குவதாக தெரிவித்துள்ளார். பிளாஸ்டிக் தடையின் முக்கியத்துவத்தை உணர்ந்த எம்.எல்.ஏ ரோஜா, ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளார். இது தான் ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக, மக்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு செயல்படுத்தப்படும் என்று ரோஜா தெரிவித்துள்ளார். இவரின் இந்த வித்தியாசமான திட்டம் ஆந்திர மக்களை மிக கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மக்கள் முன் உரையாற்றிக் கொண்டு இருந்த ரோஜா, பிளாஸ்டிக் கழிவுகளால் நிரப்பப்பட்ட இருந்த ஒரு சாக்கடையை சுட்டிக்காட்டி இதுபோன்ற பிளாஸ்டிக் கழிவுகளை ஒவ்வொரு வார்டு மற்றும் ஒவ்வொரு பஞ்சாயத்திலிருந்தும் சுத்தம் செய்ய வேண்டும். அந்த பிளாஸ்டிக்கை என்னிடம் கொண்டு வந்தால், ஒரு கிலோ பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதிலாக ஒரு கிலோ அரிசி கொடுப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த திட்டமானது ரோஜாவின் பிறந்த நாளான நவம்பர் 17 ஆம் தேதி முதல் ஆரம்பிக்கும் என்றும், பின்னர் இது ஆந்திரா முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பிறந்த நாளான டிசம்பர் 21 ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தனது பிறந்த நாள் முதல் முதல்வரின் பிறந்த நாள் வரை சுத்தமான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்திற்காக, "நோ பிளாஸ்டிக் - புதிய நகரம்" என்ற பிரச்சாரம் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளாராம்.