இந்தியாவில் ஐஐடி, ஐஐஎம் போன்ற முன்னணி கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு மட்டும் தான் கோடி ரூபாய் அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற பிம்பத்தை சமீப காலமாகப் பல பட்டதாரிகள் உடைத்து வருகின்றனர்.
இதேவேளையில் கொரோனா தொற்றுக் காலத்தில் கேம்பஸ் இண்டர்வியூ அதிகளவில் நடக்காத காரணத்தால் சந்தையில் திறமையான பட்டதாரிகளுக்கு அதிகப்படியான டிமாண்ட் உள்ளது.
இதற்கு ஏற்றார் போல் பலர் அதிகப்படியான சம்பளத்தில் வேலை வாங்கி வருகின்றனர்.
டாப் 3 நிறுவனம்
கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு பட்டதாரி மாணவர் உலகில் பெரிய டெக் நிறுவனம் எனப் பிரமிக்கும் டாப் 3 நிறுவனத்திலும் ஓரே நேரத்தில் வேலையை வாங்கியது மட்டும் அல்லாமல் தான் படித்த பல்கலைக்கழகத்தில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை வாங்கி இந்திய இளைஞர்கள் மத்தியில் தற்போது செலிப்ரிட்டியாக வலம் வருகிறார்.
கூகுள், அமேசான், பேஸ்புக்
கொல்கத்தா-வை சேர்ந்த ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிசாக் மொண்டல் இதுவரை எந்த ஒரு மாணவரும் செய்திடாத வகையில் ஓரே நேரத்தில் கூகுள், அமேசான், பேஸ்புக் என 3 பெரிய டெக் சேவை நிறுவனத்தில் பணியில் சேர தேர்வாகியுள்ளார்.
1.8 கோடி ரூபாய் சம்பளம்
இதனால் பிசாக் மொண்டல் எந்த நிறுவனத்தில் சேரலாம் என்பதற்குச் சீட்டுக் குலுக்கிப்போட்டுத் தேர்வு செய்யும் நிலை உருவாகியுள்ளது.பிசாக் மொண்டல் தனது எதிர்காலத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு வருடத்திற்கு 1.8 கோடி ரூபாய் சம்பளமும், லண்டனில் முக்கிய நகரத்தில் வேலைவாய்ப்பை அளிக்கும் பேஸ்புக் நிறுவனத்தில் பணியில் சேர முடிவு செய்துள்ளார்.
அனுபவம்
கொரோனா தொற்றுப் பாதிப்பு இருந்த 2 வருடத்தில் பிசாக் மொண்டல் பல நிறுவனத்தில் பகுதி நேரமாகவும், முழுநேரமாகவும் பணியாற்றியும் பெரு நிறுவனங்களில் சேரும் அளவிற்குத் திறமையை வளர்த்துக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இண்டர்வியூவ்
இதேபோல் ஓரே நேரத்தில் கூகுள், பேஸ்புக், அமேசான் ஆகிய 3 நிறுவனத்தின் இண்டர்வியூவில் தேர்வாவது எளிதான காரியமில்லை என்றும் பெருமையாகப் பிசாக் மொண்டல் தெரிவித்துள்ளார். பிசாக் மொண்டல்-ன் தாய் அங்கன்வாடியில் பணியாற்றும் ஊழியர் ஆவார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
பிசாக் மொண்டல்-க்கு முன்பு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த 9 மாணவர்கள் வெளிநாட்டு வேலை உடன் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான சம்பளத்தில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.