உலகளவில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்திக்கு பெரும் தடையாக விளங்கும் செமிகண்டக்டர் சிப் தட்டுப்பாடு பெரும் சுமையாக இருக்கும் காரணத்தால் இத்துறையில் நிறுவனங்கள் உற்பத்தியை அதிகரிக்க அதிகப்படியான முதலீடுகளையும், முயற்சிகளையும் செய்து வரும் நிலையில், இத்துறைகள் நுழையப் பல புதிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டத் துவங்கியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே டாடா குழுமம் சிப் தயாரிப்பில் இறங்கப் போவதாக அறிவித்து, அதற்கான பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் டாடாவுக்குப் போட்டியாக அனில் அகர்வால்-ம் களத்தில் இறங்கியுள்ளார்.
வேதாந்த நிறுவனம்
வேதாந்த நிறுவனத்தின் தலைவரான அனில் அகர்வால் இந்தியாவில் சிப் மற்றும் கிளாஸ் தயாரிப்புக்காக அடுத்த 3 வருடத்தில் 60,000 கோடி ரூபாய் அளவிலான நிதியை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
செமிகண்டக்டர் சிப்
மத்திய அரசு இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்புக்கான PLI திட்டத்தை அறிவித்துள்ள சில நாட்களில் வேதாந்த நிறுவனம் சிப் தயாரிப்பில் இறங்குவது குறித்தும், 60,000 கோடி ரூபாய் முதலீட்டுத் திட்டம் குறித்தும் அறிவித்துள்ளது.
கூட்டணி நிறுவனம்
வேதாந்த நிறுவனம் இந்த மாபெரும் திட்டத்திற்காகத் தொழில்நுட்ப மற்றும் ஈக்விட்டி கூட்டாளிகளைத் தேடி வருகிறது. மேலும் இந்தத் திட்டத்தைக் கூட்டணியில் முறையில் இயக்க திட்டமிட்டு உள்ளது வேதாந்த குழுமம். இதேவேளையில் இந்தியாவில் சிப் தொழிற்சாலையை உருவாக்கப் பல தென் கொரியா மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
AvanStrate நிறுவனம்
இந்தியாவில் செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் வேதாந்த குழுமம் இறங்க முயற்சி செய்வது இது 2வது முறையாகும். 2017 டிசம்பர் மாதம் வேதாந்த குழுமம் கார்லைல் குரூப் நிறுவனத்திடம் இருந்து AvanStrate என்னும் ஜப்பான் நாட்டு நிறுவனத்தைக் கைப்பற்றியது. AvanStrate என்பது கிளாஸ் சப்ஸ்ட்ரேட் தயாரிக்கும் நிறுவனமாகும்.
சிப் தொழிற்சாலை
வேதாந்த நிறுவனம் AvanStrate நிறுவனத்தின் வாயிலாகத் தான் புதிய கிளாஸ் மற்றும் சிப் தொழிற்சாலையை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இத்தொழிற்சாலைக்காகப் பல மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை இருப்பதாகவும் வேதாந்த தெரிவித்துள்ளது.
60000 கோடி ரூபாய்
இந்தப் பேச்சுவார்த்தை உறுதியாகும் பட்சத்தில் AvanStrate வாயிலாகச் சுமார் 250 முதல் 400 ஏக்கர் பரப்பளவில் சிப் தொழிற்சாலையை 45,000 முதல் 60000 கோடி ரூபாய் முதலீட்டில் இரண்டு கட்டங்களாகக் கட்டமைக்க உள்ளது.
மீண்டும் தமிழ்நாடு.?
இத்தொழிற்சாலையை அமைக்க வேதாந்த ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் தொழிற்சாலை துவங்கும் மாநிலத்திடம் இருந்து மொத்த முதலீட்டுத் திட்டத்தில் இருந்து 10-15 சதவீதம் மானியம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் எனவும் வேதாந்த தெரிவித்துள்ளது.