அனில் அகர்வால் நிறுவனத்திலும், வர்த்தகத்திலும் பல சர்ச்சைகள் இருந்தாலும் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கிறார். மத்திய அரசு அரசு சொத்துக்களை விற்பனை செய்யத் தயாராகும் போது, அரசின் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காகவே பல ஆயிரம் கோடி முதலீட்டை திரட்ட தயாரானார்.
இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சிக்குக் குறிப்பாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிப்புக்கு மிகப்பெரிய தடையாக இருக்கும் ஒரு துறையில் தைவான் நிறுவன கூட்டணி உடன் களத்தில் இறங்குகிறது அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம்.
அனில் அகர்வால்
அனில் அகர்வாலின் வேதாந்தா குழுமம் மற்றும் தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஹான் ஹை டெக்னாலஜி குரூப் இணைந்து இந்தியாவில் செமிகண்டாக்டர் சிப் உற்பத்தி செய்யும் ஒரு கூட்டு நிறுவனத்தை உருவாக்க முடிவு செய்துள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் இன்று இரு தரப்பு நிறுவனங்களும் கையெழுத்திட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
வேதாந்தா குழுமம் - ஹான் ஹை
வேதாந்தா குழுமம் மற்றும் ஹான் ஹை டெக்னாலஜி குரூப் நிறுவனங்கள் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இந்தியாவில் உருவாக்கப்படும் இப்புதிய உற்பத்தி தொழிற்சாலை கொண்ட கூட்டணி நிறுவனத்தில் வேதாந்தா குழுமம் கூடுதல் பங்குகளை வைத்திருக்கும், இக்கூட்டணி நிறுவனத்தில் வேதாந்தா நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் தலைவராக இருப்பார்.
PLI திட்டம்
மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் செமிகண்டாக்டர் உற்பத்தியை மேம்படுத்த இந்தத் துறைக்காக அறிவிக்கப்பட்ட ரூ.76,000 கோடி ரூபாய் மதிப்புள்ள PLI திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்பு, இத்துறையில் அறிவிக்கப்படும் மிகப்பெரிய திட்டமாக உள்ளது. அனில் அகர்வாலின் இந்தக் கூட்டணி நிறுவனம் டாடாவின் OST நிறுவனத்தை விடவும் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செமிகண்டக்டர் சிப் எகோசிஸ்டம்
மத்திய அரசின் 76,000 கோடி ரூபாய் PLI திட்டத்தின் மூலம் செமிகண்டக்டர் சிப் வடிவமைப்பு, பேக்கேஜிங் மற்றும் உற்பத்தி ஆகியவற்றிற்கான ஒரு விரிவான கட்டமைப்பை இந்தியாவில் உருவாக்க முடிவு செய்து அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது மத்திய அரசின் மிகப்பெரிய கனவு திட்டங்களில் ஒன்று, மேலும் மத்திய அரசு டிஎஸ்எம்எஸ், இன்டெல், போன்ற பல முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது.
ரூ.60,000 கோடி
வேதாந்தா குழுமம் டிசம்பர் மாதம் அடுத்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் சிப் மற்றும் கண்ணாடி உற்பத்திக்காகச் சுமார் ரூ.60,000 கோடி வரை முதலீடு செய்யப்போவதாக அறிவித்து இருந்தது. இந்நிலையில் இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி இந்த முதலீட்டால் செமிகண்டாக்டர் உற்பத்தி செய்வதில் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது. இப்புதிய தொழிற்சாலை இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியைப் பெரிய அளவில் அதிகரிக்கும்.