கொரோனா வைரஸால் ஸ்தம்பித்த உலகம் மெல்ல இயங்கத் தொடங்கி இருக்கிறது.
இந்த லாக்டவுன் 4.0-வில் எந்த கடைகள் எல்லாம் திறக்கலாம், திறக்கக் கூடாது, எப்படி செயல்பட வேண்டும் என நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் பல இடங்களில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. எனவே பலரும் தங்கள் வீடுகளில், தங்கள் கைகளாலேயே முடியை வெட்டிக் கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.
முதல் முறை
இதுவரை முக சவரம் செய்வது, லைட்டாக வளர்ந்த தாடியை ட்ரிம் செய்வதற்கு கூட, சலூனுக்குச் சென்று 50 ரூபாய் கொடுத்து செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம், இப்போது தங்கள் முடியை தாங்களே வெட்டிக் கொள்ளும் சூழலுக்குத் தள்ளி இருக்கிறது இந்த கொடூர கொரோனா வைரஸ்.
வீடே சலூன்
கைவசம் இருக்கும் ட்ரிம்மர், கத்திரிகளை வைத்து, வந்த வரை சிறப்பாக முடியை வெட்டிக் கொண்டு சமூக வலைதளங்களில் எல்லாம் பகிரத் தொடங்கிவிட்டார்கள். இதெல்லாம் ஏதோ நடுத்தர குடும்பம் மற்றும் சம்பளம் வாங்கும் குடும்பங்களுக்குத் தான் பொருந்தும் என நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அம்பானி குடும்பம்
ஆனால் அனில் அம்பானி குடும்பமே, கையில் கத்திரிக் கோளுடன், முடியை ஒருவருக்கு ஒருவர் வெட்டிக் கொள்ள கிளம்பிவிட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கணவர் & இரு மகன்கள் ஒருவருக்கு ஒருவர் முடிவெட்டிக் கொள்வதைப் பதிவு செய்து இருக்கிறார்.
பதிவு
அந்த பதிவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்:
"உலகமே சிரமத்தில் இருக்கும் இந்த நேரத்தில், எப்போதும் இல்லாத அளவுக்கு, குடும்பத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டோம். அன்புக்குரியவர்களை பிடித்துக் கொள்ளுங்கள். ஒன்றாக இருக்கும் நேரத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்..." என பதிவு செய்து இருக்கிறார் டினா அம்பானி.
நெட்டிசன்கள்
அந்த பதிவுக்கு நெட்டிசன்கள், தங்கள் கமெண்ட்களையும், எமோஜிக்களையும் அள்ளி இரைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அனில் அம்பானியின் மனைவி டீனா அம்பானியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் சரசரவென டிரெண்டாகிக் கொண்டு இருக்கிறது. இன்னும் இந்த கொரோனா நம்மை என்ன எல்லாம் செய்ய வைக்கப் போகிறதோ தெரியவில்லை.