இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருந்த அனில் அம்பானி தற்போதும் 0 டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார், நிறுவன வர்த்தகத்திற்காக வாங்கிய கடன்களைச் சரியான நேரத்தில் செலுத்த முடியாத காரணத்தாலும், தொடர்ந்து வர்த்தகச் சரிவு காரணமாக அனில் அம்பானி வர்த்தகச் சாம்ராஜ்ஜியம் வீழ்ந்துள்ளது.
இந்நிலையில் அனில் அம்பானி தற்போது தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டு உள்ளார்.
அனில் அம்பானி
இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்டுள்ள உத்தரவின்படி அனில் அம்பானி பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்தொரு நிறுவனத்தின் பதவிகளிலும் இருக்கக் கூடாது. இந்த உத்தரவை ரிலையன்ஸ் ADA குரூப் நிர்வாகம் செயல்படுத்தியாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
ரிலையன்ஸ் குரூப்
இதன் மூலம் ரிலையன்ஸ் குரூப் நிர்வாகத் தலைவரான அனில் அம்பானி, தனது ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இவ்விரு நிறுவனங்களிலும் அனில் அம்பானி non-executive director ஆக இருந்தார்.
ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ்
பிப்ரவரி மாதம் செபி அமைப்பு ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து முறையற்ற வகையில் பணத்தை வெளியேற்றியுள்ளதாகக் கூறி செபி ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் லிமிடெட், அனில் அம்பானி மற்றும் 3 ரிலையன்ஸ் குரூப் ஊழியர்களான அமித் பாப்னா, பிங்கேஷ் ஆர் ஷா மற்றும் ரவீந்திர சுதால்கர் ஆகியோர் பங்குச் சந்தையைச் சார்ந்த எவ்விதமான நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது எனத் தடை விதித்தது.
ராகுல் சாரின்
இதற்கிடையில் ரிலையன்ஸ் பவர் மற்றும் ரிலையன்ஸ் இன்பராஸ்டக்சர் நிறுவனத்தில் கூடுதல் டைர்க்டர் பதவியில் ராகுல் சாரின் நியமிக்கப்பட்டு உள்ளதாக, செபியிடம் ரிலையன்ஸ் குரூப் தனித்தனி அறிக்கையில் அனில் அம்பானியின் ராஜினாமாவையும், ராகுல் நியமனத்தையும் தெரிவித்துள்ளது.
பங்கு விலை
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் ரிலையன்ஸ் இன்பரா பங்குகள் 0.091 சதவீதம் உயர்ந்து 109.80 ரூபாயாகவும், இதேபோல் ரிலையன்ஸ் பவர் பங்குகள் 0.38 சதவீதம் உயர்ந்து 13.05 ரூபாயாகவும் உள்ளது.