அண்ணன் அம்பானி ஆசியாவின் நம்பர் 1 பணக்காரராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். தம்பி அம்பானி பணக்காரர்கள் பட்டியலில் கூட இடம் பெற முடியாத அளவுக்கு பின்னோக்கிச் சென்று கொண்டே இருக்கிறார்.
அண்ணன் கச்சா எண்ணெய் கம்பெனியாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸை வைத்து, ஜியோ வியாபாரம் தொடங்கி செழிப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
தம்பிக்கோ அன்றாட வாழ்க்கையே போராட்டம் என்பது போல, திரும்பும் பக்கம் எல்லாம் இடி மேல் இடி விழுந்து கொண்டு இருக்கிறது.
ஏ டி ஏ ஜி
அனில் அம்பானியின் நிறுவனங்களை எல்லாம் அனில் திருபாய் அம்பானி குழுமம் (ADAG - Anil dhirubai Ambani Group) என்று சொல்வார்கள். இந்த குழுமத்தில் இருக்கும் பெரும்பாலான கம்பெனிகள் தொடர்ந்து அடி வாங்கிக் கொண்டே இருக்கிறது. இந்த குழும நிறுவனங்கள் அனில் அம்பானிக்குச் சொந்தமானது.
ஆர் காம்
இந்திய டெலிகாம் துறையில், அண்ணன் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தனிப் பெரும்பான்மை உடன் கலக்கிக் கொண்டு இருக்கிறது என்றால், மறு பக்கம், அதே இந்திய டெலிகாம் துறையில் இருந்து, தன் வியாபாரத்தை நிறுத்தி கொண்டது தம்பி அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.
ஏகப்பட்ட கடன்
இவர் நடத்தும் ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் நவால் அண்ட் இன்ஜினியரிங், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் என பல நிறுவனங்களும் பயங்கரமான கடனில் தான் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. இதை எல்லாம் எப்படி சரி செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.
அண்ணன் உதவி
அவ்வளவு ஏன்..? கடந்த பிப்ரவரி 20, 2019 அன்று, அடுத்த நான்கு வார காலத்துக்குள் எரிக்ஸன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய பணத்தைச் செலுத்த வேண்டும் அல்லது 3 மாதம் சிறை தண்டனை எதிர் கொள்ள வேண்டி இருக்கும் என உச்ச நீதிமன்ற கெடு விதித்தது. இந்த சூழலில் அண்ணன் முகேஷ் அம்பானி 458.77 கோடி ரூபாயை தம்பிக்கு கொடுத்து உதவினார். மயிரிழையில் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பினார் தம்பி.
கொடுமை
இப்போது வரை, தம்பி அனில் அம்பானியின் சூழ்நிலை சரியானதாகத் தெரியவில்லை. தொடர்ந்து புதுப் புது பிரச்னைகள் வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது புதிதாக, ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்றான விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் லிமிடெட் நிறுவனம் தற்போது கடன் சிக்கலில் தவித்துக் கொண்டு இருக்கிறதாம்.
ஆக்ஸிஸ் வங்கி
இந்த விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கியிடம் இருந்து கடன் வாங்கி இருக்கிறார்கள். கொடுத்த கடன் தொகை + கடனுக்கான வட்டி என எல்லாம் சேர்த்து 553.28 கோடி ரூபாயைத் வசூலிக்க CIRP (Corporate Insolvency Resolution Process)-க்கு விண்ணப்பித்து இருக்கிறதாம் ஆக்சிஸ் வங்கி.
பேசித் தீத்துக்கலாம்
ஆனால் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் தரப்போ "ரிலையன்ஸ் பவர் நிறுவனம், கடன் வாங்கி இருக்கும் அனைத்து வங்கிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த, ஒரு சரியான தீர்வைக் கொண்டு வரும் வேலையில் ஈடுபட்டு இருக்கிறோம்" எனச் சொல்லி இருக்கிறார்கள். இன்று ஆக்ஸிஸ் தங்கள் கடனை வசூலிக்கத் தொடங்கிவிட்டார்கள், நாளை மற்ற வங்கிகளும் தங்களை கடனை வசூலிக்கும் வேலையில் இறங்கலாம்.